தூமை

இரக்கவாளர்களின் உடைகள்

டிசம்பர் 1, 2009 · 3 மறுமொழிகள்

அகதிகளுக்குக் குடிசைகள் கட்டினர்.
அழுக்கேறிய ஒற்றை ஆடைக்குப் பதிலாக
இரக்கவாளர்களின்
உடைகளைத் துவைத்து
அணிவித்தனர்.
அரிசி,பருப்பு,சீனி மற்றும் மாவும்
மூடைகளாக முதுகுகளில்
ஏற்றித்
தணலாய் கிடக்கும்
வயிறுகளைக் கஞ்சியால்
கழுவ
நிவாரணந் தந்தனர்.

மேலுஞ் சில
ரூபாய்களைப் பொத்திக் கொடுத்துப்
புகைப்படங்களும் பிடித்தனர்.
உழுத நிலத்தைக் கறவை மாடுகளை
குளத்து மீன்களை
குடியிருந்த துண்டு நிலத்தைக்
குண்டுகள் கொட்டிக் குலைத்து
தின்ற சோற்றைத் தட்டிக் கொட்டி
வரிசையாக நிறுத்தி
வள்ளல்களாய்
நிவாரணங்கள்
வழங்குதலில்
தீர்ந்தது தீர்வு.

மனிதர்களை
விலங்குகளை
முக்கால் உயிருடன்
மணலள்ளி மூடி
தப்பியோடுகையில்
முதுகிற் சுடுபட்டு
தண்ணீரிற் செத்துக்
குவிந்த சாம்பலில் கொட்டுகின்றனர்
தங்கள் இரக்கங்களை.

பிணக்காட்டிற் செத்துக்கிடந்த
பிள்ளைகளை
பெற்றவரை
துணையை
அயலவரை
நீள் வரிசைகளில்
நின்று கேட்கின்றனர்.
எந்த நிவாரணத்தில்
வழங்குவீர்?

தர்மினி

www.vallinam.com.my

→ 3 மறுமொழிகள்பகுப்புகள்: கவிதைகள்

ஒடுக்கப்படுவோருக்கான குரல்

நவம்பர் 29, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

                                      ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் பல நடைபெறுகின்றன.அவற்றில் மையமாக இருப்பது  அனைவருக்குமான உரிமைகளுக்கும் அதாவது மனிதர்கள் சரிசமனற்ற முறையில் நடாத்தப்படுவதை எதிர்த்துக் குரலெழுப்புவது. முதலாளித்துவ அரசுகளின் தந்திரங்களும் சுயஇலாபங்களும் அறிந்து கொள்ளாத மக்களால் சனநாயக உரிமைகள் சலுகைகள் உணர்ந்து கொள்ளப் படாமல்,அதுவே இயல்பான வாழ்வென ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அவ்வாறான மாயைகளில் அவர்கள் வாழுமாறும் வலிந்து திணிக்கப்படுகின்றனர். சுரண்டல்களையும் அடக்குமுறைகளையும் வேறு வழியற்றுச் சுமக்க வேண்டியவர்களே தாம் என்று வாய்மூடியிருப்பர்.
                       இவ்வாறான மக்களுக்காகக் குரல் கொடுக்கவும் போராட்டங்களை மேற்கொள்ளவும் சுயநலமற்ற கட்சிகளும் அமைப்புகளும்  தம் பணியெனத் தோள் கொடுக்கின்றன. ஒரு அமைப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தும் போது அதனுடன் இணைந்து பொதுசனங்களும் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர்.இவைகள் கருத்தரங்குகளை நடாத்தி மற்றவர்களுக்குத் தெளிவு படுத்துகின்றன.அடுத்த செயற்பாடுகளை ஆலோசிக்கின்றன. சிறு தொகையினாரல் செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களினால் கிடைக்கும் பலன்களை அதனை வேடிக்கை பார்த்துக் கேலி செய்வோரும் பெற்றுக் கொள்கின்றனர் என்பதே உண்மை. மக்களுக்காக மக்கள் ஒன்றிணைந்து உரத்துக் குரல் கொடுப்பது வெகுசனப்போராட்டத்தின் சிறப்பாகும்.ஆயினும் காத்திரமான கோசங்களோ வாசகங்களோ இல்லாத ஒரு ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ தம் இலக்கையடையத் தவறிவிடுகின்றன. வேண்டிய வேலைத் திட்டங்களுக்கான ஆயத்தமோ தீர்மானங்களோ இல்லாத அமைப்புகளும் எவ்விதமான பயனையும் அளிக்காமற் போய்விடுகின்றன.முறையான திட்டமிடல்களும் நியாயமான கோரிக்கைகளுமாக நின்று போராடும் அமைப்புகள் தம் இலக்கை அடைவதில் தோற்பதில்லை,சோர்வடைவதில்லை.
     அது மட்டுமன்று சிலர் மக்களுக்காகப் பேசுகின்றோம் குரல் கொடுக்கின்றோம் எனச் சொல்லியவாறு குழுவாகச் சேர்ந்து தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இலாபங்கள் என்பவற்றைச் சார்ந்து செயற்படுவார்கள்.சாதாரண சனங்களுடன் இறங்கி வேலை செய்யாமல் தனிப்பட்ட நபர்களாகி அந்த மக்கள் சார்பில் தாமே கூடிப் பேசித் தங்கள் திருப்திகளுக்கேற்ற தீர்மானங்களை எடுக்கின்றனர்.இரகசியக் கூட்டங்கள் இரகசிய அறிவிப்புகளென எந்த மக்களுக்காகப் பேசுவதாகச் சொல்கிறார்களோ,அவர்களால் அவை பற்றி அறியக்கூட முடியாமற் போய்விடுகிறது.அம்மக்களால் உடன்பட முடியாத விடயங்கள் முடிவுகளாகத் திணிக்கப்படுகின்றன.
      இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்து கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் எனச் செயற்படும் தமிழ் ஒருங்கமைப்புப் பற்றி எழுதாமலிருக்க முடியாது. தமது முகப்பு வாக்கியத்தை -‘இலங்கையில் ஒடுக்கப்படும் அனைவரது உரிமைகளுக்கும் போராடும் தமிழ் ஒருங்கமைப்பு’- என்பதாகப் பொறித்து தங்கள் பணியைச் சுருங்கச் சொல்கின்றனர்.
           இலங்கையின் வன்னி முகாம்களிற் கட்டாயமாக வைத்துள்ள மக்கள் அனைவரையும் விடுவித்து ‘முகாம்களை மூடு ” எனத் தொடர்ந்து போராட்டங்களைப் பல வடிவங்களிலும் மேற்கொள்கின்றது இவ்வமைப்பு.

                 தமிழ்மக்கள் வாழும் இடங்களிலிருந்து உடனடியாக இராணுவத்தைத் திரும்பப் பெறுவது,தடுப்பு முகாம்களை மூடுதல், இலங்கை அரசுக்கு இதர நாடுகள் உதவி வழங்குவதை நிறுத்தும்படி அந்நாடுகளின் தொழிலாளர்கள் அணிதிரள்வதை ஆதரிப்பது,ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவது,சுயநிர்ணயஉரிமையை உத்தரவாதப்படுத்துவது ஆகிய அணிதிரட்டலுக்கான கோரிக்கைகள் உருவாக்க முனைப்பாகச் செயற்படுகிறது. 
             மாதக்கணக்காக வன்னியில் நடை பெற்ற போருக்கெதிராக ஆர்ப்பாட்டங்களைச் செய்தவர்கள் பலர் இன்று அமைதியாக இருக்கின்றனர்.கவனயீர்ப்புகளினால் அரசின் மீதான அழுத்தத்தைப் பிரயோகித்து இம்மக்களுக்காகப் பேச முன்வருகிறார்களில்லை.புலிகளும் தலைமையும் அழிக்கப்பட்ட பின் யாருக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய தேவையிருக்கவில்லையா?இராணுவத்திடம் சரணடைந்த புலிஉறுப்பினர்களின் நிலைமையென்ன? முகாம்அகதிகளின் கதியென்ன ? என்று வீதிகளிலிறங்கிச் சர்வதேசமே இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா? எனக்கூக்குரலிடவில்லையே.
                    முகாம்களைப் பார்வையிட அரசினால் அழைத்துச் செல்லப்படுபவர்கள் காட்சிப்படுத்துவதெற்கென இருக்கும் சில முகாம்களைப் பார்வையிட்டுவிட்டுச் சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர் எனச் சான்றளிக்கின்றனர்.அவர்களை அங்கு முகாமில் மக்களோடு ஒருவராகத் தங்கியிருந்து வாழ்ந்து ஊழியஞ் செய்யச் சொன்னால் அச்சீர்கேடை உணர்ந்திருப்பார்கள்.அவர்கள் நட்சத்திர விடுதிகளிற் தங்கியிருந்து முகாம் மக்களின் வாழ்க்கையைப் பார்வையிட்டுப் பேசுபவர்கள்.ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியும் அரைவாசி மக்கள் விடுவிக்கப்பட்டதாகச் சான்று பகர்கின்றார்.அது எவ்வாறான பின்னணியில்? வன்னியை நிரந்தர முகவரியாகக் கொண்டவர்கள் மாரிகாலங் காரணமாக வேறு முகாம்களுக்கு இடமாற்றப்படுகின்றனர்.ஏற்றிச் சென்று இடைவழிகளிலுள்ள பாடசாலைகளில் இராணுவப் பாதுகாப்புடன் தங்க வைக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணம் போன்ற ஏற்கனவே அரசின் இராணுவத்தின் கண்காணிப்பிலுள்ள பிரதேச மக்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.அச்செயற்பாடு அவர்களை மீண்டும் இராணுவக்கண்காணிப்பில் கையளித்திடுதலே.குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் இராணுவ முகாம் சென்று பதிய வேண்டும்.தொடர்ந்து இராணுவம் வீடுகளுக்கு வந்து உறுதிப்படுத்தும்,அடையாள இராணுவ அடையாளஅட்டையும் வழங்கப்படும்.  அகதி முகாம்களை மூடிட வேண்டும். அம்மக்களைச் சுதந்திரமாக வெளியே விட வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது தமிழ் ஒருங்கமைப்பு.” தமிழர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து” என வன்னிப் போர்க்கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு 2009 மார்ச் ஆரம்பிக்கப்பட்டது.இது பல நாடுகளிலும் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எனச் செயற்திட்டங்களை மேற்கொள்கின்றது.தற்போது தமிழ் ஒருங்கமைப்பாக வேலைத்திட்டங்களில் ஈடுபடுகின்றது.தனியே தமிழர் மட்டுமல்லாது   பல  நாட்டவர்களும்  உறுப்பினர்களாகியுள்ளனர். இந்தோனேஷியா,மலேசியா,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அகதித் தஞ்சம்கோரி இடைவழியிற் துன்புறும் மக்களுக்காகவும் கூட்டங்களையும் தூதுவரகத்தின் முன் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்துகின்றது.அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிடுகின்றது.இணையத்தளத்தையும் நடாத்தி கோரிக்கை மனுவில் கையெழுத்துகளைச் சேகரிக்கின்றது.  

                  இலங்கைத் தமிழர்களின் ஆரம்ப காலப் பிரச்சனைகளைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியாமல் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இளையோரை அணுகுகின்றனர்.உத்வேகத்துடன் தம் பங்களிப்பையாற்றத் துடிக்கும் இளையோர்களுடன் இணைந்து செயலாற்றக் கருத்தரங்குகளை நடாத்துகின்றனர்.

              மே 18 இல் நாடு அமைதியானதைச் சொல்பவர்கள் மத்தியில், அதன் பின் ஆபத்தான பயணங்களை மேற் கொண்டு அகதித் தஞ்சம் கோருபவர்களின் சார்பில் தூதரகங்களின் முன் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி யதார்த்தத்தைத் தயக்கமின்றி உரைக்கின்றனர்.
         லண்டன், சென்னை,நியூயோர்க்,சுவீடன்,அயர்லாந்து,ஒஸ்லோ,மலேசியா,பரீஸ் என ஒருங்கிணைப்பாளர்கள் அந்தந்த நாடுகளில் ஆர்ப்பாட்டங்களைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடாத்துகின்றனர்.லண்டனில் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி இந்தோனேஷிய, அவுஸ்திரேலிய தூதரகங்களின் முன்னால் ஆர்ப்பாட்டங்களையும் மேற் கொள்ளவுள்ளனர்.
இணையத்தளத்தைக் காண்பதற்கு,
 www.stoptheslaughteroftamils.org

தர்மினி

→ Leave a Commentபகுப்புகள்: கட்டுரைகள்

மதுக்கோப்பை

நவம்பர் 24, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

இறுதிக் கோப்பை மது பற்றி,
கடைசி மிடறைத் துளி சிந்தாமல்
சுவைத்து
அது தொண்டையிலிறங்கிக் கரைந்து போவதை
கவிஞர்களும் மதுவருந்தித் திளைப்போரும்
வருணனை செய்வர்.
அவர்கள்
மதுவின் முதல் மிடறை இரசித்தறியாத மடையர்கள்.

முதற் தூக்குதலில்
தோழமைக் கிண்ணங்களின் உரசலோடு
கோப்பையை முத்தமிடாதவர்கள்.
காதலைச் சொன்ன ஒரு நாள் போல்
அது வெப்பத்தை உணர்த்தும்.

புதியதொரு முத்தத்தையொத்த
முதற் கோப்பை மதுவிற் கிளர்ச்சியடையாதவர்கள்.
வெற்றுப் போத்தல்களை வீசும் வரை     
போதையைச் சுகிக்காதவர்களாய்
கடைசிக் கிண்ணத்திற் கரைந்திடுவர்.

பியர் நுரைகளில்
வைன் நனைந்த உதடுகளின் புளிப்பில்
கள் அருந்திய மிதப்பில்
ரக்கீலா,வோட்கா,விஸ்கி,பிராந்தி மற்றும் பலவும்
இதமான தீயாய் வருடிச் செல்லும் கிறக்கத்தில்
பாடல்களிசைத்துத் தாளங்கள் தட்டும் குழாமிலிருந்து
இசைகள் பொங்கும் கோப்பையின்
முதற் துளியை உதடுகளில் மீட்டாதவர்கள்.
அவர்கள்
கடைசிக் கோப்பை பற்றிக் கதைப்பர்.

தர்மினி

→ Leave a Commentபகுப்புகள்: கவிதைகள்

பாலியல் கலகம்: நொறுங்கும் கலாச்சாரம்

நவம்பர் 24, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

மீனா

‘மனிதரை உள்ளுணர்ச்சிகள் வழிநடத்த வேண்டும்.அறநெறிகள் அல்ல’
-நீட்சே

‘அற’நெறிகளால் மட்டுமே வழிநடத்தப்படும் இந்திய கலாச்சாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயங்கும் ‘நாஸ் பவுண்டேசன்’ என்கிற தனியார் அமைப்பு, பாலின சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377ஐ நீக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது.  நீண்ட காலமாய் ஒத்திவைக்கப்பட்டு வந்த இவ்வழக்கிற்கு கடந்த ஜீலை 2 ஆம் தேதி நீதிபதி ஏ.பி.ஷா, எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய பென்ச் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறது : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21[வாழ்க்கைப் பாதுகாப்பு மற்றும் தனிமனித சுதந்திரத்திற்கான உரிமை],14 [சட்டத்தின் முன் அனைவரும் சமம்] மற்றும் 15[மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தலைத் தடுத்தல்] ஆகியவற்றை மீறுகிற தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு மனிதரின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக இருக்கிறது.வயது வந்தவர்கள் [18 வயது நிரம்பியவர்கள்] பரஸ்பரம் சம்மதத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடத்தடை இல்லை.

நீதிமன்றங்களில் ஆயிரமாயிரம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. அனைத்திற்கும் தீர்ப்பு கிடைக்கலாம்.நீதி தான் கிடைப்பதில்லை. சனாதன சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற இந்த பேரதிசயம் பாலியல் சிறுபான்மையினர் வரலாற்றில் ஆகப்பெரிய வெற்றி.இதற்கு முந்தைய வெற்றி ஒன்று இருக்கிறது. ‘ஸ்டோன்வால் கலவர’ நிகழ்வு. தம்மை ஒடுக்குகிற அதிகாரத்துவ சமூகத்தை எதிர்த்துத் தன்பால் புணர்ச்சியாளர்கள் நடத்திய முதல் போராட்டம் இதுவே. அமரிக்காவில் 1950 மற்றும் 60 களில் பாலின சிறுபான்மையினரை பாரபட்சமின்றி அங்கீகரித்த இடம் ‘பார்கள்’ மட்டுமே. மா•பியாவுக்கு சொந்தமான ‘ஸ்டோன்வால்’ கூட ஒருவகை பார் ஹோட்டல் தான்.இது நியூயார்க்கின் அருகில் உள்ள கிரின்விச்சில் அமைந்திருந்தது. பெண் உடைகளை அணியும் ஆண்கள், திருநங்கைகள்,பாலியல் தொழிலாளிகள், ஆதரவற்ற இளைஞர்கள் ஆகியோருக்கான புகலிடமாக ‘ஸ்டோன்வால்’ இருந்தது.

1960களில் இங்கு பொலிஸ் சோதனை செய்வது வழக்கமாகிப் போன போது,அதனை எதிர்த்து இவர்களால் வெடித்த கலவரம் காக்கிச்சட்டைப் போலிஸ்களை மட்டுமில்லை கலாச்சார போலிஸ்களையும் திணறடித்தது. இதுவே இவர்களது முதல் வெற்றி. வெகு விரைவிலேயே அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வலுப்பெற்ற அமைப்பாக இவர்கள் உருவெடுத்தனர். ஆறு மாதங்களிற்குள் தன்பால் புணர்ச்சியாளர்களுக்கான அமைப்பு ஒன்று நியூயார்க்கில் நிறுவப்பட்டது.சமுதாயத்தில் தங்களின் உரிமைகளை வளர்த்தெடுக்க ‘கே’ மற்றும் ‘லெஸ்பியன்’களுக்கான 3 பத்திரிக்கைகளை இந்த அமைப்பு துவக்கியது.

சில வருடங்களுக்குள்ளாக தன்பால் புணர்ச்சியாளர்களுக்கான அமைப்புகள் அமரிக்கா மற்றும் உலகெங்கும் நிறுவப்பட்டன. ‘ஸ்டோன்வால்’ கலவரத்தின் முதலாம் ஆண்டு நிறைவின் போது முதல் முறையாக தன்பால் புணர்ச்சியாளர்களின் பேரணி லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் நியூயார்க்கில் 1970 ஜுன் 28 ஆம் நாள் நடத்தப்பெற்றது.இதன் பிறகு,1973 இல் APA[American Psychiatric Association] தன்பால் புணர்ச்சியை மனித உடலுறவின் இயல்பான மற்றொரு வகைமை என ஏற்றுக் கொண்டது.கலாச்சார அதிகாரங்களின் முன் அடங்கமறுக்கும் திராணியோடு உரிமைக்காக குரலுயர்த்திய ‘ஸ்டோன்வால் கலவரத்தை’ நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாத இறுதியில் தன்பால் புணர்ச்சியாளர்களின் பேரணியும், நிகழ்வுகளும் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.

தென்னிந்தியாவிலேயே முதல் -முறையாக சென்னையில் கடந்த ஜுன் மாதம் இத்தகைய பேரணி நடைபெற்றது.200 LGBT [Lesbian Gay BI-sexual Transgender] உறுப்பினர்கள் மட்டுமன்றி அவர்களது நண்பர்கள், பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.தம்மைக் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஜுன் மாதம் முதலிலிருந்தே துவக்கி, மாத இறுதியில் ‘பெருமைமிகு வானவில் பேரணியை’ மெரினா கடற்கரையில் நடத்தினார்கள்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. 148 ஆண்டுகால அதிகார வன்முறையை அதிரடியாக முடக்கிப் போட்டிருக்கிறது உயர்நீதிமன்றத் தீர்ப்பு. நீதிபதிகளை உளமாரப் பாராட்ட வேண்டும்.தமது உறவுகளுக்குக் கிடைத்திருக்கும் சட்டஅங்கீகாரம் தன்பால் புணர்ச்சியாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.மனித உரிமை ஆர்வலர்கள் தீர்ப்பை பெரிதும் வரவேற்கிறார்கள்.தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் இயக்குனர் சுஜாதா ராவ், ‘இது ஒரு நல்ல தீர்ப்பு.பி¡¢வு 377 ஐ நீக்க வேண்டும் என்பது தான் எங்களின் நீண்ட நாள் கோரிக்கை.தற்போது நிறைவேற்றப் பட்டிருப்பதின் மூலம் எஸ்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை அணுகுவதில் உள்ள சிரமம் பெருமளவு குறைந்துவிடும்’ என்று சொல்லி இருக்கிறார்.ஐ.நா மற்றும் பல்வேறு உலக அமைப்புகளும் நீதிமன்றத் தீர்ப்பை பாராட்டி உள்ளன.

தீர்ப்புக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு போராட்டங்களின் மூலம் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிற மதவாத-கலாச்சார அமைப்புகள் இதன் உச்சமாய் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.தமக்குச் சாதகமான தீர்ப்பு கிட்டும் என்று இவர்கள் இரண்டைப் பொருத்தமட்டில் நம்புகிறார்கள். ஒன்று உச்சநீதிமன்றம். மற்றொன்று மத்திய அரசு.

டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ‘ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கூடாது’ என்று தனது தரப்பில் மத்திய அரசு கூறியது. ‘இது ஒரு கிரிமினல் குற்றம்.இதனை நாட்டில் அனுமதிக்க முடியாது’ என்று கொதித்தெழுந்தார் சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி.ஆனால் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு ‘கழுவுற மீனில் நழுவுற மீன்’ என்கிற கதையாய் இருக்கிறது.சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகிய மூவா¢ன் தலைமையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் நன்மை தீமைகள் அலசி ஆராயப்பட்டு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.இதனைப் பரிசீலித்த பின், ‘இதில் உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டது மத்திய அரசு.இனி கலாச்சாரவாதிகளின் நம்பிக்கை ஒன்றே ஒன்று தான். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது.தீர்ப்பிற்காக காத்திருக்கும் பொழுதில் வழக்கு தொடுத்த கலாச்சாரவாதிகளின் நிலைப்பாட்டைக் கொஞ்சம் விவாதிப்போம்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கலாச்சாரவாதம் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு போகிறது என்றாலும் அவற்றுள் பிரதானமானது ‘ஓரினச் சேர்க்கை இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’ என்பது தான். நன்மை*தீமை, நாம்*அவர்கள் உள்ளிட்ட எதிர்வுகளின் கதையாடல்கள் எல்லாம் கட்டுடைக்கப் பட்டுவிட்ட நிலையில் இந்த இயற்கை*செயற்கை நமக்கொன்றும் புதிதில்லை தான். ஆனபோதிலும் கலாச்சாரத்தைத் தோலுரித்துப் போடுவதென்பது ஒருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் நிகழ்த்த வேண்டி இருப்பதால் வழமை தானே என எளிதாகக் கடந்துவிடுவதற்கில்லை.

‘ஓரினச் சேர்க்கை இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’ என்பது இவர்களின் வாதம்.தன்பாலினரோடு கொள்கிற உறவு செயற்கையானது என்றால் எதிர்ப்பாலினரோடு கொள்கிற உறவு இயற்கையானதாக இருக்க வேண்டும். ஆனால் இயற்கை என்பதற்குக் கலாச்சாரத்தின் வரையறை ‘யோனியும், குறியும் நேரடியாகக் கொள்கிற உறவு’ என்பதுதான். இந்த ‘நேரடி உறவை’ அத்துமீறுகிற முன்னின்பம், வாய்வழிப்புணர்ச்சி, குதப்புணர்ச்சி…உள்ளிட்ட அனைத்தும் செயற்கையானது.

புணர்ச்சியின் பன்மைத் தன்மைகள் மறுக்கப்பட்டு ‘வாரிசு உருவாக்கம்’ என்கிற ஒற்றைத் தன்மை கட்டாயமாக்கப்படுவதன் பின்புலம் தனியுடைமையின் தோற்றம்.இதன் உடனிகழ்வு யோனியின் மீதான சொத்துடைமை எண்ணம். சுருங்கச் சொல்வதெனில்,இந்த ‘இயற்கை’யின் வரையறை தான் ஆதிக்கப்பாலியலின் முதல் காமசூத்திரம்.பெண்ணுடலின் மீதான முதல் அதிகாரக் கட்டமைப்பு.

இந்த ‘இயற்கை’ கொட்டிக் கவிழ்க்கப்பட்டால் அது செயற்கைமட்டுமில்லை. பெருங்குற்றம்.தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.தண்டனையை வழங்குவதற்காய் உருவாக்கப்பட்ட அரச அதிகாரமே ‘பிரிவு 377’.இதன் வரையறைப்படி, தன்பால் புணர்ச்சி மட்டுமில்லை,’வாரிசை உருவாக்காத எந்த ஒரு பாலியல் உறவும்[ வாய்வழிப்புணர்ச்சி, குதப்புணர்ச்சி...] இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது.சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியது’. இங்கொன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.கலாச்சாரத்தின் எல்லைகள் உடைபடுகையில் தண்டிக்கப்படுவர்கள் மனிதர்கள் இல்லை.பெண்கள். ‘எத்தனை பேர் நட்ட குழி’ என்று எகத்தாளம் பேசுகிற இந்த கேடுகெட்ட சமூகம் ‘எத்தனை பேரில் நட்ட குறி’என்று கேட்க எத்தனித்ததும் இல்லை.இவர்கள் 377 இற்காக தவமாய் தவம் கிடப்பதன் முக்கிய நோக்கமும் தன்பால் புணர்ச்சியாளர்களைத் தண்டிப்பது அல்ல.லெஸ்பியன்களைத் தண்டிப்பது.லெஸ்பியன்களை மட்டுமல்ல கட்டமைப்புகளைக் கலைத்துப் போடுகிற கலகக்காரிகளைத் தண்டிப்பது.

அதிகாரத்தால் ஆட்டிப்படைத்து எப்படியேனும் சட்டத்தை மீட்டுவிட வேண்டும்.இல்லையென்றால் குடும்ப அமைப்பு சிதைக்கப்படுவதன் மூலம் பெண்ணின் சுதந்தரவெளி அகண்டமாவது,யோனியின் மீதான இனப்பெருக்க கட்டாயம் குப்பையில் எறியப்படுவதால் பாலியல் களம் மீண்டும் இன்பத்துய்ப்பிற்கே உரியதாக்கப்படுவது உள்ளிட்ட புரட்சிகள் ஆணாதிக்கத்திற்கு ஆப்பு வைக்கும் என்பது இந்த குள்ளநரிகளுக்குத் தெரியாதா என்ன?

தன்பால் புணர்ச்சியை வேரறுக்கும் முயற்சியில் இவர்களால் முன்வைக்கப்படும் குற்றங்களில் சில:

1.பால்வினை நோய்கள் பெருகுகின்றன. 2.இப்போது ஓரினப் புணர்ச்சியை ஆதாத்தால் பிறகு விலங்குப் புணர்ச்சியையும் ஆதரி என்பார்கள். 3.எதிர்ப்பால் உறவில் மட்டுமே முழுத்திருப்தி அடைய முடியும். 4.வகுக்கப்பட்ட ஒழுக்கங்களை மீறுவது தான் அடிப்படை உரிமையா? உணவு,உடை,உறைவிடம் தான் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை.

1.பால்வினை நோய்கள் பாதுகப்பற்ற உடலுறவால் ஏற்படுபவை. எதிர்ப்பாலினருக்கான உறவில் இதே பிரச்சனை எழும்போது ‘உறைகள்’ தானே தீர்வாய் சொல்லப்பட்டது. ’எஸ்.ஐ.வி உள்ளவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே அவர்களுக்கும் வளர,வாழ,படிக்க,பழக உரிமை உண்டு-இனி ஒரு விதி செய்வோம்’ என தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், நம்பிக்கை மையம் போன்றவை தமிழகத்தைச் சபதமேற்கச் செய்து கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் வாயைப் பொத்திக் கொண்டிருக்கிற கலாச்சாரவாதிகள் இப்போது மட்டும் வாயில் வயிற்றில் அடித்து கொள்வது ‘சிறுபான்மையினர்’ என்பதாலா? இந்த உறவு மனித இனத்திற்கு கேடு என்றால் உலக சுகாதார நிறுவனம்[WHO] 1992 இல் தன்பால் புணர்ச்சியை அங்கீகாத்ததாக அறிவித்தது எப்படி?

ஒருவகை. தமக்கு உதவிய வளர்ப்பு விலங்குகள் மீது மனிதருக்கு இருந்த மோகமே[அன்பு] விலங்குப் புணர்ச்சியாய் முடிந்தது. இன்றைக்கும் pet animals மீதான மோகமே விலங்குப் புணர்ச்சிக்கு அடிப்படையாய் இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.தனது உடலோடு பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் புறநிலையைத் தேர்வு செய்வது தனிநபர் உரிமை. பெல்ஜியம், ஜெர்மனி,ரஷ்யா போன்ற நாடுகள் விதிகளுக்கு உட்பட்டு இதை அனுமதித்து இருக்கின்றன. விலங்குப் புணர்ச்சி பாலியலின் ஒரு வடிவம் இல்லையென்றால் காமக் கலைக்கோவிலில்[கஜுராகோ] மனிதரும், விலங்கும் புணர்கிற சிற்பம் தத்ரூபமாய் வடிக்கப்பட்டிருப்பதன் பொருள் என்ன?

3.இதை விடவும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வேறொன்று இருக்க முடியுமா? இந்த எதிர் உறவில் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம் என்ன?நிரப்பப் படவேண்டிய பாத்திரம். துய்க்கப்பட வேண்டிய பொருள் அவ்வளவே.உதட்டைக் கடித்தால் அந்தப்பக்கம் பத்து பெண்களும், உற்றுப்பார்த்தால் இந்தப்பக்கம் பத்து பெண்களும் மயங்கிச் சரிவதெல்லாம் நாறிப்போன தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.ஆதிக்கப் புணர்ச்சியில் பெண்ணுக்கு மிஞ்சுவது வெறுமை மட்டுமே.எதில் இன்பம் என்பது தீர்மானிக்கப்பட்டதல்ல. தீர்மானிக்கப்படுவது.

4.’பசி,நித்திரை,புணர்ச்சி ஜீவ சுபாவம்’ நமது பெரியார் சொல்லிக் கொடுத்து நூற்றாண்டு கடந்துவிட்டது.இன்னுமா ஒன்றாம் வகுப்புப் பாடத்தையே நம்பிக்கொண்டிருப்பது? பாலுணர்ச்சி பிறப்பிலேயே ஒட்டிப்பிறந்த உணர்ச்சி-அடிப்படை உணர்ச்சி.இதற்கே உரிமையில்லையென்றால் எப்படி?உடை,உறைவிடமெல்லாம் வெறும் கற்பித உணர்ச்சிகள் தானே!

கலாச்சாரத்தின் முகத்தில் அறைவதற்கு நம்மிடம் ஆயிரமாயிரம் எதிர்வினைகள் இருக்கின்றன.இறுதியாக ஒரே ஒரு உண்மை.மனித சமூகத்தை உள்ளுணர்ச்சிகள் தான் வழிநடத்தும் அறநெறிகள் அல்ல.

2

அப்போது நாங்கள் கிராமத்தின் வாடகை வீடொன்றில் குடியிருந்தோம். எங்கள் ஊ¡¢ல் கோடைக் காலமென்றால் பெரும்பாலும் வீட்டிற்குள் உறங்கமாட்டார்கள்.ஒரு கோடைக்கால இரவு.வீட்டு முற்றத்தில் பாய் விரித்தோம்.எங்களுடன் வீட்டு சொந்தக்காரர்களும். நானும் அந்த வீட்டின் கடைசி பெண்ணும் அருகருகில்.எல்லோரும் கண்ணயர்ந்த நடுநிசி அவள் என்னை நெருங்கினாள்.நான் விலகவில்லை.தீண்டினாள்.சுகித்தாள்.காற்றில் மிதக்கும் பஞ்சானேன். அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது.அவளுக்கு 15 க்கும் மேல். .சமீபத்தில் அவள் மரணித்தாள்.மூளைக்குள் ரத்தம் கட்டி, இதயம் பலவீனம் அடைந்து உடல் முழுக்க பல நோய்கள் தாக்கியிருந்தன. இதன் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே உணர்ந்திருக்க முடியும் என்றும், அப்போதே சொல்லி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும் டாக்டர்கள் சொன்னார்கள்.அவளுக்கு சொல்லத் தெரியாது.அவள் மனவளர்ச்சி குன்றியவள்.உளநோய்க்குறிகளுக்கு குழந்தைப் பாலுமையின் பாதிப்புகள் முக்கிய காரணமாய் இருப்பதாக உளப்பகுப்பாய்வியல் கூறுவதை இங்கு நினைவிலிருத்துவது அவசியம்.

கிட்டத்தட்ட இதே வயது.நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அவன் 5ஆம் வகுப்பு.அவன் என்னை ‘சைட்’ அடித்துக் கொண்டிருப்பது என் வகுப்பு அறிந்த கதை.நடந்து வருகையில் தனியாக சிக்கிக் கொண்ட நேரம் என்னை வழிமறித்தான். அருகில் வந்தவன் சொன்னான் ‘வாயேன் மீனா இப்பவே பூண்டிக்கு [பக்கத்து ஊர்] ஓடிப் போயிடலாம்.அங்க என்னோட பெரியப்பா இருக்கார்.ரொம்ப நல்லவர். நமக்கு கல்யாணம் பண்ணி வெச்சி சாப்பாடுலாம் போடுவார்.அவர் வீட்லயே தங்கிக்கலாம்’. சொன்னதோடு மட்டுமில்லை, அவனை ஏறெடுத்தும் பார்க்காது இருந்த என் முகத்தில் இதழ் பதித்துவிட்டு ஓடிப்போனான்.அந்த நிகழ்விலிருந்து அவன் மீதான வெறுப்பு பலமடங்கு கூடியது.அதை வெளிக்காட்டவும் செய்தேன்.அவனை பார்த்த மாத்திரத்தில் முகத்தை அருவருப்பாக வைத்துக் கொள்வது, அவனை தூரத்தில் பார்த்ததும் உமிழ்நீரை சேகரித்து வைத்து அவனருகில் வந்ததும் த்த்தூ….. என்று காரி உமிழ்வது இப்படியாக[என் செயல்களை எண்ணி நானே நொந்து கொள்பவைகளில் இது முதன்மையானது.அவனது குமரப் பருவத்தில் அவன் மனநோயால் பாதிக்கப்பட்டான். உடனடியாய் அவனுக்குத் திருமணம் முடித்தார்கள்].நான் உணர்ந்ததில்லை என்ற போதும் உண்மையில் அவன் மீது எனக்கு ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

இதே வயதில், இதே வேட்கையோடு என்னை நெருங்கிய உடலை ஆலிங்கனித்து கொண்டாடிய என் பாலுமை இந்த உடலின் மீது மட்டும் அசூசையை உமிழ்ந்தது.காரணம் அங்கே ‘பெண்’ இங்கே ‘ஆண்’. அவள் இதையெல்லாம் யாரிடமும் சொல்லமாட்டாள் என்பது உறுதியாகத் தெரியும். நான் ஒப்புக்கொண்டிருந்தால் பள்ளி முழுக்க அவன் டமாரம் அடித்திருப்பான்.ஒருவேளை அவள் சொல்லிவிட்டாலும் அம்மாவிடம் தர்ம அடியின் வலிகளோடு இது முடிந்து போகும். அவன் சொல்லிவிட்டால்….? அநேகமாய் என் எதிர்கால திருமண வாழ்வு குறித்துத் தான் நான் கவலைப்பட்டிருக்க வேண்டும்.சிமோன் தி பொவாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ‘நானும் பிறக்கவில்லை உருவாக்கப்பட்டிருந்தேன்’.

திருமணத்திற்கு முன் எனது உடல் தீண்டப்படாமல்[ ஆணால் ] புனிதமாய் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை இந்த கலாச்சார சமூகம் என் நனவு மனதிற்குள் அழிக்க இயலாதபடி எழுதி முடித்த கணம் எனக்குள் நனவிலி [unconscious ] பிறந்தது. பாலியலைக் கொண்டாடிக் களிக்கும் சுதந்திரமும், தகுதியும் [பருவமடையாதவள்] எனது சின்னஞ்சிறிய உடலுக்கு இல்லையென்று இந்த சமூகம் வஞ்சித்தபோது, தேங்கிக்கிடந்த வேட்கைகள் நனவிலியின் ஆழத்தில் புதைந்து கதறியது. கதறலின் பேரோசையை இந்த எழுத்துக்களில் மட்டுமில்லை ஒவ்வொரு மனித நனவிலியின் ஆழத்திலும் நிச்சயம் எதிரொலிக்க கேட்கலாம்.சமூக விழுமியங்களுக்கு அஞ்சி உள்ளுக்குள் அமுக்கப்படும் [repression] உணர்ச்சிகளின் புதைவே ‘நனவிலி’. எல்லா மனங்களும் ஏதேனும் ஒரு சமயத்தில் அஞ்சுபவையே. விருப்புகளை புதைத்துக் கொண்டிருப்பவையே.

மனித உளவியலைப் பகுத்தாய்ந்த சிக்மண்ட் •ப்ராய்டின் கருத்துகளை இங்கு நினைவு கூர்தல் பொருத்தமாக இருக்கும். பாற்குறிகள் முதிர்ச்சி அடைந்த உடல்கள் மட்டுமே கலவிக்கு உரியவை, பருவமடைதலுக்குப் பிறகே பாலியல் உணர்ச்சிகள் எழுகின்றன [இதனால் தான் கிராமப்புறங்களில் பருவமடைந்த பிறகு பெண்ணின் மீதான கண்காணிப்பு தீவிரமடைகிறது], எதிர்ப்பாலோடு கொள்கிற உடலுறவே ‘இயற்கையானது’ என்றெல்லாம் கலாச்சாரம் கட்டமைத்தவைகளில் ‘பெரும்பான்மையைக்’ கட்டுடைத்துப் போட்டது சிக்மண்ட் •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு அறிவியல். [‘எல்லா பெண்களும் ஆண்குறி ஏக்கம் கொண்டவர்கள்’ ‘பெண்= -ஆண்’ ‘விலங்கு மோகம் நோய்க்குறிகளில் ஒன்று’ உள்ளிட்ட •ப்ராய்டின் கோட்பாடுகள் மீதான விமர்சனத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம்]

தன்பால் மோகத்தைக் குரங்கினத்தின் தொடர்ச்சி என்றும், தன்பால்மோகிகள் இயல்பு நிலையினின்று பிறழ்ந்த தனித்த பண்புடையவர்கள் இல்லை என்றும் சொல்கிற •ப்ராய்ட் நனவிலியின் பாலியல் வேட்கைகளில் ஒன்றாக தன்பால்மோகம் இருப்பதாகவும் கூறுகிறார். •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வில் குழந்தைப் பாலுமையே முக்கிய இடம் வகிக்கிறது.மனிதப் பிறப்பின் முதன்மைக் குறிக்கோள் பாலின்பத்தை அடைவது. மனிதா¢ன் முதல் மோகப்பொருள் தாயின் மார்பகம்.குழந்தை தனது உடலியல் தேவைகளைக் கொண்டு பாலின்பத்தை நிறைவேற்ற கற்றுக்கொள்கிறது.அதாவது, முதலில் குழந்தையின் உடற்பசியை போக்குவதற்கான தேவைப் பொருளாக இருந்த மார்பகம் நாளடைவில் இன்பம் துய்ப்பதற்கான மோகப்பொருளாக மாறிவிடுகிறது.இந்நிலையில் பாலை உள்வாங்கிக் கொள்வதை விடவும் காம்பை சூப்புவதின் இன்பத்தை அடையவே குழந்தையின் மனம் விழைகிறது.வளர்ந்துவிட்ட நிலையில் தாய்ப்பால் மறுக்கப்படுகிறபோது தனக்கான மோகப் புறநிலையாக தன்னையே மாற்றிக் கொள்கிறது. மார்பகத்திற்கு பதிலாக கை அல்லது கால் விரல்களை சூப்பி இன்பம் அடைகிறது. இந்த நிலை தான் தன்மதனத்தின் – வேறு வார்த்தையில் சொல்வதானால் சுயஇன்பத்தின் துவக்கம். ஆக நாம் எல்லோருமே சுயஇன்ப மோகிகள் தான்.

அடுத்ததாக •ப்ராய்ட் போட்டு உடைப்பது நமக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருபால் தன்மையை[ mono-sexuality]. உள்ளத்தின் பாலுணர்ச்சியே இரட்டைப்பாலியல் இயல்பு [bi-sexual nature] கொண்டது . இருபால் தன்மைகளைக் கொண்டுள்ள இரட்டைப்பாலுமை அகிலப்பண்பு [universal character] என்று சொல்கிறார். மேலும், மாற்றுப்பால் மோகம் [transexualism] என்பது அறுவை சிகிச்சைகள் மூலம் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் மாற்றமடைவது மட்டுமில்லை தமக்கான புனைப்பெயர்களில் பெண்கள் ஆணின் பெயரையும் ஆண்கள் பெண்ணின் பெயரையும் வைத்துக் கொள்வது அல்லது இணைத்துக் கொள்வது கூட மாற்றுப்பால் மோகமே என்கிறார்.இயற்கை என்பது ஒற்றையானதல்ல.வரையறைகளால் வகுக்கக் கூடியதும் அல்ல.அது முன்முடிவுகளற்றது.கற்பிதங்களுக்கு அப்பாற்பட்டது.அதற்கான ஒருவகை சான்று •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வியல்.

என்னுடைய 12 ஆவது வயதில் முதல் முறையாக ‘லெஸ்பியன்’ என்கிற வார்த்தையையும்,அதற்கான அர்த்ததையும் தமிழ் நாளிதழ்களின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.அப்போதெல்லாம் லெஸ்பியன் பற்றிய சர்ச்சைகளும், லெஸ்பியன் உறவு கொண்டவர்கள் சிக்கிக்கொண்டது குறித்த ‘கிலுகிலுப்பூட்டும்’ தகவல்களும் இதழ்களில் வந்த வண்ணம் இருந்தன.அவற்றில் பெரும்பாலானவை லெஸ்பியன்களை நக்கலடிப்பவையும்,  ‘கலி முத்திப்போச்சு’ என்கிற வறட்டுத்தனங்களுமே. இவற்றை வாசிக்கும் போதெல்லாம் அந்த கோடைக்கால இரவு நினைவில் நிழலாடும்.அனிச்சையாய் குற்றவுணர்ச்சி பிடித்தாட்டும். கைகளில் விலங்கு தொங்கும். என்னை நானே வெறுத்தேன். சில வேளைகளில் மன உளைச்சலுக்கும் ஆளானேன்.ஆனால் எந்தச் சூழலிலும் என்னுடைய நெருங்கிய தோழிகளிடம் கூட நான் இதைப் பகிர்ந்து கொண்டதில்லை. அவர்கள் முன் ஒரு குற்றவாளியாக என்னைப் பகிரங்கப்படுத்த விரும்பாததே காரணம்.

ஏறக்குறைய 18 வருடங்கள் ஓடிக்கழிந்துவிட்டன.ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ளாத இந்தப் பரமரகசியத்தைப் பட்டவர்த்தனமாக்குகிறேன் நாடறிய-உலகறிய.இப்போது என் கைகளில் விலங்கில்லை. எனக்கு குற்றவுணர்ச்சியுமில்லை. என் கண் முன்பாகவே நான் மாறிக்கொண்டு வருகிறேன். என் கண் முன்பாகவே இந்தச் சமூகமும் மாறிக்கொண்டு வருகிறது.இப்போதெல்லாம் நாளிதழ்களில், இணையப் பக்கங்களில் லெஸ்பியன்கள்/தன்பால் புணர்ச்சியாளர்களது சிலாகிப்புகளையும், அவர்களுக்கான ஆதரவுகளையும் தான் அதிகம் பார்க்க முடிகிறது. LGBT யினரின் பேரணியில் பெற்றோர்கள் பங்கெடுக்கிறார்கள். நண்பர்கள் ஆதரிக்கிறார்கள். சட்டம் ஒருபுறம் அங்கீகரிக்கிறது. உலக அளவிலான பாராட்டையும் பெறுகிறது.

கலாச்சாரம் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம்.தீர்ப்பு கிட்டும் வரை தொடர்ந்து போராடலாம். ‘இயற்கைகளை’ தொடர்ந்து கட்டமைக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம்.கலாச்சாரத்தின்-ஆணாதிக்கத்தின் எல்லை சுருங்கிக் கொண்டு வருகிறது. மறுக்க முடியாது, ஒருநாள் அது இல்லாமலும் போகலாம்.

நன்றி: தீராநதி(நவம்பர் 2009)

→ Leave a Commentபகுப்புகள்: கட்டுரைகள்

குருதியிலெழுதும் கற்பிதங்கள்

நவம்பர் 18, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

         பின் கட்டப்பட்ட  கைகள்
         மறைத்துக் கட்டிய கண்கள்
         மௌனமாக்கப்பட்ட நாவுகள்
         மண்டை பிழக்க வேட்டுகள்
         மடிந்து விழுந்த கால்கள்

         துப்பாக்கி பிடித்த கைகளில்
         மனிதம்
         நிச்சயமாய் இறந்து போயிற்று.
 
         ஆஷ்விச்,வெலிக்கடை,வந்தாறுமூலை,அபுகிரைப்,
         குவான்டனாமோ,குஜராத்………இன்னும் பல…
         சிறைகளில்
         வெளிகளில்
         சித்திரவதை முகாம்களில்
         வீடுகளில்
         செத்து விழுந்து கொண்டே
         மனிதங்கள்.
 
         மதங்களைக் காக்க
         மனிதரைக் கொல்லும்
  மடையர்களுக்குத் தூ…..தூ….தூ…

        குருதி வழிந்து
         ஊற்ற(க்)
        குடித்துச் செழிக்கும்
  மொழி அழிக……அழிக……….அழிக………
       
         பல மனிதர் தின்று
     ஓரினம் வாழ்தல்   ஐயோ கேடு !

         தர்மினி

→ Leave a Commentபகுப்புகள்: கவிதைகள்

‘நான் சரவணன் அல்ல வித்யா’ : ஒரு உரையாடல்

நவம்பர் 10, 2009 · 3 மறுமொழிகள்

Naan Viddiya_Book Cover BackNaan Viddiya_Book Cover Front

 தர்மினி               

                பலருக்கும் திருநங்கைகள் பற்றிய பிரமைகள் தமிழ்த் திரைப்படங்களில் அவர்களைப் பற்றிக் கட்டமைப்பதில் தோன்றுகிறது. ஒரு காட்சியிலோ பாடலின் இடையிலோ தோன்றுதல் என்பதாக அமைகிறது. அவற்றின் தொனி எதுவென்பதும் அக்காட்சிகளில் தெளிவாகத் தென்படும். பொதுவெளிச்சமூகம் திரு நங்கைகள் பற்றிய எதுவிதமான புரிதல்களும் அற்றதாகவே உள்ளது. அவர்களுடைய பிரச்சனைகளை உணர்வுகளை உடலின் மாற்றங்களை விளங்கிக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

                      அவர்களும் சாதாரணமாக எல்லாக் குழந்தைகளையும் போலவே ஒரு குடும்பத்தில் பிறக்கிறார்கள். பதின் பருவமானதும் தன்னுடலின் அடையாளம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எண்ணங்களுடன் போராட்டம் ஆரம்பமாகிறது. தமது பாலினத்தை ஏற்றுக்கொள்ள முடியாத மனிதர்களாகிறார்கள். உடலுக்குப் பொருத்தமற்ற உடையை அணிந்தது போல அசௌகரியத்தை அனுபவிக்கின்றனர். அவர்களது வாழ்க்கையின் முக்கியமான பிரச்சனை தமது அடையாளத்தை நிலைநாட்டுதல் என்பதாகிறது.

                      ஒரு ஆண் தனது ஆர்வங்களும் செயற்பாடுகளும் பெண்ணுடையதாகவும் தன்னுடலைப் பெண்ணாகவே மற்றவர் முன்னிலையில் அடையாளப்படுத்தவும் விரும்புகிறார். அவரால் ஆண் என்ற அடையாளம் வெறுக்கப்படுகிறது. இந்த வேதனையைப் பொறுக்க முடியாதவர்கள் குடும்பம், சமூகம் தரும் எல்லா விதமான இழிவுகளையும் தாங்குகின்றனர். அவற்றை எதிர்கொண்டு போராடத் தயங்குவதில்லை.

                 செப்ரம்பர் 2008 புதிய கோடாங்கியில் வெ. முனிஷ் என்பவரால் ஆண்மை + பெண்மை = அரவாணியம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதிலே பின்வருமாறு எழுதியுள்ளார். ‘ஆண்மை மிகுந்தவர்கள் ஆண்கள். பெண்மை மிகுந்தவர்கள் பெண்கள். ஆண்மையும் பெண்மையும் கலந்தவர்கள் ………………..? இவர்கள் உடலளவில் ஆணாக இருப்பார்கள். உள்ளத்தளவில் பெண்ணாக இருப்பார்கள். இன்னும் சிலர் உடலளவில் பெண்ணாக இருப்பார்கள். உள்ளத்தளவில் ஆணாக இருப்பார்கள். எங்கே இருக்கிறார்கள் இவர்கள்? உலகத்தில் மனிதன் வாழக்கூடிய அனைத்து இடங்களிலும்’ என்று குறிப்பிட்டு தொடர்ந்து ஆண்மையும் பெண்மையும் திரிந்தவர்களைக் குறிக்கும் பெயர்களைப் பட்டியலிடுகிறார். தொல்காப்பியம் தொடங்கி நவீன இலக்கியங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ள பெயர்கள் பின்வருமாறு:      ஆண்மை திரிந்தவர்கள், பெண்மை திரிந்தவர்கள், பேடி, அலி மருள், எச்சம், அண்ணகள், அண்ணாவுன், அல்லி, அழிதூஉ, ஆணலி, இடடி, இப்பந்தி, கிலிபம், கிலீபம், கிலீவம், கோஷா, சண்டகம், சண்டன், தூதுபரன், நபும்ஸகம், நாமர்தா, பண்டகன், பெட்டையன், பெண்டகம், பெண்டகன், பெண்ணைவாயன், பேடர், பேடு, பேதை, மகண்மா, வசங்கெட்டவன், வண்டரவன், வருடவரன், வறடன், அஜக்கு, ஒம்பது, கீரைவடை, பொட்டை, பொண்டுகன், மூன்றாவது பாலினம், பாலினமாறிகள், பெண்கள், அரவாணிகன், திருநங்கைகள் என்பதாகப் பெயர்ப்பட்டியல் முடிகிறது.
 
                உயர்வு, தாழ்வு என்ற இரு வகையினுள் இப்பெயர்களை வகுக்கலாம். இருவிதமாகவும் குறிப்பிடப்படுவது புலனாகிறது. நாம் மனித இனத்தின் இரு பாலின வகைப்படுத்தலை கேள்விக்குட்படுத்த வேண்டியதாகிறது. இனப்பெருக்கத் தொடர்ச்சியற்ற இச்சமூகம் தனக்கென குடும்ப அமைப்புகளையும் தனக்கேயுரிய சடங்குகளையும் மரபுகளையும் கொண்டுள்ளது. இவர்கள் பற்றிய வாய்மொழிக் கதைகள் அதிகமாகவும் எழுத்து வழிச் செய்திகள் மிகமிகக் குறைவாகவும் காணப்படுகின்றன.

          தற்போது பரவலாக அழைக்கப்படும் அரவானி என்னும் பெயர் உருவான சம்பவம் ஒன்று உண்டு.

               விழுப்புரத்தின் கூவாகம் கிராமத்தில் ஆண்டு தோறும் கூத்தாண்டவர் ஆலயத் திருவிழா நடைபெறும். 1994ம் வருடம் அத்திருவிழாவில் அந்த மாவட்ட பொலிஸ் அதிகாரி ஆர்.ரவி கலந்துகொண்டு அரவானி என்னும் பெயரைச் சூட்டினார்.

                மகாபாரதக் கதையில் அர்ச்சுனனின் மகனான அரவான் போரின் வெற்றிக்காகப் பலி கொடுக்கத் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அவன் திருமணமாகாதவன். போருக்கு முதல் நாள் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்கிறான். கிருஷ்ணன் பெண் வேடத்தில் (மோகினி அவதாரம்) சென்று திருமணம் செய்கிறார். அடுத்த நாளே அரவான் பலிக்களம் செல்கிறான். இதனை அடியொற்றியே அரவானைத் தம் கணவனாக ஏற்று வருடத்தில் ஒரு முறை தாலி கட்டுகின்றனர். மறுநாள் தாலியைக் கழற்றி ஒப்பாரி வைக்கின்றனர். அவர்களது வாழ்வின் துயரங்கள், சமூகச் சங்கடங்கள், தமது பிறந்த வீட்டாரின் புறக்கணிப்பு, இவைகள் ஒப்பாரியில் அடிப்படையாக அமைகின்றன. அரவானின் மனைவி அரவானி என்பது காரணப் பெயராகவும் சமயம் சம்பந்தப்பட்ட மரியாதைக்குரியதாகவும் இருப்பதால் ஏற்றுக் கொண்டனர். அதன் பின்னர் திருநங்கை என்பதில் ஆண்பால், பெண்பால் சேர்ந்திருப்பதும் மகிழ்வுடன் ஏற்கப்படுகிறது.

             ஆனால் திருநங்கைகள் மீதான அலட்சியத்துடனும் கிண்டல் செய்யும் மனோபாவத்துடனுமே பொதுவெளிச் சமூகம் இருக்கிறது. இவர்களைச் சக மனிதர்களாகப் பார்ப்பதற்கு அது இன்னும் தயாராகவில்லை என்றே சொல்லலாம். குற்றவுணர்வு அற்றவர்களாகவே பொதுவெளிச்சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. திருநங்கைகளுக்கான உதவும் அமைப்புகளோ பெரும்பாலும் இந்தியாவில் HIV தடுப்புப்பணிகள், அறிவுறுத்தல்கள் என்ற ரீதியிலேயே செயற்படுகின்றன. இயற்கையினால் வஞ்சிக்கப்பட்ட இம்மனிதர்கள் தம் வேதனைகளையும் போராட்டங்களையும் இப்போது சொல்லத் தொடங்கிவிட்டனர்.

          தமிழில் 1994ல் சு.சமுத்திரம் அவர்களால் ‘வாடாமல்லி’ என்ற நாவல் எழுதப்பட்டது. அதன் பின் 2005ல் திருநங்கை ரேவதி என்பவரால் ‘உணர்வும் உருவமும்’ என்ற தலைப்பில் வாழ்க்கைக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இதுவே முதல் முதலாக திருநங்கை ஒருவரால் தன் சமூகம் பற்றித் தொகுக்கப்பட்ட  நூலாகும். 2007ம் ஆண்டு ஒக்ரோபர் திருநங்கை பிரியாபாபுவால் ‘அரவானிகளின் சமூகவரைவியல்’ என்ற நூல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 2007 டிசம்பரில் ‘நான் வித்யா’ என்ற புத்தகம் வாழ்க்கை அனுபவங்களாக லிவிங்ஸ்மைல் வித்யா என்ற திருநங்கையால் எழுதப்பட்டது. 2008 யூலையில் ‘அவன் – அது = அவள்’ என்ற தலைப்பிடப்பட்டு யெஸ் பாலபாரதியால் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நெடுங்கதை வெளியிடப்பட்டது. இவை நான் படித்த தமிழில் வெளியாகிய திருநங்கைகள் பற்றிய நூல்கள் ஆகும்.

                 இப்போது நான் எழுதப் போவது ‘நான் வித்யா’ என்ற புத்தகம் பற்றியாகும். ஆணாகப் பிறந்து அது அவரைக் குழப்பத்துக்கு உள்ளாக்கி அதனினின்றும் விடுதலையடைந்த ஒருவரின் உண்மைக்கதை இது. அவரே தன் அனுபவங்களை சற்றும் சோர்வேற்படாதவாறு எழுதிச் செல்கிறார்.

              முன் அட்டையில் கறுப்பு வெள்ளைப் படமாக அவரது முகமும் கண்களும் ஏதோ பேசுவதாகவே தோன்றுகிறது. மேலே ‘ஒரு திருநங்கையின் உலுக்கி எடுக்கும் வாழ்க்கை அனுபவங்கள்’ என எழுதப்பட்டுள்ளது. நான் சரவணன் என்பதில் சரவணன் மேலே சிவப்பு மையினால் வெட்டப்பட்டு வித்யா என்று எழுதப்பட்டிருக்கிறது. பின்னட்டையில் கீழுள்ளவாறு, ‘பெண்மைக்குரிய உணர்வுகள், பெண்மைக்குரிய நளினம், ஆசை, காதல், விருப்பம், தேர்வு அத்தனையும் ஒரு பெண்ணுக்குரியவை. ஆனால் சுமந்து கொண்டிருப்பதோ ஒரு ஆணின் உடல்’ லிவிங் ஸ்மைல் வித்யா என்ற திருநங்கையால் எழுதப்பட்ட புத்தகம் இதுவாகும்.

            இந்தியாவின் திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சரவணன் பெற்றோர் இட்ட பெயர். பிறந்தது 1982. எம். ஏ மொழியியல் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார். நாடகங்களில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்.

    நான் இப்புத்தகத்தை மிகக் குறைந்த நேர இடைவெளிகளை விட்டு வாசித்து முடித்தேன். கையில் எடுத்துப் படித்தால் இடையில் நிறுத்துவது சிரமம். புதியதொரு அனுபவத்தை இந்நூல் கட்டாயம் கொடுக்கும். என் மூளையைப் பிராண்டியது அல்லது வழமை போல் சொல்வதென்றால் இதயத்தைப் பிசைந்தது எனலாம். வாசித்து முடித்த பின்னும் அந்த வசனங்கள் வீட்டினுள் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதை உணர முடிந்தது.

          இப்புத்தகம் 15 அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ளது. முதலாவது அத்தியாயத்தில் நிர்வாணம் எனத் தலைப்பிட்டு அதிர்ந்து போகும் நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பத்திலேயே எழுதிவிடுகிறார். ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் தான் எதற்காக ஏன் பயணிக்கிறேன் என்பதைச் சொல்கிறார். “நிர்வாணத்துக்கு அனுப்பலாம்னு நானி சொன்ன மறுநாளே லோனாவாலா ஸ்ரேஷனில் ஏப்ரல் 25ம் தேதிக்கு புனே ரு கடப்பா டிக்கெட் புக் பண்ணியாச்சு. அன்று தந்தா (பிச்சை)வுக்குப் போகவில்லை.’’

‘’நிர்வாணம் இதற்காக எத்தனை நாள் காத்திருந்தேன். எத்தனை அவமானங்களைச் சுமந்திருந்தேன். என் கோபம், என் சுயம், என் தன்மானம் எல்லாவற்றையும் அடகு வைத்து வெறி கொண்டு பிச்சை எடுத்துச் சேர்த்தது எல்லாமே நிர்வாணத்துக்காகத்தானே’’ என்றவாறாக அவரது பயணத்தின் நோக்கம் எழுதப்பட்டுள்ளது. அவ்வெழுத்துக்களில் தன் உயிர் காக்கும் போராட்டம் போலவே தன் சுயத்திற்காகப் போராடும் ஒரு மனிதனின் வேட்கை தெரிகிறது.

         உடையைப் பெண் போல் உடுத்துகிறார்கள். அலங்காரங்கள் செய்து தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களது ஆண்குறியை சங்கடப்படுத்தும் பொருளாகவே உணர்கின்றனர். அதனை அறுத்தெறிய ஆவேசத்துடன் காத்திருக்கின்றனர். ஆணுறுப்பை மருத்துவர் மூலம் சத்திரசிகிச்சை செய்து அகற்றுதல், அல்லது தாயம்மா முறையில் அகற்றப்படுகிறது. திருநங்கைகளின் சமூக உறுப்பினராகிய தாயம்மா மரபு முறையில் வீட்டில் வைத்து பல்வேறு சடங்குகளுடன் போத்திராஜ மாதாவை வழிபட்டு ஆணுறுப்பை அகற்றுவார். இப்படி இரு வழிகளில் இவ்வுறுப்பு அகற்றப்படும்.

       திருநங்கைகளின் சமூகத்தில் இணைந்தவர்கள் அவர்களின் சட்டங்கள், கட்டுப்பாடுகள், வாழ்க்கை, வருமானம் ஈட்டும் முறைகள் என நன்கு கற்ற பின் நிர்வாணத்துக்கு ஆயத்தமாகின்றனர்.

      மருத்துவமனையில் இடுப்புக்குக் கீழே மரத்துப் போக ஊசி போடப்பட்டு சத்திரசிகிச்சை நடைபெறும். ஆனால் மருத்துவமனைகளும் பணம் வசூலிப்பதை நோக்காகக் கொண்டுள்ளனவேயன்றி இம்மனிதர்களுக்கு சுகாதாரமற்ற அறைகளும் படுக்கை வசதியற்றும் சத்திரசிகிச்சைக்கு பின் புண் ஆறுவதற்கான மருந்துகள் இன்றியும் வெகு அலட்சியமாகவே செயற்படுகின்றன. காரணம் சட்டத்துக்குப் புறம்பான செயல் எனப் படுவதாகவே தோன்றும்.

         வித்யாவுக்குப் போடப்பட்ட ஊசி சரியாக வேலை செய்யாத நிலையில் மிகவும் வேதனையும் வலிகளும் சூழ்ந்தவராக இவ்வாறு அந்நிலையைச் சொல்கிறார். ‘‘ஆம் அந்த நொடியில் நான் கண்டதன் பெயர் தான் மரணம். எது வேண்டாம், என்னுடையதில்லை என்று நினைவு தெரிந்த நாள் முதல் மனதுக்குள் அழுது புலம்பிக் கொண்டிருந்தேனோ அதனை நீக்கிவிட்டிருந்தார்கள். என் பிறப்புறுப்பு தனியே பிரித்தெடுக்கப்பட்டதை நான் உணர்ந்தேன். ஆ! நிர்வாணம் இதுவல்லவா நிம்மதியின் எல்லை’’

          இரண்டாவது அத்தியாயத்திலிருந்து பிறந்த குடும்பத்துடனான தன் சம்பந்தத்தை எழுதுகிறார். ஆண் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்ட பெற்றோருக்கு மூன்றாவது மகன். தாயும் சகோதரிகளும் ஒரே ஆண்பிள்ளை என அன்புடன் வளர்க்கின்றனர்.  அவரது தந்தை பாசத்தை கண்டிப்பாகவும் கட்டளையாகவும் காட்டத் தெரிந்த மனிதன். சரவணனின் படிப்பு அவரது கனவாகும். திறமையான மாணவன் சரவணன். ஆனாலும் திணிக்கப்படும் கல்வியால் அப்பாவின் மீது பயமும் கோபமும் ஏற்படுகின்றன. இரக்கமின்றி படிப்பு விடயத்தில் கண்டிப்பு காட்டப்படுகிறது.
 
          ஆறேழு வயதிலேயே பெண்களைப் போல உடையணிந்து நடனமாடி சந்தோசப்படுகிறார். ‘’இதுல என்ன தப்பு இருக்கு? ஆம்பளைன்னா சட்டை டவுசரு தான் போடணுமா? எனக்கு பாவாடை சட்டை தான் புடிக்குது. போட்டா என்ன? எனக்குள் இயல்பான விசயமாகவே தோன்றியதை ஏன் மற்றவர்கள் வினோதமாக பார்க்கின்றனர்?’’ இப்படி எழுதப்பட்டிருக்கும் சரவணனின் வரிகளில் மெல்ல மெல்ல மாறிவரும் மனநிலையைக் காணமுடிகிறது. ஒரு சிறுவன் தன்னுணர்வுகளின் போராட்டத்துடன் தவிக்கிறான். அவனைச் சுற்றி கேலியும் கிண்டலும் தான். தன் பெண் உணர்வுகளைச் சிலராவது புரிந்து விட்டார்கள் எனக்கூட அவனை சந்தோசப்பட வைக்கின்றன அந்தக் கிண்டல்கள்.

       அவனறியாமல் வெளிப்பட்டுவிடும் பெண்மையினால் ஊரிலும் பள்ளியிலும் கேலியுடன் பார்க்கப்பட தனிமையில் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறான். இளங்கோ ‘என்ற ஆண் மீது ஏற்பட்ட காதலினால் பெண்மையை உணர்ந்தேன்’ எனச் சொல்கிறார்.

          மூன்றாம் பாலினராயுள்ளோரின் உளவியல் சிக்கல்கள் மற்றோரால் விளங்கிக்கொள்ள முடியாது. வித்யா அதை இப்படி விபரிக்கிறார். ‘’புதுமைப் பெண்ணாக இருக்க விரும்புவேன். இதைப் புரிந்து கொள்வது மிகவும் சிக்கலானது. ஆணாக இருக்கிறேன். உடலளவில் பெண்ணுமல்ல. ஆனால் எதிர்காலம், தொழில் குறித்துச் சிந்திக்கும் போது பெண்ணாக பெண் பார்வையிலேயே என் எண்ணவோட்டங்கள் இருந்தன.’’ இவ்வாறு நகரும் நாட்களில் தற்செயலாகச் சந்திக்கும் செந்திலும் தன்னைப் போல உணர்வுள்ளவர் என அறிந்து மகிழ்கிறார். வாடி, போடி என இருவரும் ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். இச்சந்திப்பு திருப்பத்தை அவரது வாழ்வில் ஏற்படுத்துகிறது. அவர் போன்ற உணர்வுள்ளவர்கள் சந்திக்கும் தொண்டு நிறுவனத்துக்குப் போய்வர ஆரம்பிக்கிறார்.

               அவர்கள் எல்லாம் என்னைப் போலவே ஆண் உடையில் நடமாடுபவர்கள் இவர்களை ‘கோத்திகள்’ என்பார்கள். ஆண் உடையில் பெண் தன்மையோடு காணப்படுபவர்களைக் குறிக்கும் சொல் அது. அவர்களோடு வெளிப்படையாகவே பெண் உடையணிந்து பெண் போலவே தோற்றத்தில் காணப்படுபவர்களையும் ஆபரேஷன் செய்து கொண்டு பெண்ணாகவே மாறியவர்களையும் அங்கே காண முடிந்தது. ‘அவர்கள் தாம் திருநங்கைகள்’ என்று தன்னை ஒத்தோரைச் சந்தித்த மகிழ்ச்சியில் எழுதுகிறார்.

                இதற்கிடையே கேலி, கிண்டல் இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்வு சுவாரசியம் ஆகிறது. நாடகம் அவரை ஈர்க்கிறது. நாடகத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் மு ராமசாமி, முருகபூபதி, ஒத்திகை விஜி எனப் பலர் நட்புறவோடு காணப்பட்டனர். இவர்களது புரிந்துணர்வும் ஆதரவும் உறுதுணையாக இறுதிவரை இருக்கின்றது. ஆயினும் இயல்பாக வாழ முடியாத நிலை. இரட்டை வாழ்வு துன்பமாக அமைகிறது. முடிவில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். சென்னையில் வேலைக்கு அலைகிறார். கோத்திகளுக்கான தொண்டு நிறுவனங்களில் உள்ளவர்களும் கூட ஆணாகவே உடையில் தோற்றமளிக்கும்படி அறிவுரை கூறுகின்றனர். வித்யாவால் அதை ஏற்க முடியவில்லை.

         மேலோட்டமாக மூன்றாம் பாலினத்தின் உணர்வுகளை விளங்கிக் கொள்ளும் எம்மால் இவரது தவிப்பு புதிய விடயமாகத் தெரியும். அவரது வார்த்தைகளை வாசிக்கும் போது தான் ஆணுடலின் மீதான அவரது வெறுப்பும் பெண்மைக்கான ஏக்கமும் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எதுவும் தவிர்க்க முடியாத வசனங்கள் போலவே தோன்றும்.

    புடவை, பொட்டு, தோடு, மூக்குத்தி ஆகியவற்றை அணிந்து பிரீத்தி என்ற பெயருடன் ஒரு பெண் தோற்றத்தில் புனே புறப்பட்டு விட்டார். அங்கு வித்யா என்ற பெயர் இடப்படுகிறது.

       தாய் என்ற நிலையில் இருந்து இச்சமூகத்துக்குள் இணைய விரும்புபவரை ஒருவர் தத்தெடுப்பார். அவரைக் குரு என அவர்களது சமூக உறவுமுறையில் அழைப்பர். அதே போல நானி-பாட்டி, சேலா-மகள், கோடி-பொலிஸ், பந்தி-ஆண், நாரன்-பெண், நிறை வேறு சொற்கள் சொல்லப்படுகிறது.

             விரும்பியவர்கள் அம்மா, மகளாகலாம். இதை ரீத் போடல் என்பர். இவர்களிடையே பஞ்சாயத்து உண்டு. தண்டனைகள், விலக்கி வைத்தல் உண்டு. வடஇந்தியாவில் பெரும்பாலும் இஸ்லாமியக் கோட்பாடுகளையும், தென்னிந்தியாவில் இந்துமதக் கோட்பாடுகளையும் அதிகளவு கொண்டுள்ளதாகவும் பல பிரிவுகளாகவும் இருக்கின்றனர். ஏதாவது ஒரு பிரிவில் தத்துப் போய் திருநங்கைகளின் சமூகத்தில் ஒருவர் ஆகலாம். ஆனால் இதற்காக உறுதியுடன் இருக்கின்றாரா என அந்நபரின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்படும். மூத்த உறுப்பினரை நாயக் என்பர். ஒரு பிரிவின் எல்லா நிகழ்ச்சிகளிலும் இவரது சொல்லே செல்லுபடியாகும். இங்கு பிறரின் சாதி, மதம், இனம் பற்றிக் கேலி செய்வதோ, அவை பற்றிக் கேள்வி கேட்பதோ கூடாது என்ற கடுமையான விதிமுறையைக் கடைப்பிடிப்பவர். இவர்களின் சமூகத்தில் பன்றி பற்றிக் கதைப்பதோ அல்லது உண்பதோ இல்லை. பன்றியை உண்பவர்களின் வீட்டிலிருந்து எதையும் குடிக்கவோ சாப்பிடவோ கூடாது போன்ற பல அவர்களுக்கேயுரிய பழக்கவழக்கங்கள் உண்டு.

           இவ்வாறான சமூகம் ஒன்றில் அங்கத்தவர் ஆகிவிடுகிறார். அவரது குடும்பத்தவர்களால் அதை சீரணிக்க முடியவில்லை. அது பற்றி வித்யா ‘‘பல்லாயிரக்கணக்கான திருநங்கைகளால் எப்படித் தன் குடும்பத்தாரிடம் தம் நிலைமையை எடுத்துச் சொல்லிப் புரியவைத்து திருநங்கைகளாக அவரவர் வீடுகளில் வாழமுடியவில்லையோ அதே மாதிரி என்னாலும் அது முடியாமல் போனது’’, ‘’நான் சரவணன் தான் இல்லையே தவிர மனிதப்பிறவி தான். பூதமல்ல, பிசாசல்ல’’ என்கிறார். ‘’திருநங்கைகள் என்ன பாவம் செய்துவிட்டார்கள்? ஆணாகப் பிறந்து பெண்ணாக உணர்வது ஒரு பாவம் என்றால், அது இயற்கையின் ஏற்பாடு. நாங்கள் என்ன செய்ய முடியும்?’’ இவை தன் சமூகம் சார்பாக மற்றைய இருபாலினத்தவர்களிடமும் வித்யா கேட்கும் கேள்விகள்.

          இந்தியாவின் வடமாநிலங்களில் கிருஸ்ணரின் அவதாரமாக இச்சமூகத்தைப் பக்தியுடனும் பயத்துடனும் பார்க்கின்றனர். இவர்களது சாபம் பலிக்குமென நம்புகின்றனர். அதனால் அங்கு வாழவே இவர்கள் விரும்புகின்றனர். சட்டரீரிதியான அங்கீகாரம் கிடைக்காததாலும் பொதுவெளிச் சமூகம் சகமனிதர்களில் ஒருவராக மரியாதையுடன் ஏற்காததாலும் நிரந்தரமற்ற வருமானங்களைத் தேடுகின்றனர். இவர்களது பிரதான தொழில்களாவன பாலியல் தொழில், பிச்சை கேட்டல். இதனை வசூல் என்றும் சொல்வர். (ரயில் கேட்டல், கடை கேட்டல், சிக்னலில் கேட்டல்) தற்போது சமையல், நடனம், கரகாட்டம், கும்மிப்பாடல் போன்றவையும் சிலரால் செய்யப்படுகின்றது.

         வித்யா தயக்கத்துடன் கடை கேட்டலுக்குப் புறப்படுகிறார். பின் சாதாரணமான விடயம் அதைச் சுறுசுறுப்பாகச் செய்யத் தொடங்கிவிட்டார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம் தான் நிர்வாணத்தின் போது மருத்துவமனைக்கு கொடுக்க உபயோகிக்க வேண்டிய நிலை. அதன் பின்பு உடலின் ஓய்வு தேவைப்படும் போது இந்த வகையில் சேர்க்கப்படும் பணமே உபயோகிக்கப்படும்.

           வித்யா தான் பிச்சை எடுத்தது பற்றி குறிப்பிடும் போது ‘’தொடக்கத்திலிருந்தே திருநங்கைகளின் இன்னொரு தொழிலான பாலியற் தொழிலில் எக்காரணம் கொண்டும் இறங்குவதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்து வந்திருக்கிறேன். பெண்ணாவது என்பது தான் என் விருப்பமே தவிர, விதிக்கப்படும் அவலங்கள் அனைத்துக்கும் உடன்படுவதல்ல. என் பிச்சைக் காலங்களுக்கும் கூட ஒரு சரியான காரணம் என்னிடம் இருந்தது. என் நோக்கம் நிறைவேறியவுடன் திரும்பவும் வேலை தேடித்தான் நான் புனேயை விட்டுப் புறப்பட்டேன்’’ என்று மீண்டும் திருச்சி நோக்கிப் பயணித்ததற்கு காரணம் சொல்கிறார்.

             மீண்டும் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் நண்பர்களைச் சந்திக்கும் ஒரு சம்பவம். அவரது பழைய வகுப்புத் தோழிகள் அவரை வாடி, போடி என்று உரையாடவும், சின்னதாக ஒரு பொட்டு வைத்துக் கொள் என்று சொல்லவும் மிகவும் மகிழ்ச்சியடைகிறார். தன்னையும் சினேகிதியாக ஏற்றுக் கொண்டதை நெகிழ்வுடன் நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். வித்யாவின் பல வருடப் போராட்டத்தை அவரைச் சுற்றியிருந்த சிலராவது புரிந்துணர்வுடன் ஏற்றுக் கொள்கின்றனர். வாசிக்கும் எமக்கு அது பெரும் நிம்மதியைக் கொடுக்கும். மீண்டும் வீட்டில் சுமுகமற்ற நிலை ஏற்படுகிறது. நண்பர்களின் உதவியுடன் வேலை தேடப்படுகிறது. ஆனால் எத்தனை திருநங்கைகளுக்கு இவ்வாறான தோழர்களும் படிப்பும் வாய்க்கப் பெறும்?

       அயராத முயற்சிகளால் மதுரையில் வேலை ஒன்றைப் பெற்றுக் கொள்கிறார். இந்நேரத்தில் வலைப்பக்கம் ஆரம்பித்து நடத்துகிறார். ஆயினும் தன் வாழ்வின் பிரச்சனைகள் முடிந்ததென்று நிம்மதியாக இருக்கவில்லை.

  ‘ ‘திருநங்கைகளுக்கான சமூக அங்கீகாரம் என்பது என் ஒருத்தியின் நல்வாழ்வுடன் முடிந்து விடுவதல்ல’’ என்று அடுத்த போராட்டத்தை ஆரம்பிக்கிறார். சரவணன் என்ற அவரது பெயரை சட்டபூர்வமாக லிவிங் ஸ்மைல் வித்யா என்பதாக மாற்ற விண்ணப்பித்து அதற்கான வேலைகளைச் செய்கிறார்.

             2002ல் திருநங்கைகளுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டு சில திருநங்கைகளிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கக் காரணமானவர்களில் ஒருவரான வழக்கறிஞர் ரஜனியுடன் தொடர்பு கொள்கிறார். எண் சோதிடம், மதமாற்றம் எனப் பெயரை மாற்றக் கூடியதாக இருக்கும் நாட்டில் தன் சுய அடையாளத்துக்கான பெண்பால் பெயரை மாற்ற அரசு அலுவலகங்களால் அலைக்கழிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின் வெற்றியும் அடைகிறார்.

 இறுதியாக இக்கேள்விகளையும் வேண்டுகோள்களையும் முன் வைக்கிறார்.
*இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
*பால்மாற்று அறுவைச்சிகிச்சையை ஏன் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது?
*பள்ளிப் பாடங்களில் திருநங்கைகள் பற்றிய அறிமுகம்.
*சினிமாவில் தணிக்கைக்குழு திருநங்கைகளை இழிவுபடுத்தும் காட்சிகளை தடை செய்ய வேண்டும்.

          ‘ஒரு திருநங்கையின் உலுக்கி எடுக்கும் வாழ்க்கை அனுபவங்கள்’ என்று அட்டை முகப்பில் எழுதப்பட்ட இந்நூலைப்பற்றி விமர்சனம் என்ற பெயரில் எழுதுவது சிரமம். விமர்சனம் என்பது அதிலுள்ள குறைகளும் நிறைகளும் சீர் தூக்கிச் சொல்லப்படுவது ஆகும். நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவே இதை எழுதினேன். இவருடைய வாழ்வின் வலிகளில் நாம் எப்படி நிறை, குறை சொல்ல முடியும்? எதை எழுதுவது? எதை விடுவது? வித்யாவின் எழுத்துக்கள் நூலின் இறுதிவரை என்னைச் சலிப்படைய விடாமல் விரட்டிச் செல்கின்றன. அந்த வரிகளில் சிலவற்றை அப்படியே எழுதுவதன் மூலம் தான் சரவணனின் உணர்வுகள் வித்யாவானதை சிரமமின்றிச் சொல்லலாம்.

          குறுக்கே புகுந்து குதர்க்கம் பேசுபவர்களிடம் சில கேள்விகள் இருக்கும். வீதிகளில் சத்தமாகவும் ஆபாசமாகவும் ஏன் பேச வேண்டும்? ஏன் பாலியல் தொழில் செய்ய வேண்டும்? இப்படியான கேள்விகளுக்கெல்லாம் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்து விடை பெறுங்கள் என்பது தான் பதில்.

                    நாம் வாசிக்கும் கற்பனைக் கதைகளையும் விட உண்மைக்கதைகள் நம்ப முடியாதவையாக இருக்கும். கற்பனை செய்பவன் எதையும் சீர்தூக்கிப் பார்த்து எழுதுவான். ஆனால் உண்மையோ கற்பனைக்குக் கிட்டாதவையாகவே இருக்கும். சலிப்பூட்டுவதில்லை. சரளமாக எழுத முடியும். லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்வும் உள்ளதை உள்ளபடியே சொல்லும் எழுத்தும் இலகுவான எளிய நடையும் அவரை எமக்கு நெருக்கமாக்கிவிடுகிறது. அருகிலிருந்து உரையாடிய உணர்வை ஏற்படுத்துகின்றது.

                 இப்படி ஒவ்வொரு திருநங்கைக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். சோகங்களும் புறக்கணிப்புகளும் அவர்கள் சந்திப்பவையாகும். ஆனாலும் தமது சுயத்தை நிறுவிய திருப்தியுடன் வாழ்கிறார்கள். இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களின் மனதில், எங்கோ ஒரு மூலையிலாவது மூன்றாம் பாலினம் பற்றிய சிறு ஏளனமோ தவறான அபிப்பிராயமோ இருப்பின் அது மறைந்துவிடும். இல்லையென்றால் அவர்கள் நல்ல வாசகியோ அல்லது வாசகனோ இல்லை என்பது நிரூபணமாகிவிடும்.

எனது நன்றிகள்:   அரவானிகள் சமூக வரைவியல் – பிரியாபாபு.

புதிய கோடாங்கி செப்ரம்பர் 2008  

புத்தக விபரம்:
Naan Vidya ,’Living Smile’
First Edition:December 2007 216Pages
Price Rs.100
Printed in INdia ISBN 978 _81_8368_578_8
Kizhakku,An imprint of New Horizon MediaPvt.Ltd;
No.33/15,Eldams Road,
Alwarpet,Chennai-600 018.

நன்றி : www.thesamnet.co.uk 

→ 3 மறுமொழிகள்பகுப்புகள்: கட்டுரைகள்

வல்லினம் நவம்பர் 2009 இதழ்

நவம்பர் 3, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

எழுத்தாள/வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

வல்லினம் நவம்பர் 2009 இதழ்  (31/10/2009) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இதழில்…….

கட்டுரைகள் :

*சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் – ஓர் அறிமுகம்

 *இல‌ங்கை – நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்

 * இழைகள்

பத்திகள் :

*வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

*இந்திரா டீச்சர்

 *தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்

சிறுகதைகள்:

*அல்ட்ராமேன்

 *இரண்டாவது கிறுக்கு சித்தப்பா

மேலும், தொடர்கள் மற்றும் கவிதைகள்.

  www.vallinam.com.my

- வல்லினம் ஆசிரியர் குழு-

→ Leave a Commentபகுப்புகள்: அறிவிப்புகள்

என்னையும் வளர்த்தனர்

நவம்பர் 1, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

யாழ்ப்பாணத்தில்
பொமரேனியன் குரைக்கும் போது
எங்கள் பணக்காரத்தனஞ் சத்தமிட்டுச் சொல்லப்படும்.
 
எலும்பும் சதையுமாகச் சாப்பாடு
சீமெந்தும் கம்பியுமாக
வீடு போல கூடு
சடைசடையாகத் தொங்கும் ஷம்போவின் பளபளப்பு.
 
பக்கத்து வீட்டு நாயின் குரல் கேட்டு
மதில் பிராண்டும்
வீதிப் புழுதியில் விளையாடும் ஒல்லி நாயிடம் போக(த்)
தாவித்தாவிக் கம்பிக் கதவிற் குதிக்கும்.
 
அப்போதெல்லாம்,
பக்கத்து நகருக்கு(க்)
கழுத்திற் சங்கிலி கட்டிக் கூட்டிப்போவோம்.
அது இன்னொரு பொமரேனியன் வீடு.

சில நாட்களில் கொண்டு வரப்படும்
பின் பொமரேனியன் குட்டிகளாகப் போடும்.
 
இப்போது நாம்
ஐரோப்பிய நகரமொன்றில்,
நாய் வளர்ப்புக்கு இடமில்லை வீட்டில்.
 
வயசு வந்த பெண்பிள்ளை என்னை
வீட்டில் வைத்திருக்கப் பயமாம்.
பக்கத்து நாட்டிலுள்ள
மச்சானுக்குக் கல்யாணங் கட்டி வைக்க(க்)
கலப்பில்லாத என்னினத்துக் குழந்தைகளை(ப்)
பெற்றெடுக்கின்றேன்.
 
தர்மினி
(முற்றம் சஞ்சிகை)

→ Leave a Commentபகுப்புகள்: கவிதைகள்

மிதக்குது மனது

அக்டோபர் 30, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

தர்மினி

சுழன்றடிக்கும் காற்றில்
மிதந்து செல்லும் சருகு போல
காதல் எனக்குள்ளே
மிதந்து கொண்டேயிருக்கிறது.

திருமணம்
குழந்தைப்பேறு
வயோதிபம்
எதுவுமே மிதக்கும் என் காதலை
அமிழ்த்தி விடவில்லை.
அது
தீர்ந்து போகாமல் மிதக்கின்ற வேளைகளிலெல்லாம்
திருமணமும் வரைமுறையும்
உடற்தளர்வும்
மனச்சுமையும்
என்னைக் கடந்து விடுகின்றன.

நன்றி: ஊடறு

→ Leave a Commentபகுப்புகள்: கவிதைகள்

திருமறைக்கலாமன்றம்

அக்டோபர் 28, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

→ Leave a Commentபகுப்புகள்: அறிவிப்புகள்