குயில் கூவும் நகரம்

_தர்மினி_
ந்த வயோதிபப் பெண் சில மாதங்களின் முன் இலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தார். பிள்ளைகள் எல்லோரும் அகதிகளாக வந்த பின் அவர் தனித்திருக்க முடியாமல் இலண்டனுக்கு வந்து வாழ்பவர்.இப்போது நாட்டில் சண்டையில்லை. போக்குவரத்துப் பாதை பிரச்சனையில்லை.பலரும் விடுமுறைக் காலங்களைக் கழித்துவிட்டு வருகிறார்கள்.ஊரையும் வீட்டையும் சகோதரிகளையும் பார்த்துவிட்டு வருவது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு அந்த மனிசி பல ஆண்டுகளிற்குப் பிறகு வந்திறங்கினார் யாழ்ப்பாணம்.

‘லண்டனிலை பூட்டின சூட்கேஸை யாழ்ப்பாணத்தில அக்கா வீட்டில போய்த்தான் திறந்தனான்’ என அதை ஒரு ஆச்சரியமாக நினைத்தார்.முன்னரெல்லாம் கொண்டு போற பொருட்களைக் கொட்டிக் கவிழ்த்து அடுக்கிக் கொண்டு போவதே பெருந் துன்பமென்பார்கள்.

சென்ற ஒரு வருடத்திற்கு முன்னர் 25 வருடங்கள் கடந்து யாழ் போய்வந்த நண்பரிடம் ‘நாடு எப்பிடியிருக்கு?’ எனக் கேட்ட போது சேவல் கூவுகிறது.பொழுது விடிகிறது.சூரியன் சுடுகிறது.குயில்கள் பாடுகின்றன. நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகமென்றார்.குயில் கூவாத காரணத்தால் சனங்களெல்லாம் அகதியாக வெளிக்கிட்டது போல கதைத்தார்.உறவுகளின் விருந்தோம்பல் , ஊருலாத்தல், ஓய்வு என அனுபவித்து , கடன்பட்டுக் கொண்டு போன காசைக் கவலையில்லாமல் செலவழித்தார்.

‘அங்க சுப்பர் மார்க்கட்டில் எல்லாம் வாங்கலாம்’.ஒரு முற்றுப் புள்ளியிடுவார்கள்.முன்னொரு காலத்தில் சுப்பர் மார்க்கட் இல்லாததால் புலம்பெயர்ந்த ஆட்களாயிருக்கலாமோ?

அதே நகருக்கு சென்று வந்த மற்றுமொரு நபர் சொன்னார்-ஒரு கிலோ மா கொடுத்தால் நாள் முழுதும் வெய்யிலில் நின்று புல்லுச் செருக்க ஆட்கள் வருவார்கள்.

இப்படித்தான் கிளிநொச்சி பற்றியும் அண்மையில் படித்த இருவேறு கட்டுரைகளும் அவரவர் கண்கள் எதைப்பார்க்கின்றன என யோசிக்கச் செய்தன.

தான் சந்தித்த பெண்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதாக சொல்வதாக ஒருவர் எழுதியிருக்கிறார்.குற்றவுணர்வுடன் இராணுவத்தினர் தாம் செய்த அழிவுகளிற்கான பொறுப்புணர்ந்து வீடுகள் கட்டித் தருகிறார்களாம்.மகிழ்ச்சி.
ஆம் ,அவர்களுக்கு இடப்படும் கட்டளைகளுக்கேற்ப செயற்படுபவர்கள்.அவர்களுக்கு இடப்படும் கட்டளைகள் நீதியுடையவையாயிருப்பதாக.சமாதானத்தின் ஆவி இறங்கட்டும்.

அதைப் படித்த மூன்றாம் நாளே மற்றுமொரு கட்டுரை படித்தேன்.அதே கிளிநொச்சியில் பெண்கள் படும் துன்பங்கள்.யுத்தத்தின் தீராத சோகங்கள்.ஆம், அவர் பார்த்த பெண்கள் வேறு நபர்கள்.ஒவ்வாருவரும் ஒவ்வோர் விதமாக சொல்வது போலிருக்கிறது. எதை வலியுறுத்த விரும்புகிறார்களோ அதை மட்டும் அவர்கள் பார்க்கிறார்கள்.

ஒரு மாதம் தங்கியிருந்து விட்டுத் திரும்பியிருந்த அம்முதியவருடன் தொலைபேசியில் பேசினேன்.”அதையேன் பிள்ளை கேட்கிறாய்? லண்டனுக்கு வந்தாப் பிறகு தானே நிம்மதியாக நித்திரை கொண்டனான்” என்றார்.

அவர் தங்கியிருந்த காலம் கிறீஸ் மனிதர்கள் உலாவிய காலம்.ஆள் மாற்றி ஆள் ரோச்லைற்றை அடித்துப் பார்த்துப் பார்த்து இரவுகளில் கண்முழித்துக் காவலிருப்பார்களாம்.பெண்களைக் காயப்படுத்துவது,வீட்டுக்குள் புகுந்து ஒழித்திருந்து விட்டு ஓடுவது போன்றவற்றைப் பற்றிப் பரவலாகச் செய்திகள் வெளியாகியது தெரியும். மக்களும் ஒன்று பட்டு துணிந்து எதிர்த்ததை அறிந்தோம்.இவர்களது ஊரில் இரவில் வீடுகளில் ஓடு பிரித்து நித்திரையிருப்பவர்கள் மீது கல்லெறிந்ததும் நடந்ததன.பேய்கள் பல விதம்.

ஏறத்தாழ பதினைந்து வருடங்களுக்கு மேலாகப் பாதுகாப்புக்காக நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அந்நேரங்களிலெல்லாம் தம் எசமானர்களின் கட்டளைகளுக்கேற்பத் தம் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

கடைசியாக,- சேவல் கூவுது.சூரியன் உதிக்குது -போன்ற காலைக்காட்சிகள், கடற்கரைக் காட்சிகள் பற்றி நான் கேட்டதற்கு, இப்படிச் சொன்னார்.” சேவல் கூவியென்ன முழிப்பு? நான் ஒரு கண்ணுறங்கயில்லை. நாசமாப் போவாங்களின்ர நாட்டுக்கு இனி நான் போகமாட்டன்”.

நன்றி  http://www.vallinam.com.my

இதழ்: 37
ஜனவரி 2012

அழிந்த கனவு

 

 

 

 

நினைவிலிருந்து அழிந்த கனவொன்றை
காண விரும்புகிறேன்.

துக்க நாளொன்றில்
கசங்கிய இமைகளோடு நானிருக்க
என் வாழ்வின் நீள் இரவொன்று துரத்தி வந்தது.

களைத்த கால்களை
தனித்த கரங்களைத் தன்னிருளின் விரல்களால் அளைந்தது.
மனசின் குருதிக் கறைகளைத் துடைத்தது.

அமைதியாக உறங்கினேன்
கனவுகளால் தூக்கிச் செல்லப்பட்ட  உடல்
தரையெங்கும் தன் சிறகுகளை உதிர்த்தது.

நீள் கனவு
அறுந்த இரவின் மிச்சத்தில்
ஒட்டிக் கிடந்தன  சின்னக் கதைகள்.

நினைத்து நினைத்து
ஒரு நாள் அது முடிந்து போக                                                           என் கனவும் மறைந்து சென்றது.

நினைவிலிருந்து அழிந்த கனவை விரும்புகிறேன்.

தர்மினி

சுமதி ரூபனின் உறையும் பனிப்பெண்கள்

-தர்மினி-

       கனடாவில் வசிக்கும் சுமதி ரூபன் குறும்பட இயக்குனர், நாடகநெறியாளர், நடிகை மற்றும் எழுத்தாளர் எனப் பன்முகங் கொண்டவர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி’. கடந்த ஆண்டில் வெளியாகிய இரண்டாவது தொகுப்பு ‘ உறையும் பனிப்பெண்கள்’. இதில் பன்னிரண்டு கதைகள் அடங்கியுள்ளன.

புலம்பெயர்ந்தவர்கள் தாம் அந்நியராக உணரும் வாழ்வுகள் , ஏக்கங்கள், ஞாபகங்கள், குற்றவுணர்வுகள்,போலித்தனங்கள், இயந்திரத்தனங்கள் என பலவற்றை அனுபவங்களை அறிந்தவற்றை  படைப்புகளாக்குகின்றனர்.சில நேரத்தில் அந்த இயங்குநிலை ஓய்ந்தது போன்று தோன்றும். புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பொன்றைப் படிக்கும் போது நாம் உயிர்ப்புடன் இருப்பதாக மீண்டும் நம்பிக்கை ஏற்படுகிறது.சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுப்பும் அதைத் தருகிறது.

             பொதுவாகவே பெண்களின் எழுத்துகள் என்று ஆண்களால் இரகசியமாகவும் சிலவேளைகளில் பகிரங்கமாகவும்  புறந்தள்ளப்படுகின்றன.அந்த எழுத்துகள் சொல்வதென்ன என்பதை விளங்கிக் கொள்ள முன்னர்,அந்த எழுத்தாளர் ஒரு பெண்ணாயிருப்பின் ஆண்கள் அப்படைப்பைப் பார்க்கும் விதமே வேறாகிவிடுகின்றது. ஒன்றுக்கும் உதவாதது என ஒதுக்கிவிடப்படும்.அவர்களிடம் அவை பற்றிய முன் முடிவுகள் இருக்கின்றன. இலக்கிய ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள் புறந்தள்ளியும் அலட்சியப்படுத்தியும் தமக்குள் குசுகுசுப்பார்கள்.பெண்களின் எழுத்து என ஒதுக்குதலும் அதையே நாம் பெண்மொழி எனப் பெருமையாகப் பேசுதலும் இங்கு வேறுவேறானவை.

எழுத்தைப் பெண்மொழி எனப்பிரித்துப் பார்ப்பதில் உடன்படாத பெண்களும் உண்டு. சமூகத்தில் நாம் ஒடுக்கப்படும் பாலினமாக இருக்கும் வரை எமது பிரச்சைனைகளைப் பேச பிரித்துப் பார்க்க வேண்டுமென்பதே என் கருத்து. எழுத்தாளர் எனும் பொதுவகையில் பேசுவோமாயின் காலகாலமாக பெண்களை வீட்டில் இருத்தி விட்டு அனைத்திலும் முன்நகர்ந்த ஆண்களுடன் பொதுமைப்படுத்தப்படும்.நாம் போராடிப் பெற்றவை சிறிதே. இன்னும் செல்லும் தூரம் அதிகமுண்டு.சமூகத்திலும் குடும்பத்திலும் ஆண்களுக்குக் கிடைக்கும் சலுகைகளைக் கொண்டு படைப்புகளைச் செய்கின்றனர். சமூகத்துடனும் குடும்பச் சுமைகளுடனும் போராடித் தம் படைப்புகளைச் செய்யும் பெண்களுடைய படைப்புகளை வேறுபடுத்தி பெண்மொழி எனச் சொல்வதில்,பெண்களின் தனித்தன்மையை,திறமையை வேறாக்கி மதிப்பிடுதலில் தவறில்லை என்பது என் அபிப்பிராயம். உணர்வுகள்,பிரச்சனைகள் வேறானவை.அவற்றை ஆண்களும் பெண்களும் உணரும் விதமும் வெவ்வேறு விதங்களில் தான்.பெண்களது பல விடயங்களையும் நுணுக்கமாக வெளிப்படுத்துவதும் பெண்களாலே இயலும். நமது கதைகள் வித்தியாசமானவை. அவை சொல்லும் அர்த்தங்கள் வேறு.

                    சுமதிரூபனின் கதைகளிலும் தனித்தன்மைகளும நுட்பங்களும் நிறைந்துள்ளன.புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம் தன்னகத்தே கொண்டுள்ள பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிப் பன்னிரு கதைகளும் பேசுகின்றன.படிக்கச் சோர்வேற்படுத்தாத கதைகள்.சுவாரசியமான வசனங்களும் சம்பவங்களும் கொண்டு  சொல்லப்படுகின்றன. இலகுவாகக் கதைகளினுள் நம்மால் நுழைந்து கொள்ள முடிகிறது. அவர் ஒரு குறும்பட இயக்குனராகத் திறமையாகச் செயற்படுவது கதைகளிலும் மிளிர்கின்றது.சுமதிரூபன் காட்சிகளை விபரிக்கும் போது கச்சிதமாக அழகாக அமைகின்றன.சுவாரசியமாகவும் செறிவுடனும் படைக்கப்பட்ட பாத்திரங்கள்.அவர்களின் மனப் போராட்டங்கள். மூடி மறைக்கும் மனித மனசின் மறைவுகளைச் சற்றும் தயக்கமின்றி நம் முன் வைக்கிறார்.கேள்விகளை எழச் செய்கிறர்.

அமானுஷ்ய சாட்சியங்கள்,40 பிளஸ்,ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி, நஷ்டஈடு, சூட் வாங்கப் போறன் ஆகிய கதைகளில் ஆண்களின் போலித்தனங்களும் மனப் போராட்டங்களுமாகவும் சொல்லப்படுகின்றன. அமானுஷ்ய சாட்சியங்கள் ,பெண்கள் நான் கணிக்கின்றேன்,உறையும் பனிப் பெண்,இருள்களால் ஆன கதவு,மூளி,எனக்கும் ஒரு வரம் கொடு ஆகிய சிறுகதைகளில் பெண்களின் வெப்புசாரங்களும் சொல்லாத் துயர்களும் பரவிக் கிடக்கின்றன.

மூளி , எனக்கும் ஒரு வரம் கொடு…கதைகள் சாமத்தியச்சடங்கு, பிள்ளைப் பேறு , கோயிலில் பார்ப்பனக் குருக்களுக்குப் பணிவிடை செய்தல் பற்றிப் பேசிய போதும் , நம் சமூகம் புலம்பெயர்ந்தும் கொண்டு செல்லும் மூடத்தனங்களையே சாடுகின்றன.அவை பெண்களை ஒதுக்கி வைப்பதும் தாழ்வுணர்ச்சி கொள்ளச் செய்வதுமாகத் துன்புறுத்துகின்றன.

பெண்கள் நான் கணிக்கின்றேன்- என்ற கதையின் உரையாடல்களில் ஏன் கல்யாணஞ் செய்யாமல் வாழ்கிறாய் எனக் கேட்டுக்கொண்டிருக்கும் தோழியைப் பார்த்து அப் பெண இவ்வாறு கேட்கிறாள்’ஏன் கல்யாணம் கட்டினனீ?பிள்ளைகளைப் பெத்தனீ?எண்டு நான் உன்னட்ட எப்பவாவது கேட்டனானா? என்பது இச்சமூகத்தை நோக்கிக் கேட்கும் கேள்விகள்.திரும்பத் திரும்ப குடும்பம் ,குழந்தைகள் என்ற கட்டுகளைப் போட்டு இப்படி வாழ்வதுதான் பிறப்பின் அர்த்தம் என்று சொல்லித் தானே வளர்க்கப்படுகின்றோம்.

முற்றிலும் வேறான காலநிலைகள், கலாச்சாரங்கள்,மொழிகள், மனிதர்கள், சட்டதிட்டங்கள்,அகதிஅந்தஸ்து கோருதல்,வேலைகள் என அகதிகளாகிக் குடியேறிய நாடுகளில் புலம்பெயர்ந்த இச்சனங்களின் பிரச்சனைகளோ பல. அவற்றை எதிர் கொள்ளும் குடும்பங்களில் ஏற்படும் உரசல்களும் உளப்பிரச்சனைகளும் இன்னும் பல. இவற்றை நுண்மையாக இக்கதைகள் சொல்கின்றன.அவை பற்றித் தொடர்ந்தும் யோசிக்க வைக்கின்றன.ஏனெனில் இவை எதுவும் பொய்யாகவோ புனைவாகவோ இருப்பதாய் நினைக்கத் தோன்றவில்லை.நாளாந்தம் இவ்விதமான மனிதர்களைச் சந்திக்கின்றோம்.ஏன் நம்மிடம் கூட அவர்களைக் காணலாம்.

கருப்புப்பிரதிகள் வெளியீடாகிய இத்தொகுப்புப் பற்றி நீலகண்டன் “எந்த முன்முடிவுகளும், பாசாங்குகளுமின்றி வாழ்வின் மீதும், இருப்புசார் சூழலின் மீதும் கேள்விகளை எழுப்பிச் செல்லும் இச்சிறுகதைகள் மனதைத் தொடும் நுண்அலகுகளால் நெய்யப்பட்டிருக்கின்றன” என்கிறார்.

உறையும் பனிப் பெண்கள்
முதற்பதிப்பு : செப்டம்பர் 2010
வெளியீடு : கருப்புப்பிரதிகள்
செல்பேசி : 009444272500

நன்றி:வல்லினம் நவம்பர் 2011

1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி

ந்த நாட்களை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. என் பாட்டியின் வீட்டிற்கு எப்போதாவது பின்னேரங்களில் சென்று வருவேன்.அப்படித்தான் அந்த 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் திகதியும்  கொழும்புத்துறையில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து வரச் சென்றேன்.ஆமி முன்னேறி வருவதாகச் சொல்லப்பட்டது.அப்போதெல்லாம் அந்தப் பக்கம் விமானம் குண்டு போட்டுவிட்டுப் போனால் இந்தப் பக்கத்து ஒழுங்கையால் ஓடிப் போய் என்ன நடந்தது என்று பார்க்குமளவு யுத்தமும் சத்தமும் எனக்குப் பழகிப் போயிருந்தது. மேலே எது வட்டமிட்டுக் கொண்டிருந்தாலும் அது பற்றிக் கவலையின்றிக் கீழே றோட்டில் சைக்கிளில் நானும் சுற்றிக் கொண்டிருப்பேன். ஆனால் இப்போது அந்த நிச்சயமற்ற நாட்களில் வாழ்ந்ததை நினைத்துப் பார்க்க பயமாக இருக்கிறது.வேறு வழியில்லை வருவது வரட்டும் என்ற துணிச்சலில்லை.என் போன்ற சனங்களுக்கு அதை எதிர் கொண்டு வாழ்வது தவிர வேறு வழியிருக்கவில்லை.

சில நாட்களாக ஒரே ஷெல்லடிச் சத்தமும் வானிலிருந்து குண்டுகள் விழும் சத்தங்களும் தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்தன.இனி மேல் ஷெல்லடி அறம்புறமாக இருக்கப் போகுதெனச் சனங்கள் கதைத்துக் கொண்டனர்.ஆகவே தனியாக இருக்கும் பாட்டியைப் பார்த்து விட்டு வரலாமென்று சென்றேன்.சில நிமிடங்களில் உறவினரான நிமலராஜனும் அங்கு வந்தார்.அவர் அப்போது ஈழநாதம் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார்.அவர் வந்த படியால் ஏதாவது முக்கிய நியூஸ் இருக்குமென எதிர்பார்த்தோம். அவரும் அவசரஅவசரமாகத் தான் வந்ததாகவும் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நீங்களும் ஏதாவது வழியைப் பாருங்கள் என்றார். ‘ஈழநாதத்தில் இருந்த அச்சு இயந்திரங்கள் ஏற்கனவே கிளிநொச்சிக்கு ஏற்றிச் செல்லப்பட்டுவிட்டன’ என்ற போது தான் அதை உண்மை என நம்பினோம். தீவுப்பகுதி முக்கியமற்ற பிரதேசமென்று கைவிட்டதாகச் சொன்னவர்கள். யாழ்ப்பாணத்தையும் கை விட்டுச் செல்வார்கள் என என்னால் நம்ப முடியாமல் இருந்தது.யாழ் மக்களும் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்வதை நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.

உடனடியாக இதை என் பெற்றோருக்குச் சொல்ல வேண்டுமெனப் புறப்பட்டேன். வழியில் பாண்டியன்தாழ்விலிருந்த அன்ரன்பாலசிங்கத்தின் காம்பில் ஏதும் அசுமாத்தம் தெரிகிறதா? என சைக்கிளிலிருந்து எழும்பி நின்று பார்த்தேன்.அப்படி எட்டிப்பார்த்தும் தெரியாதளவு உயரத்தில் அஸ்பெஸ்டாஸ் சீற்றுகளால் மிக உயரமாக வளவு அடைக்கப்பட்டிருந்தது.அதிகாலைகளில் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் நாய்க்குட்டியுடனும் பாதுகாவலர்களுடனும் வெளியே வருவதைப் பார்த்திருக்கிறேன்.ஆதலால் அங்கே அவர்கள் வசிப்பதாக நம்பினேன்.

வீதிகளில் மக்கள் பொருட்களைச் சைக்கிள்களில் வைத்துக் கட்டியபடி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கூட்டங்கூட்டமாகப் போகிறார்கள்.குழந்தைகளும் வயோதிபர்களும் அந்த இருட்டில் நடக்கிறார்கள்.நான் வேகமாக வீட்டுக்குள் போன போது அப்பா என்னைத் திட்டினார். ‘ஊர்ச்சனமெல்லாம் ஓடுதுகள் நீயெங்க உலாத்திப் போட்டுவாறாய? உடனடியாகச் சாப்பிட்டுப் போட்டு வா நாங்களும் எங்கையாவது போவம்’என்றார்.அம்மா சாறி உடுத்தி மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார். சில மணிநேரங்களில் எல்லாமே மாறிப்போயிருந்தது. -இன்றிரவு நாவற்குழிப்பாலம் உடைக்கப்படும்.அதற்கு முன்னர் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.-என்ற அறிவிப்பு வீதியில் செய்யப்பட்டதாகச் சொன்னார்கள்.

இருள்.மழை தூறிக் கொண்டிருந்தது.சனங்கள் இரவுக்கிடையில் நாவற்குழிப் பாலத்தைத் தாண்டிவிட வேண்டுமென்று ஓடிக்கொண்டிருந்தார்கள்.நாங்களும் அந்த மக்கள் திரளில் சைக்கிள்களைத் தள்ளியபடி சென்றோம்.ஆனால் அரியாலை மாம்பழம்சந்தியை விட்டு ஒரடி எடுத்து வைக்க முடியவில்லை. சனக்கூட்டம்.வாகன நெரிசல்.

அப்போது பொதுமக்ளிடமிருந்ததெல்லாம் சைக்கிள் மட்டும் தான்.பெற்றோல், டீசல் கிடைக்காது. இயக்கமும் பாதிரியார்களும் தான் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பார்கள்.அப்போது வாகனங்கள் இயக்கத்திடம் மட்டுமே இருந்தன.அவர்கள் தமது பொருட்களையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு விரைகிறார்கள்.மழை கொட்டத் தொடங்கியது.தண்ணீர் கேட்டு அழுத குழந்தைகளுக்கு குடையில் மழை நீரை ஏந்திக் குடிக்கக் கொடுத்தனர்.500 000க்கு மேற்பட்ட மக்கள்  உள்ள ஒரேயொரு வீதியால் ஓரிரவில் எப்படி வெளியேறுவது?ஐந்து வருடங்களுக்கு முன்னர் இதே ஐப்பசி30 இல் தான் முஸ்லிம் சனங்களும் மழை பெய்து கொண்டிருக்க அழுதுகொண்டு போனார்கள். அந்தப் பழிபாவம் தான் எங்களைத் துரத்துகிறது என்று சிலர் கதைத்தனர். நாங்களும் இன்னும் சிலரும் திரும்பிச் சென்று ஏதாவது பாதுகாப்பான பொது இடத்தில் இருப்பதென முடிவெடுத்தோம்

ஆயர் இல்லத்தில் யாழ்ப்பாண பிஷப் இருக்கிறார்.நாங்கள் மறைக்கல்வி நிலையத்தில் தங்கப் போவோம் என்று சொன்னவர்களுடன் சேர்ந்து கொண்டோம்.ஏற்கனவே அங்கும் மக்கள் கூடியிருந்தனர்.  இடம்பிடித்து நித்திரை செய்தோம்.இடையிடையே ஷெல் சத்தங்கள் கேட்டன.விடிந்ததும், ஆமிநடமாட்டம் இருக்குமோ இரவில் வந்து விட்டிருப்பார்களோ என்று யோசித்துத் தான் அவரவர் வீடுகளுக்குச் சமைக்கச் சென்றோம்.இயக்கம் பின்வாங்குகிறோம் என்று அந்தப் பிரதேசத்தை விட்டு விட்டுப் போனால் இராணுவமும் விடியற்காலையில் சத்தம் போடாமல் வந்து படலையில் நிற்கும் என்பது என் அல்லைப்பிட்டி அனுபவம்.

இப்படியாக மூன்று நாட்களானது. 30 ஆம் திகதி இரவென்று சொன்னதைப் போல நாவற்குழிப் பாலம் இன்னும் உடைபடவில்லை.ஆனால் நெரிசலால் வயோதிபர்கள் ,குழந்தைகள் இறந்தனர்.சிறுவர்கள் பலர் காணாமல் போயிருந்தனர். இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது அந்த இரவு போடப்பட்ட குண்டுகளாலும் பலர் காயமடைந்தனர் , இறந்தனர்.மக்கள் பெரும்அல்லோகலப்பட்டதாகவும் அறிந்தோம்.ஆகவே சற்று கூட்டம் குறைந்ததும் வெளியேறலாம் என முடிவெடுத்திருந்தோம். சமைக்கவோ சாப்பிடவோ இயலாதளவு தொடர்ந்து ஷெல்லடி.

தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாதவர்களை, ‘எமது அறிவித்தலை மீறி எவராவது யாழ்ப்பாணத்தில் தங்கினால் அவர்கள் இராணுவத்தின் உளவாளிகளாகக் கருதப்படுவர் ‘ என இயக்கம்  சொன்னது.ஆவேசத்துடன் முன்னேறிவரும் இராணுவத்தை எதிர் கொள்வதன் ஆபத்தையும் நாமறிவோம்.வேறு எங்கும் போக மாட்டோம் என அடம்பிடித்தாலும் ஆமிக்கு உளவாளி என எமக்கு எதுவம் நடக்குமெனவும் எமக்குத் தெரியும்.ஆகவே சற்றுச் சனக்கூட்டம் வீதியில் குறைத்திருக்கக் கூடுமென்ற நம்பிக்கையில் நாங்களும் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்பட்டோம்.

இடம்பெயரத் தொடங்கி ,மூன்று நாட்களாகிய போதும் மக்கள் அடிமேல் அடி வைத்தே நகர்ந்து கொண்டிருந்தனர்.நாங்களும் சைக்கிள்களில் கொஞ்சம் உடுப்புகள், பாத்திரங்கள் ,சமையற் பொருட்களென்று வைத்து உருட்டிக் கொண்டு போனோம்.மத்தியானம் நடக்கத் தொடங்கி இரவில் சாவகச்சேரியை அடைந்தோம். பள்ளிக்கூடங்கள் ,பொதுக்கட்டடங்கள் அனைத்தும் ஏற்கனவே யாழ்ப்பாண அகதிகளால் நிரம்பியிருந்தன. சாவகச்சேரியில் உறவினர்கள், நண்பர்கள் எவருமில்லை.எவர் வீட்டுக்கும் போக முடியாது. சூசையப்பர்  மரியாளுடன்  குளிர்கால இரவில் தங்க இடம் தேடி அலைந்ததையொத்த காட்சிகளுக்கு அங்கே பஞ்மிருக்கவில்லை. கடைகளில் பிஸ்கட் கூட பல மடங்கு விலை.பிளேன் ரீ வாங்கிக் குடித்துவிட்டு நாள் முழுவதும் நடந்த களைப்பும், இனி என்ன? என்ற மனச்சோர்வுமாகப் படுக்க இடம் தேடினோம். கடைசியாக ஒரு சங்கக்கடை வாசலில் நித்தரை செய்து கொண்டிருந்த மக்களிடையில் ஒரு இடத்தைக் கேட்டு நித்திரையானோம்.

சூரிய வெளிச்சத்தில் கண் கூச எழும்பிப் பக்கத்திலிருந்த வீட்டுக் கிணறொன்றில் தண்ணீரள்ளி முகம் கழுவினோம்.இருக்க வீடில்லை.எங்கே போவதெனத் தெரியாத நிலை.அடுத்த நேரச் சாப்பாடு எப்படி? எல்லா மக்களின் பிரச்சனையும் இவை. அத்துடன் காணாமல் போன குழந்தைகளைத் தேடும் பெற்றோரின் துயரம்.அதற்கான ஒலிபெருக்கி அறிவிப்புகள் சாவகச்சேரி நகரில் கேட்டுக் கொண்டிருந்தன. நோயாளிகளும் குழந்தைகளும் பெருந் துன்பம் அனுபவித்தனர்.அம்மா ,அப்பாவுடன் றோட்டில் நின்று எங்கே இனிப் போவதென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.மறுபடியும் ஒலிபெருக்கி அறிவிப்பு. சாவகச்சேரியில் சனநெருக்கடி ஏற்பட்டிருப்பதால் மக்கள் வன்னிக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டது. இப்போது வன்னிக்குக் கிளாலி கடல் நீரேரியைக் கடந்து செல்வதைப் பற்றி மக்கள் கதைக்கத் தொடங்கினர். நாங்களும் கிளாலி பயணித்தோம். அங்கும் சோகக் கதைகள்.பல நாட்களாகப் படகுப் பயணத்துகுப் பதிந்து விட்டு கொட்டில்களிலும் தென்னைமரங்களின் கீழும் ஏராளமானோர் காவலிருந்தனர். ஒரு கிழமையாகக் கூட காத்துக் கொண்டிருந்தனர்.கடற்படையின் கண்காணிப்பிலிருந்து தப்பித்து அடுத்த கரையை அடைவது உயிரைப் பணயம் வைத்துத் தான்.அங்கு சாப்பாடுகள் விற்கப்பட்டன. கையில் காசிருந்தால் வாங்கலாம். நாளாந்தம் கூலி வேலைக்குப் போய் உழைப்பவர்கள் என்ன செய்வார்கள்?

படகுகளில் மக்கள் பயணிக்க வானிலிருந்து குண்டுகள் விழுகின்றன. ஷெல்கள் வெடிக்கின்றன. காயங்கள் , மரணங்கள்.ஆனாலும் கிளாலிக்கரையில் எத்தனை நாளிருக்க இயலும்?உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மறுகரை அடைகிறோம்.இரவு அங்குள்ள கொட்டகையில் உறங்கி எழுந்து அடுத்து எங்கே போவதென யோசிக்கிறோம்.கிளிநொச்சியில் தூரத்து உறவினர்கள் இருப்பது ஞாபகத்துக்கு வருகிறது.ஆனாலும் இத்தனை வருடங்களாகப் பழகாமலிருந்து விட்டு எந்த உரிமையில் போவதென தயங்கினாலும், வேறு இடமில்லை.ஒரு நாள் முழுவதுமாக சைக்கிளை உருட்டியும் ஓடியும் மெதுமெதுவாக அவர்களின் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தோம்.அவர்களின் ஆதரவான வரவேற்பு ஆறுதற்படுத்தியது.எங்களைப் போல இடம்பெயர்ந்து வந்து ஏற்கனவே மூன்று குடும்பங்கள் அங்கு தங்கியிருந்தனர். ஆனாலும் சற்றும் சலிப்பின்றி இங்கு தராளமாக இருக்கலாம் என இடமொன்று ஒதுக்கித்தந்தனர். ஒரு இடம் கிடைத்த மகிழ்ச்சி. பல நாட்களாகச் சோறில்லாமல் இருந்த எங்களுக்குக் குத்தரிசிச்சோறும் முயல் இறைச்சிக்குழம்பும் தீராப்பசியைத் தீர்த்தன.அது ஒரு போதும் உண்ணாத மிகச் சுவையான சாப்பாடாக ருசித்தது.

தர்மினி

மண்ணாகி….


நிலந் தொடாமல் மிதந்தேன்

உலர்ந்த மணற் துகளால் உருவானவளாக
மெதுமெதுவாக உடல் பாரமிழக்கிறது
நான் லேசாகி உதிர்கிறேன்

அலைகள் என்னை மோதுகின்றன
யார் அவற்றை எனை நோக்கி வரச் செய்தது?

திரும்பத் திரும்ப வெண்நுரைகளைத் என் தேகத்தில் பூசின
எவர் அவற்றை என்னிடம் துரத்தியது?

யார் கரையில் என்னை வீசியது?                                            எவரது கைகளவை?

காணாமல் போகிறேன்
நீரோடு கலக்கிறேன்
கண்கள் உற்றுப் பார்க்க முடியாத ஆழத்தில்
உறைந்து கிடக்கிறேன்
ஈரமண்ணாக.

வசூலிப்பு

            வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும்.

அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்றார்.அந்தச் சிறுமிக்கு பதினொரு வயது.அது நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும் அவரது கவலையெல்லாம் மகளுடைய சாமத்தியச்சடங்கை ஒரு கொண்டாட்டமாகத் தாங்கள் செய்யாமல் விட்டால் , மற்றவர்கள் தங்களை மதிக்க மாட்டார்கள் என்பதாக இருந்தது.அடுத்த வருடத்திலாவது அக் கொண்டாட்டத்தை நடத்தியே தீருவது என்பதே அவர் பேச்சாயிருந்தது.

எதற்கு அந்த அநாவசிய வேலை?அது  உடலில்  இயற்கையாக நடக்கும் ஒரு செயற்பாடு.அப்படியான சடங்கொன்றைச் செய்ய ஏன் கஷ்ரப்பட வேண்டும்? எங்கள் பழக்கவழக்கம் , கலாச்சாரம் எனும் சாட்டுப்போக்குகள் நமக்கு இப்போது என்ன அவசியத்துக்கு? என்று நான்  அவருடன் கதைத்ததை  அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘அது எப்பிடிச் செய்யாமல் இருக்கிறது?” என்பது தான் அவரது அழுத்தமான கேள்வி.

அது பற்றி மகளுக்குத் தெளிவு ஏற்படுத்துவதும் பயப்பிட எதுவுமில்லை என்று உரையாடவதும் தானே தாய் செய்ய வேண்டியது.அசெளகரியமாக உணர்ந்து கொள்ளும் மகளை ஆதரவாக அரவணைப்பதும் அது பற்றிப் பேசுவதுமல்லவா செய்ய வேண்டியது.ஆனால் பெற்றோர் உடனடியாக பெரும் எடுப்பில் ஒரு கொண்டாட்டம் செய்வது தான் பிரதான வேலை என்று ஓடித்திரிவார்கள்.

பலரும் இந்த நீராட்டுவிழா பற்றிப் பேசிவிட்டார்கள்.ஆனாலும் வெகுசனம் மத்தியில் அது மாற்றப்படாத எண்ணம் தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரும்  சனி ,ஞாயிறு என்றால்  கிலி கொள்கிறார்கள்.அவை ஓய்வெடுக்க வேண்டி விடுமுறை நாட்களாயிருந்தாலும் எம் மக்கள் ஏதாவதொரு சாட்டுச் சொல்லிக் கொண்டாட்டங்களைச் செய்யத் தொடங்கிவிடுவார்கள். நல்ல குளிர் காலத்தில் தான் இந்தப் பிரச்சனைகள் சற்று ஓய்ந்திருக்கும்.ஒரே நாளில் இரண்டு மூன்று விழாக்களுக்குச் சுற்றிச் சுழன்றோடுபவர்களெல்லாம் இருக்கிறார்கள்.

நேரம் விரயமாவது ஒருபுறமெனில் அதற்கான ஆடை ,அணிகலன்கள் வாங்குவது , அன்பளிப்புச் செய்யப் பணம் ஒதுக்குவது என்று சிரமங்களை அடைகிறார்கள். கோபிப்பார்கள், குறைநினைப்பார்கள் என்று எல்லாக் கொண்டாட்டத்திலும் தலைகாட்டுவதே கடமை எனப் பலர் துன்புறுகின்றனர். ஆயினும் நெருக்கமானவர்களின் வைபவங்களில் உளமாரப் பங்கெடுப்பதென்பது வேறு.ஆனால் புறுபுறுத்துக் கொண்டே சென்று வருபவர்கள் தான் பலரும்.ஆனாலும் அதே துயரத்தை விரைவில் மற்றவர்களுக்கும் அவர்கள் வழங்கத் தயாராகிவிடுவர்.ஒரு மகிழ்ச்சி தரும் கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதை இனிய அனுபவமாக உணராமல் அதுவொரு துன்பமாக மற்றவர்களால் நினைக்கப்படுகிறது. அதற்குக் காரணங்கள் அவை வெறும் பணச்சடங்குகளாகப் இருக்கின்றன. அவரவர் பவிசும் பவரும் காட்ட இக்கொண்டாட்டங்களை நடாத்துகின்றனர்.

வருடாவருடம் வந்து கொண்டிருக்கும் பிறந்த நாளை மண்டபம் வாடகைக்கு எடுத்துச் செய்கின்றனர்.அதுவும் நாற்பது ,ஐம்பது ,அறுபது, வயதான கொண்டாட்டங்கள் நடாத்தப்படுவதும் நடக்கின்றது.கத்தோலிக்கரென்றால் ஞானஸ்நானம், முதல்நன்மை என்று இன்னும் நீள்கிறது.திருமணங்கள் போட்டி போட்டுப் பெரும் எடுப்புகளுடன் கடன்பட்டு நடத்தப்படுகின்றன.

தங்கள் பெண்பிள்ளைகள் பருவமடைந்தால் அது ஒன்றிரண்டு வருடங்களாகத் திட்டம் போடப்பட்டு நடத்தும் விழாவாகிவிடுகிறது.தற்போதைய உணவுகளால் பெண்கள் சிறுவயதிலேயே தம் முதல்மாதவிடாயை அடைந்துவிடுகின்றனர்.பத்துப் பதினொரு வயதுச் சிறுமிகள் இச்சடங்கிற்கான காரணம் என்ன என்ற கேள்வியையே யோசிக்க முடியாமல் இருக்கின்றனர்.அவர்கள் சிறுவயதிலிருந்து சென்று வரும் விழாக்கள் அது வழமை தானே என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.தமது உறவுச் சிறுமிகள், தமிழ் நண்பிகள் அலங்கரிக்கப்பட்டு அந்நிகழ்வின் கதாநாயகியாக நிற்பது கவர்ந்திருக்கலாம்.விதம் விதமாகப் போட்டோவும் வீடியோவும் எடுப்பது பிடித்திருக்கலாம்.பெற்றோர் செய்வது சரியென்று நம்பலாம்.ஆனால் அக்குழந்தைகளின் பெற்றோர் எல்லாம் அறிந்தும்  அக்கொண்டாட்டத்தைச் செய்கின்றனர்.பல ஆண்டுகளாக உறவினர்களதும் நண்பர்களதும் விழாக்களுக்குச் சென்று அன்பளிப்பாகக் கொடுத்ததை வசூலிக்க இது ஒரு வாய்ப்பென்று கணக்குப் போடுகின்றனர்..பல மாதங்களாக மண்டபம் தேடி அலைகின்றனர். அழைப்பிதழ்களை அச்சடிக்கின்றனர். தமது பெண் குழந்தையை சில நூறு பேர் முன்னிலையில அலங்கரித்து க் காட்சிக்கு நிறுத்துகின்றனர்.இவை போதாதென்று பார்ப்பனனை அழைத்து விளங்காத மந்திரங்களைச் சொல்ல வைத்து காசும் கொடுத்துவிடுகின்றனர்.அச்சிறுமியை மண்டபத்தின் நடுவில் நிறுத்தி தமக்கான வரவுகளை வசூலித்துக் கொள்கின்றனர்.இதைத் தவிர வேறென்ன உண்டு?

பலரும் சொல்லும் காரணம் இது தான், ‘உறவுகள், ஊரவர்கள் ஒன்று சேர்வது’.நண்பர்களை உறவுகளைச் சந்திக்க ஒன்றாக உணவருந்திக் களிக்க ஒரு நாளைத் தீர்மானித்து ஒன்று சேரலாமே.அவ்வாறான உறவுகளும் நட்புகளும் மகிழ்ச்சியாக ஒன்று சேரத் தயாராவதில்லை.அவரவர்கள் தாம் கொடுத்த பணத்தை வாங்குவதற்குக் கணக்குப் போட்டபடியே தான் காசை மடித்து என்பலப்பில் வைக்கிறார்கள்.சனங்கள் தமக்குள் அப்படித் தான் கதைத்துக் கொள்கிறார்கள். இத்தனை வருடங்களாகக் கஸ்ரப்பட்டு உழைத்துக் கொண்டு போய்க் கொடுத்த காசை திரும்ப வாங்க வேண்டுமென்கிறார்கள்.

இன்னும் அதிக வேதனையைத் தருவது தமது பெண்குழந்தைகளைக் காட்சிப் பொருளாக்கிக் காசை வசூலிப்பது தான்.புலம்பெயர்ந்து வந்த பின்னர் கூட தேவையற்ற இச்சடங்கை ஏன் செய்ய வேண்டுமென்று பிள்ளைகளே சிந்திக்க முடியாதளவு இதெல்லாம் நம் கலாச்சாரம் என்று சொல்லிச் சொல்லி அவர்களைச் சுயமாகச் சிந்திக்க முடியாதவாறு தான் வளர்த்து வருகின்றனர்.

இங்கு கொண்டாட்டங்கள் என்பது வெறும் கொடுக்கல் வாங்கல்களை வைத்துச் செய்யப்படும் வியாபாரங்களாகி விட்டன.தமது பகட்டைக்காட்டும் அளவு கோல்களாக்குகின்றனர்.

- தர்மினி-

தொட்டிச்செடிகள் – நான்கு கவிதைகள்

 - சுபா

தடயம்

தினம் கடக்கும் பாதையை
ஏதோ நினைத்து திரும்பி பார்த்த
வழிப்போக்கியின் நிலை இன்றெனக்கு

மலைச்சரிவு, தூரத்து பனிமூட்டம்
குளிரில் பெருத்த மரக்கிளை பறவைகள்
பனிவிழுந்த புற்களை நிமிண்டும்
கன்றுக்குட்டியின் அவசரம்,
வெள்ளை ஆந்தையின் கவனப்பார்வை

நடுவே அகலும் தார்ச்சாலையில்
ஆங்காங்கே மழைநீர் குட்டைகள்
நீரில் பட்டுத்தெறித்த வெளிச்சத்தில்
நம் கால்தடங்களின் பின்னல் கோலாட்டம்.

அங்கே கண்ணில் பட்டவை சில
நீரில் கரைந்து மறைந்தவை சில.

நெருடல்

நேற்று விழாவில் பார்த்தது
அதே முகம்தான்
சந்தேகமில்லை
அர்த்தங்கள் பொதிந்த புன்னகை
பூத்தொடுக்கையில் விட்டுவிட்ட ஊசியைபோல
இலக்கை தேடும் அலங்கார பேச்சு.
மெளனிகளை வலிய இழுக்கும்
அதிகார உடல்மொழி
இவனேதான் விஷமி

மறைந்திருந்த நினைவுச்சுருக்கம் ஒன்று
இரவு பறவையாய்
ஒரு இரைச்சலுடன் வெளியே கசிந்தது

இனி துயிலின் கருமையில்
அமைதி மட்டுமே ஒளிரும்.

தொட்டிச்செடிகள்


வெயிலுக்கு பயந்து தினமும் நம் பலகணியில்
நிழலான கூடலை தேடிக்கொண்டன அந்த ஜோடிப் புறாக்கள்
பிடிவாதமாய் மல்லிகை தொட்டிகளின் நடுவே குடைந்து
மெதுவாய் கட்டுகின்றன எளிய கூடு ஒன்றை.
குட்டிப்புறாக்களின் வரவை எதிர்நோக்கும் உன்
கண்களில் மீண்டும் ஒரு இளம் கண்ணாடி பளபளப்பு.
புறாவுடன் எனக்கான சண்டைகளை .உணரா ஜொலிப்பு அது.
அடுக்கு மல்லிகை தொட்டிகளில் படுத்துக்கொள்வது
எல்லாவிடத்திலும் இறக்கைகளை விட்டு செல்வது
சின்ன மொட்டுகளை நோண்டுவது, எச்சமிடுவது என்று
புறாக்களினால் தொல்லை பலவிதம், அறியமாட்டாய் நீ.
உனக்காகவும் காதலுக்காகவும் விட்டு வைத்த
புறா ஜோடியோ இடத்தை காலி செய்வதாயில்லை
சில காக்கைகளையும் இன்று விருந்துக்கு அழைக்கின்றன.
எங்களின் சண்டைகளெல்லாம் சரவெடிகளாய் நீளுகின்றன
புறாகாற்றை சுவாசித்த மல்லிகை செடிகளும் இப்போதெல்லாம்
இடப்பகிர்வை நினைத்து செல்லம்கொஞ்சுவதில்லை.

வெள்ளியிரவு

கோடைநாட்கள் இம்முறை அளவுக்கதிகமாய் நீண்டன
வெற்றுக் காகிதங்கள் மட்டும் கொண்ட புத்தகமாய்
காற்றுவீசாத மணிநேரங்களாய்

அடுக்கடுக்காய்
நாட்கள் தவறாது ஒன்றின்பின் ஒன்றாய் வெயிலின் அணைப்பில் கட்டுண்டன
இருண்ட கண்களை தினமும் அழுத்தியது கனவுகளின் பேயுருவம்
நிற்பதறியாமல் வழுக்கிச்செல்லும் கடிகாரமுள் தினம் ஓடுகிறது சுற்றிச்சுற்றி.
அவ்வப்போது தலையிட்டு வெம்பிய இருளை ஒற்றியெடுக்கும் நிலவோ
கடலின் நடுவே வெள்ளி துகள்களை பூசி ஒப்பனை செய்யும்.
வெண்மை குழையும் ஆழிக்கடலின் கரையில் இரவுகளை தேடுவோம்

அப்போதெல்லாம்.

வெயிலுக்கு பயந்து தினமும் நம் பலகணியில்
நிழலான கூடலை தேடிக்கொண்டன அந்த ஜோடிப் புறாக்கள்
பிடிவாதமாய் மல்லிகை தொட்டிகளின் நடுவே குடைந்து
மெதுவாய் கட்டுகின்றன எளிய கூடு ஒன்றை.
குட்டிப்புறாக்களின் வரவை எதிர்நோக்கும் உன்
கண்களில் மீண்டும் ஒரு இளம் கண்ணாடி பளபளப்பு.
புறாவுடன் எனக்கான சண்டைகளை .உணரா ஜொலிப்பு அது.
அடுக்கு மல்லிகை தொட்டிகளில் படுத்துக்கொள்வது
எல்லாவிடத்திலும் இறக்கைகளை விட்டு செல்வது
சின்ன மொட்டுகளை நோண்டுவது, எச்சமிடுவது என்று
புறாக்களினால் தொல்லை பலவிதம், அறியமாட்டாய் நீ.
உனக்காகவும் காதலுக்காகவும் விட்டு வைத்த
புறா ஜோடியோ இடத்தை காலி செய்வதாயில்லை
சில காக்கைகளையும் இன்று விருந்துக்கு அழைக்கின்றன.
எங்களின் சண்டைகளெல்லாம் சரவெடிகளாய் நீளுகின்றன
புறாகாற்றை சுவாசித்த மல்லிகை செடிகளும் இப்போதெல்லாம்
இடப்பகிர்வை நினைத்து செல்லம்கொஞ்சுவதில்லை.

வெள்ளியிரவு

கோடைநாட்கள் இம்முறை அளவுக்கதிகமாய் நீண்டன
வெற்றுக் காகிதங்கள் மட்டும் கொண்ட புத்தகமாய்
காற்றுவீசாத மணிநேரங்களாய்

அடுக்கடுக்காய்

நாட்கள் தவறாது ஒன்றின்பின் ஒன்றாய் வெயிலின் அணைப்பில் கட்டுண்டன
இருண்ட கண்களை தினமும் அழுத்தியது கனவுகளின் பேயுருவம்
நிற்பதறியாமல் வழுக்கிச்செல்லும் கடிகாரமுள் தினம் ஓடுகிறது சுற்றிச்சுற்றி.
அவ்வப்போது தலையிட்டு வெம்பிய இருளை ஒற்றியெடுக்கும் நிலவோ
கடலின் நடுவே வெள்ளி துகள்களை பூசி ஒப்பனை செய்யும்.
வெண்மை குழையும் ஆழிக்கடலின் கரையில் இரவுகளை தேடுவோம்

அப்போதெல்லாம்.

சத்தமில்லாத மழையும் சத்தம் செய்யும் மழையும்

தர்மினி

சத்தமில்லாத மழை

முன்வாசற் கதவொன்று
அயல்வீட்டுச்சுவர்கள் இருபுறங்கள்
சன்னல்களிரண்டு பின்புறம்

அங்கிருந்து வெளியேறும் போதும்
உள்நுழைந்த பின்பும்
திறப்புக் கொண்டு பூட்டப்பட்டதாக.

திரைகள் இழுத்து மூடிச்சாத்திய சன்னல்களுடன்
கதவைத் தாளிட்டு
உள்ளே என் வாசம்.

மின்னி ஒரு வெளிச்சம் மங்கலாக
என் முன் விழ
சன்னற் திரை விலக்கி வானம் பார்த்தால்
மழைக்கயிறுகள் இறங்கி மண்ணில் கரைந்து கொண்டிருந்தன.


மழைச்சத்தம்

முன்னொரு காலம்
மழை சத்தமிடுவதைக் கேட்டேன்.

ஓலைக் குடிசையொன்று
மூடக்கதவில்லை
சன்னல்களற்றுச் சுற்றிவரச் செத்தைகள்
அதிலே
குறைச்சுருட்டு, பாதிப்புழுக்கொடியல், பற்பொடிப்பைக்கற் சொருகிக்கிடப்பன.
சாரைப்பாம்பும் சரசரக்கும்.

ஓலைக் கூரையில் மழைக்குதியோசை.
நடுக்கூரை மழையொழுக
டப்…தொப்…டப்…தொப் சட்டியிலும் சத்தம் .

தாழ்வாரம் குந்திக் கை நனைக்க
முற்றத்தில் குமிழ்கள் ஓடி வெடிக்கும்
என் முகத்திலடிக்கும் சாரல்.
மழைச்சத்தம் காதுகளில் குளிர்ந்து இறங்கி
கிணறு தழும்ப
நெல்லி முறிந்து
முருங்கை சரியும்
மாம்பிஞ்சுகள் உதிர்ந்து பரவ
பள்ளத்து வெள்ளங்களில் தவளைகள் கத்தும்
சற்று நேரத்தில் புதிய காட்சி.

கூதலும் சத்தமுமாக
கிராமத்து மழை கணகணக்கும்.

www.vallinam.com.my

இதழ் 31 ,ஜுலை 2011

தர்மினியின் “சாவுகளால் பிரபலமான ஊர்” – ஒரு பார்வை

யோகி

  தர்மினியின் கவிதை தொகுப்பான சாவுகளால் பிரபாலமான ஊர் பற்றி எழுதுவதே எனக்கு பெரிய சவாலாக இருந்தது. முதன்மையாகத் தொகுப்பின் தலைப்பே என்னை அதனுள் நெருங்க விடாமல் பயமுறுத்தியது. ஒவ்வொரு முறையும் எப்படித் தொடங்கலாம் என்று தொடங்கி தொடங்கியே பல காகிதங்கள் கசக்கி எறியப்பட்டது. கவிதைப் பற்றிய விமர்சனத்தை எழுதுவது இது எனக்கு முதல் முறை இல்லை. எனினும் தர்மினியின் கவிதைகளை அத்தனை சுலபமாக என்னால் விமர்சித்து விட முடியவில்லை. அதை எழுதுவதற்கு சரியான சொற்கள் தேவைப் படுகிறது. அவ்வாறான சொற்களை சரியான இடத்தில் பயன்படுத்திக் கொள்ள எனக்கு பொறுமை தேவைப் படுகிறது. அனைத்துக்கும் மேலாக அக்கவிதைகளை கிரகித்துக் கொள்ள எனக்கு வலிமை தேவைப்படுகிறது.

‘சாவுகளால் பிரபாலமான ஊர்’ இதை விவரித்து சொல்வதென்றால் பிணங்களால், மரணங்களால் பிரசித்தி பெற்ற நகரம் அல்லது மாநிலம் அல்லது நாடு. எவ்வாறான மரணங்கள்? நோயால் அல்லது விபத்தால் அல்லது இயற்கையால் ஆன மரணமா? இல்லை. எப்படியெல்லாம் நிகழக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்ந்த மரணங்கள். எப்படியெல்லாம் பிணமாகக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்த்திக் காட்டிய கொடூரங்களுக்குப் பெயர் போன ஊர். வன்கொடுமையையும், வக்கிரத்தையும் அப்பாவி பொதுமக்கள் மீதும் விடுதலை போராளிகள் மீதும் பிரயோகித்து பிணங்களை சம்பாதித்து பிரசித்திப்பெற்ற ஊர்.

அந்த ஊரில் பிறந்து வளர்ந்து போரின் கசப்பான அனுபவங்களோடு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தர்மினி தன் இறந்த காலங்களுக்கு உயிர் கொடுத்து கவிதை வடிவில் உருவம் தந்திருக்கிறார். போரின் ஆறாத காயங்கள், நட்பு, காதல், ஆணாதிக்கம், அரசு திட்டங்கள் என அதனதனில் பட்ட காயங்களைக் கவிதையாக சமைத்து நமக்கு உண்ண கொடுத்திருக்கிறார். 50 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் பக்கத்துக்கு பக்கம் வெறுமையும், துயரமும் அவரின் கோபமும் போர்ச் சூழலையே பேசிக் கொண்டிருக்கின்றன.

யுத்தத்தில் பாதிக்கப்படும் உடைமைகளையும் சொத்துக்களையும் உயிரைக் கொண்டு மதிப்பிட முடியாது. ஆனால் யுத்தங்கள் தின்று தீர்க்கும் வீடுகளைப் பற்றிய கவலையோடு ஓடுபவர்கள் நத்தையின் கூடு போன்ற வீடொன்று முதுகில் இருந்தால் எளிதாக இருக்கும் என்று வெம்புகிறார்கள்.

குண்டுகள், துப்பாகிகள்,
வேவுக்கண்கள் சொல்லுகின்றன
வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்

…………………………….

நத்தையின் கூடு போன்ற
வீடொன்றை நினைத்து வெதும்பியபடியே
ஏதோ ஓரிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள்.

வீடுகளில் சுகமாக வாழ்ந்து பழகி விட்ட நமக்கு நத்தை போன்றதொரு வீட்டையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் பாதுகாப்புக்கூட துணை நில்லாத வீடுகளைப் பற்றிய துயரமே எவ்வகையான கவிதைக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

அடக்கம் செய்ய முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பிணங்களை தூக்குவதற்கு ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பெரியவர்களின் குமுறல்களை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. ஆனால் கவிதையாய் சொல்கிறார் தர்மினி இப்படி.

சுடுகாட்டுத் தாழைகளிலிருந்து
நாகங்கள் தப்பித்தோடியிருக்க
கல்லறைப் பூவரசுகளின் நிழலில்
அடையாள அட்டைகளைக் கைகளிற் பொத்தியபடி

பிணந்தூக்க எவருமற்று
கிழவர்களும் கிழவிகளும் கால் நீட்டிக்காத்திருப்பர்.

சிதைவடைந்த ஊரில் செழித்துக்கிடைப்பவையோ சுடுகாடும் இடுகாடும் என்று இருக்கும் போது பிணங்களும் நிம்மதியற்றுதான் இருக்கின்றன.

பெண்ணியம் பேசும், பெண்கள் எழுதும் கவிதைகள் அவர்களின் உறுப்பைக் கொண்டாடியே இருக்கிறது. அதைத்தாண்டி இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சிலர் வெவ்வேறு பாடுபொருள் கொண்டு கவிதை வரைந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தன் சுயத்தைதான் பாடுகிறார்கள் என்ற பொதுக் கருத்து ஒன்று பெண் கவிகள் மீது உண்டு. தொகுப்பில் தர்மினியும் உறுப்பை பேசுகிறார் இப்படி.

சொறி பிடித்த தொடைகள்
மலமாய் நாறும் வாய்கள்
அழுக்காக மடிந்த வயிறுகள்

நெளிந்த குறிகள்
உங்கள் நிர்வாணங்களை ஒரு தடவை பார்த்து வெட்கி
மற்றுமொருத்திக்குக் காட்டாது
பொத்தி வையுங்கள்…

என்று முடிகிறது கவிதை. இராணுவச் சிப்பாய்கள் ஈழத்து சகோதரிகளுக்கு செய்த வன்கலவிக்கும், சித்திரவதைகளுக்கும் கொடூரக் கொலைகளுக்கும், அழிக்கமுடியாத சாபத்தைச் சுமந்துக்கொண்டுதான் வாழ நேர்ந்திருக்கிறது. செத்துப்போன கன்றைச் சுற்றி நின்று பிய்த்து தின்னும் ஓநாய்களாகவும் மரபு அற்றவர்களாகவும் அவர்களை சீறுகிறார் தர்மினி. சிங்கள சிப்பாய்களின் குடும்பத்துப் பெண்கள் தன் வீட்டு ஆணின் வருகையை எதிர்ப்பார்ப்பதை இப்படி விவரிக்கிறார். ஒருத்தி தன் சகோதரனின் நலம்விசாரித்து கடிதம் எழுதுகிறாள். பிரிவை தாங்க முடியாமல் காதலி கண்ணீர் வடிக்கிறாள். தன் காதலைச் சொல்வதற்காக மற்றொருத்தி சிப்பாயின் விடுமுறையை எண்ணி வாசலையே பார்த்துக்கொண்டிருகிறாள். அவனின் மகள் அப்பன் கொண்டு வரும் பரிசு பொருட்களையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். மனைவி நித்திரையற்ற தன் இரவுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறாள். அவனின் தாய் சாவுக்காவது வருவானா என்று கலங்கிய படி இருக்கிறாள். அந்தச் சமயத்தில் அவன் போரில் ஏதோ ஒரு பெண்ணை வன்கலவி செய்து கொன்று மண்ணை போட்டு மூடி இருக்கலாம். உண்மையில் சிங்களச் சகோதரிகளின் அன்புக்கும் நேர்மைக்கும் பாத்திரமற்றவர்கள் இவர்கள். நம்பிக்கை துரோகிகள் என்றும் இவர்களை சொல்லலாம்.

ஈழம் போர் ஆரம்பித்த நாள் முதற் கொண்டு மற்றவர்களை விட அதில் பெரும் பாதிப்படைந்தவர்கள் குழந்தைகள் தான். அவர்களின் சிரிப்பும், குழந்தை தனமும், குழந்தை பருவமும் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் விளையாட்டுகள் பலவந்தமாக கலவாடப்பட்டிருக்கிறது. புத்தகம் ஏந்தும் கைகளில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. கருவரையில் வளரும் குழந்தைக்கும் போர் பற்றிய பயம் அல்லது எதிர்காலத்து போராளி நீ என ஆருடம் ஊட்டப்படுகிறது. இந்த விடயத்தை பேசுகிற கவிதை தர்மினியின் இந்தத் தொகுப்பில் மிக முக்கியமானது.

ஐந்து மாதக் கருவும் போருக்குத் தேவையாம்
இனி எம் கர்ப்பங்கள் கண்காணிக்கப்படும்

…………………………….

சில மாதங்களான குழந்தைகளை நோக்கியும்
சில வருடங்களான சிறுவர்களைக் குறிவைத்தும்
தாயின் கதறலை வென்ற
துப்பாக்கிகளின் ஓசைகள்

என்று தொடர்கிறது கவிதை. அதிகாரம் கொண்ட வெறி கொண்டவர்கள் கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் தீவின் திசை எங்கும் வெறி கொண்டவர்களாகவே அலைவதை கவிதையில் காணப்படுகிறது. ஓடி விளையாடுப் பாப்பா என்று பாரதி சொன்ன கவிதைக்கெல்லாம் அங்கே வேலை இல்லை. செய்து முடி. அல்லது செத்து மடி என்பதுதான் எழுதாத விதியாக உள்ளது

கடிதம் எழுதாத நண்பனுக்கு முகவரி கொடுக்கும் கவிதையும் (பக்கம் 26)இ தீர்ந்து போகாத காதலைப்பற்றி பேசும் பெண்ணின் மனநிலையிலான கவிதையும் (பக்கம்30) மீண்டும் மீண்டும் போரினால் மாறிப்போன பிம்பங்களையே நம் கண்முன் நிறுத்துகிறது. இவரது கவிதைகள் ஆதங்கங்களை மட்டும் அல்ல வரலாற்று பதிவுகளும் அவற்றுடனான அவரின் இருப்பையும் இணைத்திருக்கிறார். கணவனின் ஆணாதிக்கத்தை ஆற்றாமையுடன் தனக்குள்ளோ அல்லது பயந்து பயந்து மற்றவருடமோ கேள்விக்கேட்கும் பெண்கள் எங்கும் உண்டு. எல்லாரது பெண்கள் வாழ்க்கையிலும் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் இது. மேலோட்டமாக இதை பார்க்கும் போது சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அதனால் ஏற்படும் மனஉளைச்சலையும், மனஅழுத்தத்தையும் திரண் இல்லாத பெண்கள் எங்கு கொண்டுபோய் கழுவ முடியும்?

சுற்றியிருக்கின்ற நான்கு வீடுகளும்
சற்றுக் கதவு திறந்து பார்த்தன.

…………………………….

கணவன் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறான்
காதடைக்க வாயடைத்து நின்றேன்.

…………………………….

மறுநாள் மெதுவாக வந்தானவன்

…………………………….

இன்று உரத்துக் கத்திட முடியாதவன் போல
மெல்லச் சொன்னான்
மன்னித்து விடு
என் ஒரு காதுச்சவ்வும் அதிராத அவ்வசனம்
எட்டிப் பார்த்த அத்தனை வீடுகளுக்கும் எப்படி கேட்கும்?

என்று முடியும் இந்த கவிதை தர்மினியின் துல்லியமான பெண்ணியப் பார்வையை காட்டுகிறது.

இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த கவிதையாக ‘அகமும் புறமும்’ என்ற கவிதை உள்ளது. நான் எத்தனை பலவீனமானவள் என்று என்னை சுட்டிய கவிதை அது. மன்னித்தலும் மறத்தலும் மனித மாண்பு எனப் படும் போது, மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல், சதா கொல்லும் போரின் நினைவுகளை எப்படி உரித்துப்போடுவது? எங்கு போனாலும் எப்படி இருந்தாலும் சாவுகளால் பிரபலமான ஊரில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளம் பின்தொடர்வதை யாராலும் அறுத்துப்போட முடியாது.

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்…

நீரால் நிலத்தால் பிரிந்த துயரில்
வேலை முடிந்து வெந்நீரிற் குளித்து
நேரம் ஒதுக்கிப் பேச
மதுவை ஊற்றி மேசை நிறைத்து
மசாலாவுடன் மாமிசங்கள் மற்றும் மலர்க்கொத்துக்களுடன்
அவ்வப்போது வாதங்களைக் குரோதங்களை வீசி
முடிவிற் சில பாடல்களாற் தீர்ந்திடும்

எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்…

ஈழத்துப்போரின் அவலங்களை விதவிதமாக பேசியாகிவிட்டது. பக்கம் பக்கமாக எழுதியாகியும் விட்டது. நாளுக்கொரு காணொளியாக வந்த வண்ணமே உள்ளது. பாதிப்படைந்தவர்களை விட மற்றவர்க்கு அது ஒரு சேதிதான். அச்சச்சோ! என்று வேதனையைத் துப்பிவிடும் சேதிகள்.அதிக பட்சமாக பண உதவியோ அல்லது இலங்கை அரசுக்கு எதிராக இணையத்தில் வாக்குகளோ..அல்லது..இங்கிருந்தபடி விடுதலை போராளிக்கான நியாயங்களைக் கூட்டம் போட்டு பேசவோ மட்டும் தான் எங்களால் முடியும். சாவுகளால் ஒரு ஊர் பிரபலமாகிக்கொண்டிருக்கும் போது , நாங்களும் திராணியற்று சுடச்சுடச் சேதிகளை எதிர்பார்த்துக்கொண்டு உயிரோடு தான் இருந்தோம்.

நன்றி : http://vallinam.com.my/

இதழ் 31  ஜுலை 2011

தலைப்புத் துறந்த கவிதை

மோனிகா

ஒரு மரம் பிரிந்து

மற்றது தழுவியவாறு

செல்லும் அதிகாலைப் பறவைகள்.

சொல்லாத சொற்களை ஒருவன் அடுக்க

ஆங்கதனை

இல்லாமற்போன சந்திப்புகளால்

தீயிலிட்டுக் கொளுத்தினாள் ஒருத்தி.

அதன் கரியில் காணாமற்போனது

கடக்கும் காலம்.

பகலென்றும் இரவென்றும் பாதைகள் சரிய

பெரும்பொழுது யாதிங்கு,

பெருகக் காலம் நம் கண்முன்னே?

எல்லாமும் பேசிய பின்

முன் பார்த்துப் பின் செல்லும் ஒரு உலோகப்பெட்டியினுள்

நான் நகர

அங்கு நானே ஆகிப்போவேன்

எனது வரலாறாக.

17-04-2011