தூமை

கவிதைகள் – இரண்டு

பெப்ரவரி 9, 2010 · கருத்துத் தெரிவிக்கவும்

 மோனிகா

மைதிலி அக்கா

மைதிலி அக்கா மிகவும் அழகி.

பத்தாம் வகுப்பு போனபோது என் பக்கத்தில் வந்தமர்ந்தாள்.

வரலாற்றுப் பாடம் நடக்கையில் வாயில் சீட்டியிட்டு

சினிமா பாடல் செவிக்குக் கொடுப்பாள்.

நடனப் போட்டியில் சலங்கைகளோடு

‘வைதேகி காத்திருந்தாள்’ பாடலுக்கு

வெறி கொண்டு ஆடுவாள்.

தெருவில் நடக்க

முலைகள் குலுங்கச் சிரித்தபடி

கெண்டை விழிகளை பக்கம் நான்கும் சுண்டிவிடுவாள்.

பரீட்சைக்கு வரவில்லை பாவாடைக்காரி.

சிங்காரித்துச் சினிமா படத்திற்கு ஆடப்போனாள்.

இருபது வருடமாய் எத்தனை சினிமா.பார்த்தேன்..!

இதுவரை காணோம் என் பள்ளிக் காதலி.

வயலின்

உத்திரப் பரணில் உறங்கிக் கிடந்த வயலின்.

தூசி தட்டி தங்கை எடுத்துக் கொடுத்தாள்.

நினைவுப் பேழையை திறப்பது போல்

அது தனது நரம்பில் இசையை எழுப்பிற்று.

குட்டைப்பாவாடை நாட்கள்,

தோள்பட்டையிட்ட சட்டை,

நதியா கம்மல்,

கண்ணாடி பதித்த சிவப்புப் பாவாடை,

கண் முன்னே தட்டிய காலம் பல

கானம் தந்த காற்றினூடே.

நாலிரண்டு வருடத்தின் பின்

நண்பன் அழைத்தான்.

அவன் குரலும் அப்படியே,

நாட்கள் உறைய நனவிலி மனதினுள்.

→ மறுமொழி இடுகபகுப்புகள்: கவிதைகள்

கவிதைகள் மூன்று

பெப்ரவரி 8, 2010 · 1 மறுமொழி

- மோனிகா

கதவுகள்

இரவைக் கிழித்து நான் உள் பெயர்ந்தபோது

அறிந்திருக்கவில்லை

இக்கோட்டைக்குள் இத்தனை கதவுகளென்று

தொடர்ந்து காற்றடிக்க ஒரு கதவு

படார் படாரென்று முகத்திலறைந்தது.

கர்ப்பக்கிரகத்துக் கதவுபோலொன்று

புனிதம் ஏந்திக் கனத்துப் போய்

மூடிக்கிடக்கிறது.

ரகசியங்கள் நிறைந்ததாய் மற்றொன்று

உள்ளே வண்ணத்துப் பூச்சியோ

ஒளிரும் விட்டில்களோ இருந்தும்

வெளியே ஒட்டடை நூற்று

ஒரு துளி சூரியன் தெளித்ததாய்.

ஒன்றேயொன்று நடைகழி, பால்கனி என

பாதை முழுதும் பகிரங்கப்படுத்திக் கொண்டு.

கண்ணயர்ந்தேன்.

விடியலில் பார்க்கலாம்.

காதல் கோட்டை மோகினி முகத்தை.

காணா மரம்

மணி பிளான்டை திருடிக் கொணர்ந்து

வீட்டில் வைத்தால் பணம் கொழிக்கும்

ஆலமரம் அருகே இருந்தால் ஆடிக்களிக்கலாம்

வேம்பின் காற்று உடலுக்கு மருந்தைப்போன்று

வாழை, வாழையடி வாழையாய் விருந்துக்கு உதவும்

அரச மரத்தைச் சுற்ற ஆண்குழந்தை பிறக்கும்

பனமரக் கள் உடலுக்கு நன்று

தென்னங்கீற்றின் ஊஞ்சலில் பறவைகள் ஆடலாம்,

பாடல்களும்.

மணற்தக்காளி வாய்ப்புண் ஆற்றும்

இன்னும் எவ்வளவோ…

இந்தமரம் இரவில் அழகாய்

படுக்க பாய் விரிப்பதாய்

தலை நோகத் தைல விரல் பதிப்பதாய்

வெள்ளத்தில் ஓடி வரும் சருகிற்கெல்லாம்

வீடு பூட்டித் தருவதாய்.

வேரூன்றி பரவும் பெண்மரம்

விதை பரப்ப, உலகே சுபிட்சமாய்

யார் கண்களுக்கும் அறியாமல்.

நிலவின் கிழவி

சுவர்களுக்குள் நகரம் புழுங்கிற்று.

காற்றாட நடக்கையில்

என் எதிரே ஒரு கிழவி

வானத்து நட்சத்திரங்களை வாரி

கூடையில் அடைத்த வண்ணம் நின்றிருந்தாள்.

இவள் அந்த நிலவின் கிழவிதானோவென

ஒரு கணம் அஞ்சினேன்.

ஆனால், கிழவியோ நிலத்தின் கிழவி.

உன்னால் எப்படி இப்படி முடிகிறதென்றேன்.

“நான் அந்தக் காலத்தவள்”, என்று

அலற்றிக் கொள்ளாமல் கூறிச் சென்றுவிட்டாள்.

தலை உயர்த்திப் பார்த்தேன்.

நகரம் முழுவதும் நியான் விளக்குகள்.

→ 1 மறுமொழிபகுப்புகள்: கவிதைகள்

சொற்களைக் கண்டுபிடிப்பதைப் பற்றி…

பெப்ரவரி 2, 2010 · 1 மறுமொழி

 

ஆகாயத்தில் மினுமினுக்கும் சிலவற்றை(க்)
காகிதங்களிற் பரப்புதல்.

யாருமறியாக் குகையொன்றிலிருந்து
கண்டெடுத்த அபூர்வச் சொற்களாகக் காண்பித்தல்.

பெருங்கடலிற் சலித்துச் சிலவற்றைச் சிதறவிடுதல்.

ஒருவருமறியாச் சொல்லொன்றை
உருவாக்கலிற் துளிர்த்த வியர்வையுடன்
அதைத் தாளொன்றிற் கசியவைத்தல்.

அறியாதவொன்றை அலங்காரச் சொற்களால் ஆக்குதல்.

வசனங்களை வரம்பு கட்டி மறித்தல்.   

   பலவும்
கவிதையெனச் சொல்லிய பின்னர்,

‘ஒவ்வொரு பூவையும் நேசிக்கிறேன்
ஒவ்வொரு புல்லையும் நேசிக்கிறேன்’

கசங்கிக் கிடந்த துண்டொன்றில்
எழுதி விட்டுச் சென்றேன்.

தர்மினி

www.vallinam.com.my 

 

→ 1 மறுமொழிபகுப்புகள்: கவிதைகள்

கொல்லும் வரலாறு

ஜனவரி 25, 2010 · 1 மறுமொழி

எம் கிழிசல்களைக் களைய வேண்டும்.
 எமது பசிக்கும் வயிறுகள்
நிறைவதைக் கனவிலும் பார்ப்பதில்லை.
இரவிற் தட்டப்படும் கதவுகளுக்காகவும்
பகலிற் துரத்தும் கண்களுக்காகவும்
 விழித்திருக்கின்றோம்.
 
இப்போது
நாங்கள் கேட்பதெல்லாம்
இற்றுப் போகாத ஆடை
பசி தீர்க்கும் உணவு
வாழ்வதற்கு உயிர்
மற்றும்
கலையாத நித்திரையுமாகக் குறுகிப் போயின.
 
உங்கள் வீட்டுக் கணப்புகளின் கதகதப்புடன்
சூடேற்றச் சில கதைகள்.
தாகங் தீர
எம் இரத்தங்கள்.

உங்கள் தினவெடுத்த தோள்களால்
முறுக்கேறிய கைகளால்
உடைபடுவன,
எங்கள் குடிசைக் கதவுகள்.

உங்களின் அடைந்தே தீருவதென்ற ஆவேச அலறல்களுக்கு
ஈடாகக் கேட்பதோ
எங்கள் அழுகைகளைத் தான்.
 
இன்னும்,

இரத்தமும் கண்ணீருமின்றி
வீரமும் சாவுமின்றி
எப்படிப் பெறுவாய் சுதந்திரமென்று கேள்விகள் கேட்பீர்.
 
எங்கள் முற்றங்களை எட்டி நின்று பார்த்து
 தீ எரிகிறது!
கொல்லுங்கள்…கொழுத்துங்களெனக் கூக்குரலிடுவீர்கள்.
முடி தரித்த வரலாறு
வாளெடுத்த வீரம்
முச்சங்கக் கதைகளும் சொல்லிக் கதறுவீர்கள்.
தமிழ்ச் சாதி காக்க
எங்களைச் சாவேந்தி வீழச் சொல்வீர்.
 
கட்டளையிடும் ஆசனமொன்றில் வீற்றிருந்து
ஊரோடு போராடென்பீர்.
ஒரு உண்ணா நோன்பில்
அவ்வப்போது ஊர்வலத்தில்
ஆறுதற் கூட்டங்களில்
தொடை தட்டி உறுமி
உலகத் தமிழுக்கு
உயிர் கொடுக்க
எங்களைப் பொறி வைப்பீர்.
 
தர்மினி

→ 1 மறுமொழிபகுப்புகள்: கவிதைகள்

இலங்கைக்கான GSP+ சலுகைகளை இரத்துச் செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

ஜனவரி 18, 2010 · கருத்துத் தெரிவிக்கவும்

European commission to withdraw GSP+ to Sri Lanka
     http://www.youtube.com/watch?v=03znhPYKdzQ
      ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இலங்கைக்கான GSP+ சலுகைகளை இரத்துச் செய்வதற்கான விசாரணையைக் கடந்த ஜனவரி 14 இல் நடாத்தியது.இலங்கை மீதான, மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இவ்விசாரணையின் போது ஆராயப்பட்டது.
 
     இலங்கைக்கான தூதுவர் ‘முன்னாள் போராளிகள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுப் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்,குழந்தைப் போராளிகள் புனர்வாழ்வு மையங்களில் இயல்பு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தப் படுகின்றனர்’ எனக் கூறியதுடன் இலங்கை மனிதவுரிமை விடயங்களிற் கூடிய கவனஞ் செலுத்துவதாகவும் மனிதவுரிமை மீறல்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.தமிழ் ஒருங்கமைப்பின் சர்வதேச இணைப்பாளர் சேனன், இலங்கைத் தூதுவரின் சாட்சியம் ஏற்றுக் கொள்ள முடியாததும் உண்மைக்குப் புறம்பானதுமென மறுத்துத் தன் விவாதத்தை விசாரணைக்குழுவின் முன் வைத்தார்.
 
            இலங்கையின் தற்போதைய நிலைமையை ‘நவீன கொலோகாஸ்ற்’ என வர்ணித்த தமிழ் ஒருங்கமைப்பு இலங்கை அரசு மக்களை முகாம்களில் அடைத்தும் சித்திரவதை செய்தும் வருகிறது என்று தெரிவித்தது. முன்னர் விடுவிக்கப்பட்டவர்கள் கூட தற்காலிக முகாம்களில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளார்கள். இலங்கையின் வடக்குப் பிரதேசம் திறந்த வெளிச் சிறைச்சாலையாக மாறிக் கொண்டிருக்கிறதெனவும் குற்றஞ் சாட்டப்பட்டது.
 
     இலங்கையரச தூதுவர், முன் வைத்த எல்லாவிதமான விவாதங்களுக்கும் மறுப்புத் தெரிவிக்கப் பட்டது. கடந்த 2008லிருந்து ஒரேயொரு குழந்தை மட்டுமே போராளியாக்கப் பட்டுள்ளார் எனத் தூதுவர் தெரிவித்தார்.அதற்கு மறுப்புத் தெரிவித்த தமிழ் ஒருங்கமைப்பு, தொடர்ந்தும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் எட்டு வயதுடைய குழந்தையுட்பட பல சிறார்கள் இலங்கையரசினால் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்திரவதையை அனுவிப்பதாகவும் எம்மிடம் அதற்கான ஆதாரமுண்டு எனவும் வாதிட்டது.
 
      கடந்த 2008 டிசம்பரிலிருந்து ஒரேயொரு ஊடகவியலாளர் மட்டுமே கடத்திச் செல்லப்பட்டதாக, எல்லை தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பின் இணையப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தூதுவர் குறிப்பிட்டார். எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர் அமைப்பைச் சேர்ந்த வின்சன்ட் புறசல் இதற்கு உடனடியாக மறுப்புத் தெரிவித்து,நேற்று முன்தினம் கூட பி.பி.ஸி யின் உள்நாட்டு நிருபர் அரசைச் சார்ந்த அமைச்சர் ஒருவரால் தாக்கப்பட்டாரெனவும் அவர் அரசின் தேர்தற் பிரச்சாரக் கூட்டமொன்றிற் செய்தி சேகரிக்கச் சென்ற போதே தாக்கப்பட்டாரெனவும் விசாரணைக் கமிசனிற் தெரிவித்தார்.
 
     இலங்கைத் தூதுவர், 2004 இல் சுனாமியாற் பாதிக்கப்பட்டோர் சார்பாக வேண்டுகோளொன்றை வைத்துப் பரிதாபந் தேடும் முயற்சி செய்தார். தமிழ் ஒருங்கமைப்பாளர் ‘ராஜபக்ஷ அரசு உதவிப்பணம்,வரிச்சலுகைகளை மக்களின் சனநாயக உரிமைகளைப் பறிப்பதற்குச் செலவிடுகின்றதேயொழிய பெரும்பாலும் இப்பணம் பாதிக்கப் பட்ட மக்களைப் போய்ச் சேரவில்லை” யென இலங்கையரசின் நடைமுறையைச் சுட்டிக்காட்டினார்.
 
   ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோய்ஹிக்கின்ஸ் GSP+ சலுகையை இரத்துச் செய்ய வேண்டுமென வாதிட்டதுடன், இலங்கையரசு ‘புதிய புதிய செய்திக்’ கதைகளைத் தயாரித்துப் பரப்பி விடுகிறதெனக் குற்றஞ்சாட்டினார்.  அங்கிருக்கும் யதார்த்த நிலையை இலங்கையரசு திரிக்கிறது.மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் இந்தச் செய்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனவும் கமிசனுக்கு வலியுறுத்தினார்.
 
   மேலும் அவர் தனது விவாதத்தில் ‘சாதாரண தொழிலாளருக்கோ வறிய இலங்கை மக்களுக்கோ பாதகமான ஒரு சூழலை உருவாக்கும் நோக்கம் யாருக்கும் இல்லை. இந்த வரிச்சலுகை இரத்துக்கான முழுப் பொறுப்பும் இலங்கையரசையே சாரும்’ எனவும் குறிப்பிட்டார்.
 
     இறுதியில், இலங்கை அரசாங்கம் மனிதவுரிமை மீறல்களை நிறுத்தி, நிலமையைச் சீரமைக்காத பட்சத்தில் ஆறு மாதத்துக்குள்  GSP+ வரிச்சலுகை இரத்துச் செய்யப்படுமென ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் அறிவித்தனர்.
 
 
http://www.tamilsolidarity.org/

→ மறுமொழி இடுகபகுப்புகள்: நிகழ்வுகள்

குருதி வடியப் புன்னகை

ஜனவரி 16, 2010 · 1 மறுமொழி

எனது முற்றத்திற் துப்பாக்கிச் சன்னங்களைக் குவித்தனர்.
கூரையிற் குண்டுகளை இறக்கி
ஒவ்வொரு தடவையும்
உயிர்களைத் தின்றனர்.

ஓடிய திசைகளெங்கும்
பீரங்கிகள் திரும்பிக் கக்க
பதுங்கும் கிடங்குகளில்
நிரம்பிய சடலங்கள் வழிவிட மறித்தன.
அவர்களோ,
என்னைத் திரும்பிப் பார்க்காமல்  ஓட வைத்தனர்.
இல்லையெனில்,
என்னையொரு உப்புச் சிலையாக்கும் பலங்கொண்டிருந்தனர்.
அவர்கள்
கந்தகமும் நெருப்பும் மழையாய்ப் பொழியும் சூத்திரமறிந்தவர்கள்.
  
குண்டுகள் தின்று துப்பிய எச்சமாக நான் நின்ற போது
பெருங் குரலெடுத்துக் ‘குடிமகளே’ என்றனர்.
தடயமறியும் கால்களை மறைத்த வேட்டிகள் சரசரத்தன.
ஏந்திய வாட்களில்
சொட்டிய இரத்தம்
அவரவர் முதுகுகளிற் துடைக்கப்பட்டு(ச்)
சின்னங்களாகக் கிடந்தன.

என் மகனைக் கொன்ற எறிகணையின் பெருங் கூவலாக
எக்காளங்கள் முழங்க
வீதிகளில் நடந்து வந்தனர்.
 மகளின் இரத்தம் தோய்ந்த ஆடை காய்ந்திட முன்னர்,
பட்டாடைகளைப் பரிசளிப்பதாக அறிவித்தனர்.
கஞ்சிக்கழுத,
குழந்தையைப் புதைத்த கைநடுக்கம் நிறுத்தாதிருக்க

அவர்கள்
கடைவாயில் ஒழுகிய குருதிக் கோடோடு  புன்னகைத்தனர்.
 
இப்போது என்னையழைத்தனர்,
‘வாக்குப் போடுவதற்குக் கடமையுள்ள
அப்பாவிப் பிரசையே”

தர்மினி

→ 1 மறுமொழிபகுப்புகள்: கவிதைகள்

கண்காணிக்கும் காவலர்கள்

ஜனவரி 7, 2010 · 1 மறுமொழி

         

தர்மினி

        பாண்டிச்சேரிப் பொதுச்சனங்களின் ஒழுக்கத்தைக் காப்பாற்றுவதற்குத் துடிதுடிக்கின்றார் தமிழச்சி. ‘பாலியற் தொழிலாளிகள் பாவம்’ என்ற ஒரு வசனத்துடன் அவர்களது பிரச்சனைகளை ஓரங்கட்டித் தாண்டிச் சென்று விடுகின்றார். 

          மற்றவர்களுக்கு ஒழுக்கம் கற்பித்தல், கண்காணித்தல், கதையைப் புரட்டிப் போட்டு தன் ஒழுக்கத்தை நிருபித்தல்,  பொலிஸ், நீதிமன்றம்,அரசாங்கம் ஆகிய அதிகார மையங்களைச் சொல்லி மிரட்டுதல் ஆகியவை தான் ஒடுக்கப்படுவோருக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்பவர்களின் வழிமுறையாகவிருக்கிறது.  மக்களுக்காகப் புரட்சி செய்கின்றோம்,புரட்டிப் போடுகின்றோம்  என்று இவர்கள் சொல்வதையும் மீறிக் கொண்டெழும் தூய்மைப் பண்புகள்.
              இதனைச் மிகவும் குதூகலத்துடன்  தனது இணையத்தளத்தில் கடந்த 30 டிசம்பரில் ‘பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப்பில் விபச்சாரம்!  ‘ என்ற தலைப்பில் தோழர்கள் படையுடன் துப்பறியச் சென்று வெகு வீராப்பாக எழுதியுள்ளார். காவல் துறை என்ன செய்கிறது? ‘ஒழுக்கங் கெட்டுப் போகிறதே பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப்’ என்று கவலைப்படுகின்றார். அங்கு பாலியற் தொழிலுக்கு வந்த பெண்களை அடையாளங் கண்டு அது, இது என அஃறிணையிற் குறிப்பட்டுப் பேசுகின்றார்கள்.       ஒரு பொலிஸ்காரியின் வேலையைப் பார்ப்பது தனக்கு கௌரவம் என்று காட்டிக் கொள்வது போல அலட்டிக் கொள்கின்றார்.
             அந்தக் கிராமத்துப் பெண்கள் சித்தாள் வேலைக்குப் போவதைப் போலவோ ,வயல் வேலைக்குச் செல்வதைப் போலவோ ஒரே கிராமத்திலிருந்து குழுக்குழுவாகச் சேர்ந்து வருகின்றார்கள். காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறுவரை வேலை பார்க்கின்றோம் என்கிறார்கள்.பொதுவாகவே கிராமங்களில் இரகசியம் பேணப்படுவது கடினம்.கூட்டாக வந்து தொழில் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் காரணம், குடும்ப வறுமை.கொழுப்பெடுத்து குத்தாட்டம் போடவோ, ஊர் உலாத்தவோ கிராமத்திலிருந்து பாண்டிச்சேரி பஸ் ஸ்டாப் வரவில்லை. ‘அவர்களிடம் மேட்டர் எதுவும் கிடைக்கவில்லை காமெடியானது தான் மிச்சம்’ என்று கவலை வேறு.

            தமிழச்சி, நளினி ஜமீலாவின் ஒரு பாலியற் தொழிலாளியின் சுயசரிதத்தைப் படித்திருந்தால் வயிற்றுப்பாட்டுக்கு தொழில் செய்யும் பெண்ணின் கையில் காசைத் திணித்து அவரது தோழர்களும் சனங்களும் சுற்றி நிற்கக் கையைப் பிடித்திழுத்து ‘வாரியா?” என்று கிண்டல் செய்திருக்க மாட்டார். மிராசுதார்ப் புத்தியும்  ,  எளிய விளிம்பு நிலை மக்களின் மீதான எள்ளலும்,பணத்தின் திமிர்த்தனமும்  தமிழச்சி நெஞ்சில் பொங்கி வழிகின்றது.
         எவனாயிருந்தால் எனக்கென்ன என்று எழுந்த மானத்துக்கு செருப்பால் அடிப்பேன் என அறைகூவல் விடும் தமிழச்சி அந்தப் பெண்களைக் கூட்டிக் கொண்டு போன ஆண்களிடம் ஏன் பேட்டி எடுக்காமல் விட்டு விட்டார்? பணங் கொடுத்து ஒரு பெண்ணை லாட்ஜ்க்கு அழைத்துச் செல்வது அவர்களது குடும்பத்துக்குத் தெரியுமா? என்று ஆண்களிடம் கேட்காமல்,அப்பெண்களிடங் கேட்கின்றார். இந்தத் தொழில் செய்வது உங்கள் குடும்பத்துக்குத் தெரியுமா? என்று விடுப்பு விசாரிக்கின்றார்.  அங்கு பரபரப்பான இடமென்பதால் உடனே வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றார்களாம்.ஏன் வேலை மினக் கெட்டுப்போறாய் என அவன் ஒருத்தனிடமாவது கேட்டுக் கொள்வது தானே. அரசயந்திரம் பாண்டிச்சேரியில் அவலமாய் கிடக்குதென்று புலம்பி கண்காணிப்பாளராகவிருக்கின்றார். ஏன் பணங் கொடுத்துப் போகும் அந்த ஆண்களை நிறுத்தி காசு கொடுத்துக் காதலற்ற, காமத்தை வேண்டுவதன் உளவியலை ஆராய்ந்து எழுதியிருக்க வேண்டியது தானே.
          நடுத்தர வயதான பெண்ணுடன் இருபத்தைந்து வயதுள்ள ஆண் சென்று வந்ததைக் குறிப்பிட்டு   ” நடுத்தர வயதான அந்த பெண்ணிடம் படுத்த பொடியனுக்கு 25-வயதிற்குள் தான் இருக்கக்கூடும். கொடுமை! ” கவலைப்படுகின்றார். கலாச்சாரக் காவலர்கள் நிறைந்த நாட்டில் பாலியல் வறுமை அந்த இளைஞனுக்கு இருக்கிறது.பொருளாதார வறுமை அந்தப் பெண்ணுக்கு இருக்கிறது.அதிலே தமிழச்சிக்கு என்ன கொடுமையை யார் செய்தார்?
              அடுத்தவர்களது இரகசியங்களை ஆராய்ந்து ஒழுக்க மதிப்பீடுகளைக் கற்பித்துக் கொண்டு பொலிஸ்காரியாக பெருமிதமாய்ப் பேசுதல்,அதிகார மையங்களைத் தூய்மையைக் காப்பாற்ற வேண்டிமுறையிடல் போன்ற மேல் வர்க்க குணாம்சங்கள் பெரியாரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்வதன் மூலம் காட்டிக் கொள்ளும் பிம்பத்திற்கு எதிரானவை. ’ஆண் இரண்டு ஆசைநாயகிகளை வைத்திருந்தால்,பெண் நான்கு ஆசைநாயகர்களை வைத்திருக்க வேண்டும்’ எனப் புனிதங்களைக் கவிழ்த்த பெரியாருக்கு இழுக்கு.

→ 1 மறுமொழிபகுப்புகள்: கட்டுரைகள்

மேராக் அகதிகளுக்கான உடனடித் தீர்வு அவசியம்

December 31, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

          இந்தோனேஷியாவின் மேராக் துறைமுகத்திலிருக்கும் தமிழ் அகதிகள் சார்பாகப் பேசிய ரவிக்குமார், ‘இந்தோனேஷிய அரசுடன் அகதிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகத் தெரிவித்திருந்தார்.
     இந்த அகதிகள் இந்தோனேஷியத் தடுப்பு முகாம்களிற் தடுத்து வைப்பதற்கு மட்டுமே மறுப்புத் தெரிவித்திருந்தனர். அடிப்படை வசதிகளற்ற மிக மோசமான இம்முகாம்களில் இருப்பதற்கு யாருமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். முகாம்களில் குடும்ப உறுப்பினர்கள்,சிறுவர்கள் உட்பட பிரித்துத் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். அகதிகள் அங்கு வருடக்கணக்காக இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
   இவர்கள் யு.என்.எச்.சி.ஆரிடம் உடனடியாகத் தங்களின் அகதிக் கோரிக்கையை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டிருந்தனர். இந்தோனேஷிய அரசு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான சர்வதேசச் சட்டத்தில் கையெழுத்திடாதபடியால் அகதிகளின் உரிமைகளுக்கான கடப்பாடு தனக்கில்லையென்ற நிலையில் அகதிகளுக்கான உதவிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை அவர்களின் உரிமைகளை நிவர்த்தி செய்வதில்லை.          அவுஸ்திரேலிய அரசு,இந்தோனேஷிய தீர்வு என்ற திட்டத்தின் மூலம் அகதிகள் சார்ந்த தன் கடமையை இந்தோனேஷியா மீது திணித்து பொறுப்பைத் தட்டிக்கழித்து வருகின்றது.
  இதனால் தான் அகதிகள் யு.என்.எச்.சி.ஆரை நோக்கியும் , இந்தோனேஷிய-அவுஸ்திரேலிய அரசுகள் நோக்கியும் அகதிகளுக்கான நியாயமான தீர்வை வழங்குமாறு கேட்கின்றனர். ஒத்துழைக்க மறுக்க மாட்டோமெனச் சொல்லவில்லை.
      அவர்கள் குறைந்தளவு தரமான உணவு,மருத்துவ உதவிகளைக் கோரியிருந்தார்கள். இக்குறைந்த பட்சத் தேவைகள் கூட நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் கடந்த 2009 டிசம்பர் 23 ஆம் திகதி 29 வயதுடைய ஜேக்கப் சாமுவேல் கிறிஸ்ரியன் நோயினால் மரணமடைந்தார். இதற்கான காரணம் அவுஸ்திரேலிய-இந்தோனேஷிய அரசுகளின் அலட்சியமாகும். இவ்வுயிரிழப்பை பல்வேறு மனிதவுரிமை அமைப்புகள் கண்டித்திருந்தன. குறிப்பிட்ட நோய்க்கான விசேடமருத்துவரும், மேராக் அகதிகள் தொடர்பான முக்கிய செயற்பாட்டாளருமான மருத்துவர் பிறையன் செனிவிரத்ன இது பற்றித் தெரிவிக்கையில் இந்நபர் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் காப்பற்றப்பட்டிருக்கலாம் எனவும் அத்தடன் இதற்கு இந்தோனேஷிய-அவுஸ்திரேலிய அரசுகளே பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
     இந்த இறப்பின் பின்னருங் கூட எவ்விதமான முன்னேற்றமும் அகதிகள் நிலையில் காணப்படவில்லை. கடந்த 28 ஆம் திகதி 9 வயது சிறுமி   வினிஜா கடும் வயிற்றுவலி காய்ச்சலுடன் வருந்த மருத்தவமனைக்கு எடுத்துச் செல்ல மறுக்கப்பட்டது. வயிற்றுவலியுடன் இருந்த மற்றமொரு பெண்மணியும் வைத்தியசாலை செல்ல மறுக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து கெஞ்சிக் கேட்ட நிலையில் சிறுமி மட்டுமே தாயிடமிருந்து பிரித்தத் தனியாக மருத்துவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களின் பின் 30 ஆம் திகதி பிறையன் செனிவிரத்ன தொலைபேசியில் உரையாடி பெண்மணியின் நோயை அடையாளங்கண்டு நோயாளியை அம்புலன்ஸில் அனுப்பக்கூடியதாகவிருந்தது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக,மோசமான ஒரே மாதிரியான உணவு உட்கொள்வதால் அனைத்து அகதிகளும் வயிற்றுக் கோளாறுகளாலும் மற்றும் பல நோய்களாலும் வருந்துகிறார்கள்.
      அண்மையில் அவுஸ்திரேலியா சென்றிருந்த செயற்பாட்டாளாகள் மாதுனி,சாரதா நிறையப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டது.அகதிகளுக்கு உதவ முடியாதளவு சிக்கல்களை எதிர்கொண்டனர்.
      இந்தோனேஷிய அரசு அகதிகளுக்கு மனிதாபிமான , சட்டரீதியானஉதவிகளை மற்றும் ஊடக தொடர்புகளுக்கான தடைகளை ஏற்படுத்தி வருகிறதென இவர்கள் தெரிவித்தனர்.
     கடந்த ஒக்ரோபர் 11லிருந்து  இரண்டு மாதங்களுக்கும் மேலாக தமிழ் பேசும் அகதிகள் படகிலிருக்கின்றனர்.டிசம்பர் 30 அன்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரண்டன் ஓ கோனெர் ஏ.பி.சி நியூசுக்குத் தெரிவிக்கையில் ‘அவுஸ்திரேலியா இந்தப் படகிலிருக்கும் அகதிகளை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் சட்டத்தின்படி ஏற்றுக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்திருந்தார். அவுஸ்திரேலிய நாட்டுக்கு வெளியேயும் அகதிகளுக்கான மனிதவுரிமைத் திட்டம் வைத்திருப்பதையும் தெரிவித்திருந்தார்.
     அகதிகள் இவ்வறிக்கையை வரவேற்கிறார்கள்.அதே வேளையில் இந்த அவுஸ்திரேலியாவுக்கு வெளியேயான திட்டத்தினால் எவ்வித பயனுமேற்படவில்லை எனவும் தெரிவிக்கிறார்கள். இந்தோனேஷியத் தீர்வு என்ற திட்டத்தின் மூலம் அவுஸ்திரேலிய அரசுடன் இணைந்து செயற்படும் இந்தோனேஷிய அரசும், யு.என்.எச்.சி.ஆர் அகதிகளின் படகிற்குப் போவதைத் தடைசெய்துள்ளது.
     இத்திட்டம் ஏற்கனவே ஓர் உயிரைப் பலியாக்கிய பின்பும் யு.என்.எச்.சி.ஆர் அகதிகளை முறைப்படியாகச் சந்திப்பதற்கான வசதிகள் எற்படுத்தப்படவில்லை.
     தமிழ் ஒருங்கமைப்பு ஏற்கனவே இலங்கையில் கொடிய யுத்தத்தினாற் பாதிக்கப்பட்ட இந்த அகதிகள் மேலும் துன்புறக்கூடாது எனத் தெரிவித்திருந்தது.அவுஸ்திரேலிய அரசு மனிதவுரிமைகள் சாhபான தீவிர அக்கறையுள்ளதாக இரக்கமானால் மேலும் ஒரு நாளைக் கூட விரயங் செய்யாது அகதிகளுக்கான தீர்வை உடன்வழங்கத் தமிழ் ஒருங்கமைப்பு கோருகின்றது.
      இரண்டரை மாதங்களான பின்னரும் கடத்தப்படும் ஒவ்வொரு நிமிடமும் படகிற் தத்தளிக்கும் உயிர்களுக்குப் பெருந்துன்பத்தையளிக்கும் என்பதை அவுஸ்திரேலிய-இந்தோனேஷிய அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
தமிழ் ஒருங்கமைப்பு

→ மறுமொழி இடுகபகுப்புகள்: கட்டுரைகள்

கடந்து கொண்டே கொன்றுவிடும்

December 29, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

 பாதித்தூரத்திற் கண்விழித்தபோது
வாழ்வு,
வேலியோரம் பதுங்கி நடக்கும் பூனையாக
மெதுவாகக் கடந்து சென்று கொண்டிருந்தது.

அதுவொரு உதறலிற் கழற்றிய மயிர்களாக
காலடிகளிற் பறந்து கிடந்த சொச்சங்கள்
உயிரை உசுப்பின.

இடமூளை வலமூளை கசங்கி விரியாமல்
கண்கள் உக்கிப் போகப்போக
நித்திரையான கிழட்டுச்சவமெனத் திட்டி,
வாழ்தலின்
பாதியை எட்டிப்பிடிக்க மனமேங்கிப் பதறியெழ
சாவின் மணமறிந்து
கூர் சொண்டுகள்
குதறும் நகங்கள்
கிழித்துப் பிய்க்கும் பற்களுமாகப் பலவும்
செத்த உடலந் தின்னச் சுற்றி நின்றன.

 தர்மினி

→ மறுமொழி இடுகபகுப்புகள்: கவிதைகள்

பேரினவாதத்தின் பாசக்காரப்பங்காளிகள்

December 22, 2009 · 2 மறுமொழிகள்

        மூன்று நாட்களுக்கு முன்னர் தூமை வலைப்பக்கத்தில் பதிவிடுமாறு தூமைக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதன் தலைப்பு ‘ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? ‘ .-கனடியத் தமிழர் ஜனநாயக விழிப்புணர்வு மன்றம்-ரொறன்ரோ, என்ற  அமைப்பிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது.அதன் சுருக்கம் என்னவென்றால் மகிந்த ராஜபக்ஷ ஜனநாயகத்தை நிலைநிறுத்தியுள்ளார் ஆகவே தமிழர்கள் அவருக்கே வாக்களிக்கவேண்டும் என்பது தான்.
      ஸ்ரீலங்காவின் பேரினவாத அரசோ,புலிகளோ மக்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளைச் செய்பவர்கள் யாராயினும் கண்டித்துத் தூமையிற் பதிவிட்டுள்ளோம். என்னவொரு தைரியமிருந்தால் அந்த மின்னஞ்சலை எமக்கு அனுப்பியிருப்பார்கள்?அதுவும் தூமையில் அவ்வறிக்கையைப் பிரசுரிக்குமாறு கேட்பார்கள்?
       மகிந்த தன் ஆட்சிக்காலத்தில் செய்தவை நேர்மையும் நியாயமானதுமான செயல்களா?
 வன்னி யுத்தத்தின் வெற்றியையே தனது பெரிய கெட்டிக்காரத்தனமெனச் சிங்கள மக்களிடம் உலகநாடுகளிடம் மார்தட்டும்  அவரது  ஆட்சிக்குப்பரிந்து பேசினால் அவையனைத்தும் எம்மாலும் ஏற்றக் கொள்ளப்படுவதாகத் தானே அர்த்தம்.
   வன்னியுத்தத்தில் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசத்தினுள் செல்லுமாறு இராணுவம்  உத்தரவிட்டு, இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருப்பதை நன்கு அறிந்து கொண்டும் கூட்டமாகக் கொன்றழிக்கப்பட்டனர்.கஞ்சிக்காகவும் பாலுக்காகவும் வரிசையில் நின்ற மக்களைத் தெரிந்தே  ஸ்ரீலங்கா அரசின் படைகள் எறிகணைகளை ஏவிக்கொன்றதை மறுக்கமுடியாது. தற்காலிக வைத்தியசாலைகள் என அறிவித்தும் அடையாளப்படுத்தியும் மருத்துவம் செய்த இடங்களைக் குறிபார்த்து   எறிகணைகள் பொழிந்தன. இவை மகிந்தாவின் கட்டளைகளைச் சிரமேற் கொண்ட ஆயுதப்படைகளின் கொடும்போர் புரிதலினால் நடைபெற்றவைகளே.
  சில ஆயிரம் புலிகள்அழிக்கப்படவேண்டுமென்பதற்காக இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதும் ஊனப்படுத்தியதும் வாழ்வில் மறக்க முடியாத கொடும்நாட்களை நியாயமென்பீர்களா?
    மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வாக்களிக்க வேணடுமென்ற உங்கள் கோரிக்கையின் மூலம் நீங்கள் நிறுவுவது என்ன? அவரதுஆட்சியில் இராணுவம் படையெடுத்துக் கைப்பற்றிய பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவம் முகாம்களையும் காவலரண்களையும் வைத்துக் கொண்டு மக்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாகக் கண்காணித்துக் கொண்டிருப்பதும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவையா? புலிகள் என்ற சந்தேகத்திற் கைது செய்யப்பட்டு பல வருடங்களாகச் சிறைகளில் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள் அந்த ஜனநாயக ஆட்சியில் விடுவிக்கப்பட்டனரா?
    புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது தான்.ஆனால் இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் முகாம்களை விட்டு வெளியேறாமல் முகாம்களினுள் அகதிகளாகப் போரின் வடுக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்று கூட மகிந்தவுக்கு வாக்களிக்கக் கோருகிறீர்களே.
   புலிகளாற் கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வலிந்து ஆயுதங்கள் திணிக்கப்பட்டதுமென மக்கள் கஷ்டங்களை அனுபவித்ததும், புலிகளை அழிக்கவென அரசு ஈவிரக்கமின்றி மக்களைக் கொன்றதும் எப்போதும் கண்டிக்கவும் வெறுக்கவும் வேண்டியவையே.
    யுத்தத்தில் வென்ற, எதிரித் தலைகளைக் கொன்ற, பூரிப்பில் தண்ணீர் கொடுத்தும் சாப்பாட்டுப் பார்சல்களை வீசியெறிந்தும் கருணை காட்டியதைப் போற்றுவதென்றளவில் இருக்கிறீர்கள்.மறைமுகமாக மகிந்த அரசு இனவழிப்பை ஒடுக்குமுறைகளைச் செய்யவில்லை என்கிறீர்கள்.

             அதற்காகச் சரத்பொன்சேகாவை ஆதரிக்கவும் முடியாது.இறுதியாக நடை பெற்ற மக்களின் அழிவுகளுக்கு அவரது பங்கு அளப்பெரிது.ஒடுக்கப்படும் மக்களுக்கான ஒரு தலைமையைக் கண்டடைவது இலங்கைத்தீவின் மக்களுக்கு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும் பெருந்துயராகும்.

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: கட்டுரைகள்