தூமை

வல்லினம் நவம்பர் 2009 இதழ்

நவம்பர் 3, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

எழுத்தாள/வாசக நண்பர்களுக்கு வணக்கம்.

வல்லினம் நவம்பர் 2009 இதழ்  (31/10/2009) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இதழில்…….

கட்டுரைகள் :

*சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் – ஓர் அறிமுகம்

 *இல‌ங்கை – நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்

 * இழைகள்

பத்திகள் :

*வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

*இந்திரா டீச்சர்

 *தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்

சிறுகதைகள்:

*அல்ட்ராமேன்

 *இரண்டாவது கிறுக்கு சித்தப்பா

மேலும், தொடர்கள் மற்றும் கவிதைகள்.

  www.vallinam.com.my

- வல்லினம் ஆசிரியர் குழு-

→ Leave a Commentபகுப்புகள்: அறிவிப்புகள்

என்னையும் வளர்த்தனர்

நவம்பர் 1, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

யாழ்ப்பாணத்தில்
பொமரேனியன் குரைக்கும் போது
எங்கள் பணக்காரத்தனஞ் சத்தமிட்டுச் சொல்லப்படும்.
 
எலும்பும் சதையுமாகச் சாப்பாடு
சீமெந்தும் கம்பியுமாக
வீடு போல கூடு
சடைசடையாகத் தொங்கும் ஷம்போவின் பளபளப்பு.
 
பக்கத்து வீட்டு நாயின் குரல் கேட்டு
மதில் பிராண்டும்
வீதிப் புழுதியில் விளையாடும் ஒல்லி நாயிடம் போக(த்)
தாவித்தாவிக் கம்பிக் கதவிற் குதிக்கும்.
 
அப்போதெல்லாம்,
பக்கத்து நகருக்கு(க்)
கழுத்திற் சங்கிலி கட்டிக் கூட்டிப்போவோம்.
அது இன்னொரு பொமரேனியன் வீடு.

சில நாட்களில் கொண்டு வரப்படும்
பின் பொமரேனியன் குட்டிகளாகப் போடும்.
 
இப்போது நாம்
ஐரோப்பிய நகரமொன்றில்,
நாய் வளர்ப்புக்கு இடமில்லை வீட்டில்.
 
வயசு வந்த பெண்பிள்ளை என்னை
வீட்டில் வைத்திருக்கப் பயமாம்.
பக்கத்து நாட்டிலுள்ள
மச்சானுக்குக் கல்யாணங் கட்டி வைக்க(க்)
கலப்பில்லாத என்னினத்துக் குழந்தைகளை(ப்)
பெற்றெடுக்கின்றேன்.
 
தர்மினி
(முற்றம் சஞ்சிகை)

→ Leave a Commentபகுப்புகள்: கவிதைகள்

மிதக்குது மனது

அக்டோபர் 30, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

தர்மினி

சுழன்றடிக்கும் காற்றில்
மிதந்து செல்லும் சருகு போல
காதல் எனக்குள்ளே
மிதந்து கொண்டேயிருக்கிறது.

திருமணம்
குழந்தைப்பேறு
வயோதிபம்
எதுவுமே மிதக்கும் என் காதலை
அமிழ்த்தி விடவில்லை.
அது
தீர்ந்து போகாமல் மிதக்கின்ற வேளைகளிலெல்லாம்
திருமணமும் வரைமுறையும்
உடற்தளர்வும்
மனச்சுமையும்
என்னைக் கடந்து விடுகின்றன.

நன்றி: ஊடறு

→ Leave a Commentபகுப்புகள்: கவிதைகள்

திருமறைக்கலாமன்றம்

அக்டோபர் 28, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

→ Leave a Commentபகுப்புகள்: அறிவிப்புகள்

28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு…

அக்டோபர் 25, 2009 · 2 மறுமொழிகள்

ஐரோப்பா, லண்டன்  சுவிஸ் ஆகிய இடங்களில் தொடர்ந்து  நடைபெற்று வருகின்ற  புகலிடப் பெண்கள் சந்திப்பின் 28வது தொடர் ஒக்ரோபர் 10ஆம் திகதி சுவிஸ் உஸ்ணாக்கில் நடைபெற்றது.

image2

Image1

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பெண்கள், படைப்பாளிகள், பெண்ணியவாதிகள்,  ஓவியைகள் என  ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்து பெண்கள்  பங்கு பற்றினார்கள்.  றஞ்சி, தில்லை, நளாயினி, பிரபா ஆகியோரின்  ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றது. 4 வது தடவையாக சுவிஸில் நடைபெறும் பெண்கள் சந்திப்பு பற்றி குறிப்பிட்டு   றஞ்சி வரவேற்புரையை நிகழ்த்தினார். சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலண்டனிலிருந்து வருகை தந்திருந்த ஓவியை அருந்ததியின் ஓவியங்கள் சிலவும், கவிதைகள் சிலவும்  மண்டபத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன அவற்றில் நம் ஊர்த் திண்ணையின் பயன்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்த   ஓவியங்கள் அங்கு வந்திருந்த பெண்களின் கவனத்தைப் பெற்றதோடு அப் பெண்களின் பழைய நினைவுகளையும் மீட்டன.

arunthathy2010

(என் மதிந்த வயிற்றின் மேல்
கை வைத்து உன்னை
உணர்ந்து பார்க்கையில் – நான்
என்னை மறப்பேன் – உன்
ஒவ்வொரு அசைவும் எனக்குப் பாடம்

காலையில் கை அசைப்பதும்
மதியம் படுத்துறங்குவதும்
மாலையில் குட்டிக்கரணம் போடுவதுமாய்- நீ
என் கருவறையில் அடிக்கும் லூட்டிகள்
ஆயிரம்… ஆயிரம் – அந்த
பத்து மாதங்கள்
எனக்கும் உனக்குமான
பிரத்தியேக கணங்கள்-
எமை
பிரிக்க முடியாப் பொழுகள்
ஒரு நாள்,
நீ ஓ என கத்திக்கொண்டு
வெளியில் வருவாய்!
அந்தப் பொழுதுக்காய்
நான் காத்திருப்பேன்.)

(அருந்ததி – லண்டன்)

(மண்டபத்தில் தொங்கிய   கவிதை ஒன்று)

28வது தொடரின் முதலாவது நிகழ்வை உச்ணாக் மாவட்ட பிறமொழித் தாய்மாருக்கான பெண்கள் அமைப்பின் தலைவி எரிக்கா மாயர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

சுவிஸிலுள்ள பிறமொழித் தாய்மார்களின் வாழ்வியல் மீதான தகவல்களை அறியத் தந்ததோடு இவ்வாறான தாய்மார்கள் எதிர்கொள்ளும் மொழிரீதியான  சிக்கல்களையும் பாலியல் ரீதியான பிரச்சினைகளையும் அதே நேரம் கலாச்சார ரீதியாக அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளையும் எடுத்துக் கூறினார். சுவிஸ் அரசாங்கம்   வெளிநாட்டு தாய்மார்களுக்கு உதவி புரியவும் அவர்கள்  இந்நாட்டில் வாழ்வதால் டொச் மொழியை கற்றுக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும் என்றும் அதனால் அவர்களும் அவர்கள் குழந்தைகளும் பயனடைவார்கள் என்றும் அதற்காக தாங்கள்  பல உதவிகளை செய்ய காத்திருப்பதாகவும் அதற்கு   intergration    என்ற  அமைப்பின் மூலம் சுவிஸ் அரசாங்கம்  பல  செயற்திட்டங்களையும் ஆரம்பித்திருப்பதாகவும் எடுத்துச் சொன்னதோடு  அதற்கு பெண்கள் சந்திப்பு உதவ முடிந்தால் அதை தான் வரவேற்பதாகவும் கூறினார்.  அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட பெண்கள்  தமது கருத்துக்களை   எரிக்கா மாயருடன் பகிர்ந்து கொண்டனர்  அவரின் உரையை யேர்மனியிலிருந்து வந்திருந்த தேவா மொழிபெயாத்திருந்தார்.

அடுத்த நிகழ்வாக  யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பெண்களும் அபிவிருத்தியும் என்ற நிறுவனத்தின் நிலையப் பொறுப்பாளர்   சரோஜா சிவச்சந்திரன்  இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் பாதிப்புகளும், விளைவுகளும், பெண்களின் எதிர்காலமும் என்ற தலைப்பிலும், வடக்கு கிழக்கு பெண்களின் இன்றைய நிலவரம் பற்றியும் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த யுத்தத்தால் ஏற்பட்டுள்ள இடப்பெயர்வுகள் முழச் சமூகத்தையுமே பாதிப்புக்குளாக்கியுள்ளது. மீண்டும் சென்று வாழ முடியாமல் நிலங்களும் தரைகளும் கண்ணி வெடிகளால் நிறைந்துள்ளன இந்த கொடிய யுத்தத்தால்  குடும்பத்தின் பல அங்கத்தவர்களை இழந்துள்ளோம். அங்கவீனர்களாகியுள்ளோம். பல பெண்கள் கணவனையிழந்து, வாழ்வையிழந்து, குழந்தைகளையிழந்து மன நோயாளிகளாக உள்ளனர். அழிந்து செல்லும் எமது சமூகத்தை அழிவில் இருந்து பாதுகாக்க நாம் விரும்புகிறோம். முற்றும் முழுதாக போரினாலும், முகாம்களிலும் அதே நேரம்  பொருளாதார பலமிழந்த நிலையிலும் பிள்ளைகளின், பெண்களின் எதிர்காலம் அடைபட்டே உள்ளன.

இவ்வாறு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் இழப்பின் துயர்களை சந்தித்துள்ளனர்.  எதை நாம் கூறுவது ஆழமான எங்கள் வலிகளின் கோடுகள் இவை.  மனித உரிமைகள் மறுக்கபடாமல் எமது மொழிக்கான உரிமையும் மனித உறவுகளுக்கான மதிப்பும் பயம் இல்லாது வாழும் சூழல் போன்றவை முக்கியமானது. பெண்களின் சுயாதீனமான வாழ்க்கையை இல்லாதொழிக்கும் ஒரு கருவியாகவே இந்த யுத்தம் தொடர்ந்துள்ளது. சிறுமியர் நிலைகளை மேலும் நோக்கின் குடும்பத்தில் பெற்றோரை இழந்த சிறுமியர் குடும்பத்தின் சுமைகளை சுமக்க வேண்டியவராகின்றனர். இதனால் பெரும்பான்மையான  சிறுமியரின் கல்வி நிலை பாதிக்கப் படுகின்றது. இச் சிறுமியர் தனக்கு கீழ் உள்ள தம்பி தங்கையரை பராமரிக்க வேண்டியுள்ளதால் இடைநடுவில் கல்வியை இழக்கின்றனர். வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பிரச்சினைகள் அரசியல் நோக்கில் அணுகப்படுவதால் ஆண்களது இயல்பான சவால் அணுகுமுறை பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக வலுப்படுத்துவதாகவும், விரிவுபடுத்துவதாகவும் காணப்படுகிறது. பொருளாதார நிலையில் நின்று பார்ப்பின் யதார்த்தத்தின் பயங்கரத்தை புரிந்துகொள்ள முடியும்.

அதுவும் பெண்நிலை நோக்கிலான பொருளாதார அணுகுமுறை முக்கியம் தொடர்ச்சியான இழப்புக்களை எவராலும் எதிர் கொண்டு வாழ்வது என்பது முடியாத காரியம் வடக்கு கிழக்கு பெண்களின் வாழ்நிலை கணவனையிழந்த பெண்களின் வாழ்நிலை என்பன இன்று பேசப்படாத பொருளாகி விட்டன. நாம் எம்மால் இயன்ற உதவிகைள இப் பெண்களுக்கு செய்ய முன் வரவேண்டும். பொருளாதார ரீதியாக இவற்றை நாம் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார். சரோஜா சிவச்சந்திரனின் நிகழ்வுக்கு தில்லை தலைமை தாங்கினார்.

இந் நிகழ்வைத் தொடர்ந்து நந்தினி தலைமையில் இடம்பெற்ற அமர்வில் பிரான்சிலிருந்து வருகை தந்திருந்த பெண்ணியச் செயற்பாட்டாளர் பரிமளா வாடகைக்கு விடப்படும் கருவறைகள்  என்ற தலைப்பின் கீழ் தனது கருத்தை முன்வைத்தார். இந்தியா உலகக் குழந்தைகளை தனது நாட்டில் உற்பத்தி செய்வதில் முன்னேறி வருகிறது. ((Baby made in india )  பெண்கள் மீதான சுரண்டலின்  இன்னொரு வடிவம் தான் பெண்களின் கருவறைகள் வாடகைக்கு விடப்படும் பிரச்சினை.  இன்று பெண்கள் மேலான சுரண்டல் அவர்களுடைய கருவறைகளை அவர்களுடைய கணவன்மார்களே வாடகைக்கு விடும் அவலம்.

வெளிநாடுகளில் பரவலாகவும்  உள் நாடுகளில் ரகசியமாகவும்  செயற்கை முறையில் குழந்தை உருவாக்குவதில் எண்ணற்ற வெளிநாட்டவர்கள் வந்து இந்தியாவில் குவிகிறார்கள். இணையம் மூலமாகவும் வாடகை கருவறைகள் பேரம் பேசப்படுகின்றன. ஒரு குழந்தையை உருவாக்குவது பல சிக்கல் உடையது.  ஓரினச் சேர்க்கை தம்பதிகளை இப்பிரச்சினையிலிருந்து  தவிர்த்து விடுகின்றனர். வாடகைத்தாயின் கருவறையில் வளரும் அக் குழந்தையின் மரபணுக்களும் இரத்தமும் பெற்றோரை சார்ந்தது. (விந்தையும் கரு முட்டையையும் கொடுத்தவர்களின் மரபணுக்களையே குழந்தை கொண்டிருக்கும்.) இரு பெண்கள், ஒரு ஆணின் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்கின்றார்கள். எங்களுடைய சமுதாயத்தில்  ஒரு பெண் செய்யக் கூடிய மிக உயர்ந்த சேவைதான் வாடகைக்கு கருவைறகள் விடுவது என இதில் ஈடுபட்டுள்ள டாக்டர் நயனா பட்டேல் பெருமிதம் கொள்கிறார்.

ஆனால் இதில் உள்ள  அரசியல், ஆதிக்கம், பெண்களின் மன உளவியல் என்பன புதைக்கப்பட்டு விடுகின்றன. வறுமையில் உள்ள பெண்களை பலவந்தப்படுத்தும் ணவன்மார்கள் 4000 யூரோவுக்கு தமது மனைவிமாரின் கருவறைகளை வாடகைக்கு விடுகின்றனர். அப்பெண்  9 மாதம் தனது வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு ஒட்சிசன் தண்ணீர் சத்து என அனைத்தையும் கொடுத்து ஒரு வேலையாக நினைத்து குழந்தையை சுமக்கவில்லை என வாடகைத்தாயின் பேட்டியில் அறிய முடிகிறது. 90 வாடகைத்தாயின் மூலம் 120 குழந்தைகளை பிறப்பித்துள்ளார்கள் இதில் 50 வயதுடைய பெண்ணும் அடக்கம். வாடகைக்கு விடப்படும் கருவறைகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றன எனக் கூறும் ஊடகவியலாளர்கள் குழந்தையில்லாத வெளிநாட்டவர்கள் தங்கள் குழந்தைக்கனவை இந்தியாவில் நனவாக்கி கொண்டு இந்திய குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்கிறோம். என்ற வாசகத்தை உச்சரிக்க வாடகைக் கருவறைகளுக்கு ஒப்பந்தம் செய்யும்  வைத்தியர்களது கட்டாப்பெட்டி நிறைகிறது என்கின்றனர்.     இப்பிரச்சினையை வீடியோ  ஆவணப்படமாக காட்டியதோடு  பிரஞ்சில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து தனது கருத்துக்களை  முன் வைத்துப் பேசினார் பரிமளா.

அடுத்த நிகழ்வாக  இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்  என்ற  தலைப்பின் கீழ் தில்லை தனது கருத்தை முன்வைத்துப் பேசினார். இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் நலன்கள் குறித்த விடயங்களும் இன்று கூர்மையாக கவனிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது.
இன்றைய அடையாள அரசியலின் பிரத்தியேகங்களை அடையாளங் காண்பதிலும், பிரக்ஞைகொள்வதிலும் எங்கு தவறிழைத்திருக்கிறோம் என்பதை சுயவிமர்சனம் செய்யவேண்டியிருக்கிறது. ஆணாதிக்க கட்டமைப்பு அதன் சித்தாந்தம், அதன் புனைவு அதன் அத்தனை ஆதிக்க கட்டுமானங்களையும் தகர்த்தெறிவதற்கான போராட்டத்தை மேற்கொள்ளும் அதேவேளை ஆணாதிக்கத்திற்கு அடுத்ததாக பெண்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்காகவும் சமகாலத்தில் நிற்கவேண்டிய தேவை உள்ளதை சுட்டிக்காட்டி  மிக அழகாக தனது கருத்தை முன்வைத்தார்.  தில்லையின் உரையாடலுக்கு தேவா தலைமை தாங்கினார். (தில்லையின் இக்கட்டுரையை ஊடறு, மற்றும் புகலியில்  முழுமையாக வாசிக்கலாம்.)

மல்லிகா தலைமையில் நடைபெற்ற அமர்வில் பிரபா   கணவனை இழந்த பெண்களின் தற்போதைய நிலைமைகள், எதிர்கால வாழ்வு குறித்த தனது கருத்துக்களை முன்வைத்தார்

விதவை என்ற சொல்லில் தனக்கு உடன்பாடு இருப்பதால் தான் விதவைகள் என்ற சொல்லையே பாவிப்பதாகவும் கூறிய பிரபா தனது கருத்துக்களை முன்வைத்தார். தொடரும் யுத்த அவலம் கணவனையிழந்த பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தே செல்கின்றது. வலிகாமத்தின் ஆனைக்கோட்டை, சாவற்காடு கிராமத்தில் மட்டும் ஒட்டு மொத்தப் பெண்களில் 30 சதவீதமானவர்கள் கணவனையிழந்த பெண்கள். அவர்களுக்கு எந்தவொரு தரப்புமே உதவுவதுமில்லை. அதே போல் கிழக்கில் 45,000க்குத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

பெண்களுக்கான உதவிகளுக்கென பல அமைப்புக்கள் செயற்படுகின்ற போதும் அவர்கள் கணவனையிழந்த பெண்கள் தொடர்பில் கூடிய கரிசனை எடுப்பதாகத் தெரியவில்லை. இடையிடையே கணவனையிழந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்களையோ 100 ரூபா பிச்சைக்காசு வழங்குவதோடு மட்டும் தமது பணியை நிறுத்திக் கொள்கிறார்கள். கணவனையிழந்த பெண்களுக்கு  நீண்ட காலத்தில் உதவக் கூடியவாறான எந்தவொரு உதவியும் இப் பெண்கள் அமைப்புகளிடமிருந்து கிடைப்பதாகத் தெரியவில்லை.  பெரும்பாலான கணவனையிழந்த பெண்கள். மோசமான உளவியல் நோய்களிற்கு உள்ளாகியுள்ளனர். என்றும்  எடுத்துக் கூறினார் அவரின் கருத்துக்களை தொடர்ந்து கலந்து கொண்ட பெண்கள் கணவனையிழந்த  பெண்களுக்கு  புலம்பெயர் நாடுகளில் இருந்து எந்த வகையில் நலன்புரி உதவிகளை வழங்குவது எனவும்  அவ்வாறான உதவிகளை வழங்குவதிலுள்ள நன்மை தீமைகளும் ஆராயப்பட்டதுடன் சில  நடைமுறைக்குச் சாத்தியமான சில விடயங்களையும்  சில பெண்கள் முன்வைத்திருந்தனர். உண்மையில் இது வரவேற்கப்பட வேண்டியதொன்று என்றும் தனிப்பட்டரீதியாகவோ அல்லது குழுரீதியாகவோ இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காலம் என்றும் அவற்றிற்கான செயற்திட்டங்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

19 வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்ற பெண்கள் சந்திப்பானது புகலிடச்சூழலில் ஓரளவுக்கேனும் பெண்கள் ஒன்றிணையும் ஒரு மாற்றுக்கருத்திற்கான தளமாக உள்ளது. வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளையும், தனித்துவமான பிரத்தியேகங்களையும்  கொண்ட பல பெண்கள் இச்சந்திப்பில் பங்கு பற்றி தமது கருத்துக்களை முன்வைத்தமை வரவேற்கத் தக்கது. பெண்கள் சந்திப்பு ஒரு சில பயிற்சிப்பட்டறைகளையும்  அதாவது ஓவியம்,  நாடகம் போன்றவற்றையும்  நடத்தலாம் என்ற கருத்துக்களையும் கலந்து கொண்ட பெண்கள் முன்வைத்ததோடு  பெண்கள் சந்திப்பு அதை பாசீலிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.  இறுதியாக விஜி நன்றியுரை கூறினார்.

அடுத்த 29வது பெண்கள்  சந்திப்பு யேர்மனியில் நடைபெற உள்ளது.

தொகுப்பு: றஞ்சி, தில்லை (சுவிஸ்)

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: நிகழ்வுகள்

மேராக் துறைமுக அகதிகளின் கோரிக்கை

அக்டோபர் 24, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

மேராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 255 அகதிகளின் கோரிக்கை.

         கடந்த அறுபது வருட காலமாகச் சிங்கள பௌத்த இனவாத இலங்கை அரசின் அடக்குமுறைக்குள்ளாகி வரும் தமிழ் பேசும் மக்களுக்குச் சார்பாக இயங்க உலகின் எந்த அரசும் சரியான முறையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து மனித உரிமை மீறல்களைச் செய்து வந்த இலங்கை அரசின் இனவாதத்தின் உச்சக்கட்டமாக அண்மையில் நடைபெற்ற யுத்தம் ஆயிரக்கணக்கான உயிர்களையும் உடைமைகளையும் காவு கொண்டுள்ளது.

          குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள். பலர் தமது ஒட்டுமொத்த குடும்பத்தையுமே இழந்துள்ளார்கள். கல்வி உரிமைகளை இழந்துள்ள சிறுவர்கள், தம் வாழ்வியல்புகளை இழந்த பல உறவுகள் என்று தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காது.

                            யுத்தம் முடிவுற்றதாக அரசு கூறிவரும் நிலையில் 250 000க்கும் மேற்பட்ட மக்கள் இன்றும் அகதிமுகாம் என அழைக்கப்படும் சித்திரவதை முகாம்களில் படும் கோரக்காட்சிகளை கண்டு உலகமே இன்று அதிர்ந்துபோயுள்ளது. கண்டனங்களைத் தெரிவிக்கிறது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் இன்றும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் அழிக்கப்படுகின்றார்கள்.

                இவ்வாறாக உறவுகளையும் வாழ்வியல்புகளையும் இழந்து பாதிப்புற்ற நாம் எம் உயிரையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கோடு இலங்கை நாட்டை விட்டு வெளியேறி அகதி அந்தஸ்து மற்றும் வாழ் உரிமைகளை வழங்கும் நாடு  அவுஸ்திரேலியா என்ற நம்பிக்கையில் அந்நாடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது கடந்த 11-10-2009 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் இந்தோனேசியக் கடற்படையினரால் தடுக்கப்பட்டு எமது பயணம் திசைமாற்றப்பட்டு இந்தோனேசியாவில் அமைந்துள்ள மேராக் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளோம். ஆறு மாதக்குழந்தை முதல் ஒரு கர்ப்பிணிப்பெண் உட்பட அறுபத்தாறு வயதுள்ளவர் வரை கடலில் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டு தத்தளித்துக்கொண்டிருக்கிறோம். கடந்த இரண்டு கிழமைகளாக உலகின் ஒரு நாடாவது எம்மை ஏற்றுக்கொள்ளாதா என்று காத்திருக்கிறோம்.

        பல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழக்கூடியதாகவும் மற்றும் 400க்கும் மேற்பட்ட மொழிகள் பழக்கத்தில் உள்ளதாகவும் இருக்கும் இந்தோனேசியாவில் சிறுபான்மை மொழிகள்கூட தேசிய மொழியாக இருப்பது போன்ற ஜனநாயக முறைகள் பழக்கத்தில் உள்ளதை அறிந்து எமது ஜனநாயக உரிமைகளும் மதிக்கப்படும் என்று நம்புகிறோம். எவ்வித குற்றங்களையும் புரியாது அகதிகளாக வந்த எம்மை தடுப்பு காவலில் வைக்க முயல்வது எம்மை மட்டுமல்லாது எமக்கு ஆதரவு தரும் தமிழ் பேசும் முழுச்சமூகத்தையுமே துயரத்துக்குள்ளாக்கியுள்ளது.

         சொந்த நாட்டிலேயே அகதிகளாகி உரிமைகள் மறுக்கப்பட்டு உறவுகள் உடமைகளை இழந்து உயிரை மட்டும் வைத்துக்கொண்டு நாம் தேடிச்செல்வது எம்மை தடுப்பு காவலில் வைக்காது எமது இளையோரின் கல்வி,  உயிருக்கு உத்தரவாதம் மற்றும் இதர உரிமைகளை வழங்கக்கூடிய ஒரு நாட்டையே.

      ஏதாவது ஒரு அரசு எமது துயர நிலையை அறிந்து ஜக்கிய நாடுகள் சபை மூலம் அல்லது ஏதாவது ஒரு முறையில் ஆவனை செய்யும்வரை நாம் கப்பலை விட்டு வெளியேற மாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம். எமது தேவைகளையும் அவலத்தையும் உணர்ந்து எமது உரிமைகளை வழங்கக்கூடிய அகதி அந்தஸ்து வழங்கும் ஒரு நாடு எம்மை ஏற்றுக்கொள்ளும் என்பதில் நாம் நம்பிக்கையும் உறுதியும் கொண்டு கப்பலிற் காத்திருக்கிறோம்.

   இந்தோனேசிய, அவுஸ்திரேலிய வாழ் மக்கள் மற்றும் அங்குள்ள தொழிற் சங்கங்கள் மனித உரிமை அமைப்புக்கள் பெண்கள் அமைப்புக்கள் தயுவுசெய்து எமது துயர் அறிந்து எமது கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றோம்.

*     மனித உரிமைக்காக குரல்கொடுக்கும், ஒடுக்குமுறைக்கு எதிராக இயங்கும் உலகெங்கும் இருக்கும் அமைப்புக்கள் எமக்கு முடிந்தளவு உதவி செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். 

*     தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் வாழும் எமது சகோதர சகோதரிகளிடமும் எம்மைப்போலவே இலங்கை அரசின் அடக்குமுறைக்கு பலியாகி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களை எங்களுக்காக குரல்கொடுக்கும்படியும் உரிமையுடன் கேட்டுகொள்கின்றோம். 

       எமது குரல் கேட்கப்படாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எமக்கு ஆதரவு கோரி வரும் திங்கள் 2-10-2009 அன்று கப்பலில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளோம். எமக்கு வேறுவழி தெரியவில்லை. நாம் எமது இந்தக் கோரிக்கையைத் தமிழ் ஒருங்கமைப்பு மூலமாகவும், தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு மூலமாகவும் உங்களுக்கு அனுப்பிவைத்துள்ளோம். எமது துயரக்குரலுக்கு தயவுசெய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

→ Leave a Commentபகுப்புகள்: அறிவிப்புகள்

முகாம்களை மூடுங்கள்

அக்டோபர் 24, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

சிறிலங்கா அரசின் மனிதவுரிமை மீறல்கள் மற்றும் 250 000க்கும் மேற்பட்ட தமிழ்மக்களை அகதிமுகாம்களில் முட்கம்பி வேலிகளிடையில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டித்தும் அம்முகாம்களை மூடவேண்டுமென்ற கோரிக்கையுடன் கண்டனப் பொதுக்கூட்டமொன்று ஒக்ரோபர் 17இல் இலண்டனிலுள்ள குயின்ஸ்மேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தமிழர் ஒருங்கமைப்பு எனும் அமைப்பினால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
              இக்கூட்டத்தில் உரையாற்றிய சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் பீற்றர்ரப்பே மற்றும் தமிழர் ஒருங்கமைப்பின் சர்வதேச இணைப்பாளர் ஆகியோர் உரைகளைக் கீழுள்ள இணைப்பிற் காணலாம்.

http://www.youtube.com/user/TheSocialistParty#p/u/0/6jOR8wxL2dk

→ Leave a Commentபகுப்புகள்: நிகழ்வுகள்

பெயரிலி இலையாய்

அக்டோபர் 23, 2009 · கருத்துத் தெரிவிக்கவும்

மோனிகா

மழைமறந்த பாறைகளின் முகடொன்றில்

இன்னும் ஒரு விடியலை நோக்கி காத்திருப்போம் நாம்.

தேநீர் கோப்பைகளுக்கு நடுவே

வேர்களுடன் இடம்பெயர்ந்தலையும் நம் கையில்

மீண்டும் கிடைக்கும் ஒரு துண்டு வானம்.

கோலியாத்துகள் பூமியைத் தூளாக்கி

புசித்துக் கொண்டிருக்கையில்,

சாத்தானின் தூதர்கள் எளியோரின் சதையைச்

சிதைத்து எக்காளமிடுகையில்

நிதமும் நாம் வெள்ளக்காட்டில் மிதந்து போகும்

ஒரு பெயரிலி இலைபோல

காத்திருப்பை மட்டுமே

கலகமாய்க்கொண்டு,

விடியல், தேநீர்க் கோப்பை,

வெள்ளக்காடென்று சொல்லிக்கொண்டு…

→ Leave a Commentபகுப்புகள்: கவிதைகள்

காதுகளுக்குத் திகட்டாத பூவண்ணம்

அக்டோபர் 21, 2009 · 2 மறுமொழிகள்

-தர்மினி

                 நான் உலக இசை பற்றிய அறிவு எதுவுமற்றவள்.தமிழ்த் திரைப்படப்பாடல்களின் எளிய இரசிகை.எனக்கு இராகங்கள்,தாளங்கள் கண்டுபிடிக்கத் தெரியாது.ஆனால் என் காதுகள் முப்பது வருடங்களாகத் திகட்டாமல் ஒரு பாடலைப் புதிதாகக் கேட்பதைப் போல இரசிப்பதைப் போல ஆகாஆகா என்று ஆனந்தித்துக் கேட்கின்றன.என் மனது உற்சாகமும் பரவசமுமடைகின்றது.இவ்வகை உணர்வுகளைப் பல பழைய புதிய பாடல்கள் தருகின்றன என்பதை மறுக்கமுடியாது.ஆனாலும் இந்தப் பாடலுக்கு ஈடிணையாக எப்பாடலையும் என்னால் சொல்லவோ அனுபவிக்கவோ இயலவில்லை.அழியாதகோலங்கள் திரைப்படத்திலிடம்பெற்ற -பூவண்ணம் போல நெஞ்சம் …….என்ற மனதை விட்டழியாத பாடல் தானது.

                          பள்ளிக்கூடக் காலத்தில் ஆசிரியர் வராத பாட நேரங்களிலெல்லாம் பாட்டுப்பாடுவது,சினிமாக்கதை சொல்வது,கதைப்புத்தகங்களை வாசித்துக் கதை சொல்வது என்று குழுக்களாகப் பிரிந்து வகுப்பிற் பரபரப்பாக இருப்போம். நான் புத்தகங்களை மௌனமாக இரசித்து வாசிக்கவே விரும்புவேன்.எங்கள் வகுப்பில் ரமணிச்சந்திரனின் கதைகள் மட்டுமே சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன.அக்காலத்தில் ஜெயகாந்தன்,ஜானகிராமன்,நா.பா,  ராஜம்கிருஷ்ணன்,பாக்கியம்ராமசாமி,காண்டேகர் போன்றவர்களின் புத்தகங்களைப் பிய்ந்து போகப் போகப் படித்து விட்டிருப்பேன்.ஆகவே ரமணிச்சந்திரனின் கதைகளைச் சொல்லும் குழுவை ஐந்து சதத்துக்குக் கூட மதித்து அந்தப் பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை. அதே போல திரைக்கதைக் குழுவும் ஒத்துவராது. நண்பர்கள்,சின்னத்தம்பி இரண்டு படங்களும் எங்கள் வகுப்பில் நூறுநாட்கள் தாண்டி ஓடிக் கொண்டிருந்தவை.ஆகவே நானும் இன்னும் இரு நண்பிகளுமான மிகச்சிறு குழுவொன்று மெதுவாகப் பாடல்களைப் பாடும். ஆனாலும் நாங்கள் ஒற்றுமையானவர்கள். சின்னத்தம்பி படம் ஓடிக் கொண்டிருக்கும் குழுவிடமிருந்து விண்ணப்பம் வரும் -தூளியிலெ ஆட வந்த வானத்து மின்மினியே- அவர்களது கதையினிடையில் பாடச் சொல்லிப் கேட்கப்படும்.கிழக்குவாசல்  படம் ஓடிக் கொண்டிருந்தால் -பச்சைமலப் பூவு நீ உச்சி மலத் தேனு -பாட வேண்டும். இப்படி எம் விருப்பங்களும் நேயர் விருப்பங்களுமாகப் பழைய புதிய, பலதும் பத்துமான பாடல்களைப் பாடும் போது கூட  பூவண்ணம் என்ற பாடலை வாயாற் பாட மாட்டேன். மற்றவர்களையும் பாடச்சொல்லிக்கேட்க மாட்டேன்.ஏன் அதன் பிறகும் ,இப்போது பிரான்சில் தோழர்களுடன் சேர்ந்து மதுவருந்தி மனமிழகி எல்லோரும் பாட்டுகளைப் பாடிக்கொண்டிருக்கும் போது  கூடக் கேட்பதில்லை.

                    சலீல்சௌத்ரியின் இசையின்றி என்னால் எவ்விதம் அப்பாட்டை இரசிக்க முடியும்? அப்பாடலின் இசையமைப்பாளர் பெரும் திறமையும் புகழும் பெற்ற வங்கமொழி இசையமைப்பாளர் என்பதை நான் நீண்ட காலங்கள் அறிந்திருக்கவில்லை.செம்மீன் திரைப்படத்தின் இசையமைப்பாளர் என்று அப்பெயர் தெரிந்திருந்தது. சில ஆண்டுகளின் முன்னர் தான் தமிழிலும் சிறந்த பாடல்களை இசையமைத்திருக்கிறாரென அறிந்து கொண்டேன். அவரால் இசையமைக்கப் பட்ட மற்றுமொரு எனக்கு மிகப் பிடித்த பாடல் -மாடப்புறாவே வா ஒரு தூது சொல்வேன் வா-.சலீல் சௌத்ரியின் இசைக்கோலங்கள் பற்றி எழுத்துகளால் சொல்லவே முடியவில்லை.அவற்றைக் கேட்டுணரத் தான் வேண்டும்.
                                             திரைப்படங்கள் பார்ப்பதை வெறுப்பவர்கள்,பொறுமையற்றவர்கள் இரசிக்கவே முடியாதென்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் திரைப்படப்பாடல்களை இரசிக்காதவர்கள் இருப்பார்களா? இப்பாடல்கள் கதையுடன் ஒன்றிக்க முடியாமல் இடைய+று செய்கின்றன. சம்பந்தமில்லாமல் திடீரெனப் பாடல்கள் ஆரம்பிக்கத் திடுக்கிடவேண்டியிருக்கிறது என்பது உண்மை தான். ஆயினும் காட்சியாக இரசிக்காதவர்கள் கூட இசையிலும் குரல்வளத்திலும் அதன் வரிகளிலும் இரசிகர்களாகிவிடுவார்கள். புதிய பதிய பாடல்கள் வெளியாகும் போது பலராலும் முணுமுணுக்கப் படும். பாட்டுகள் சிறிது காலத்திற் தேடுவாரற்று மறந்தவைகளாகி விடுகின்றன. சில பாடல்கள் மட்டும் பொதுவாகவே எல்லோருக்கும் பிடித்தவையாகி நிலைத்திருக்கின்றன. அழியாத கோலங்கள் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் சிறுவயதில் என் காதில் நுழைந்த அப்பாடலின் ……என்ன சொல்லை இவ்விடத்தில் எழுதுவதென யோசிக்கிறேன்.வழமையாகச் சொல்வது போல அப்பாடலின் இனிமை, இசை ,வரிகள்,குரல்கள் எனத் தான் சொல்லமுடிகிறது.ஏதோ ஒர் சுகானுபவம் அப்பாடலினூடாக நானடைந்தது. பூவண்ணம் போல நெஞ்சம் பாடலின் இசைமெட்டுகளை மனதில் வைத்து யாராலும் சிறப்பாகப் பாடமுடியாது என்பது என் அபிப்பிராயம்.அப்பாடலைக் கேட்கும் போது இலகுவாகப் பாடக்கூடியதாகத் தோன்றலாம்.ஆனால் ஒவ்வொரு வரியும் வேறுவேறு இசைக்கதவுகளைத் திறந்து செல்கின்றன.பின்னணி இசைக்கருவிகளில்லாமல் அப்பாடல் முழுமையடையாது. சலீல்சௌத்ரியின் நுட்பமான இசைப்பை அமைதியாகக் கவனித்துக் கேட்டால் எங்கெங்கோ அவை அழைத்துச் செல்கின்றன.பூவண்ணம் பாடலின் ஆரம்ப இசையே ஒரு பூந்தோட்டக் கதவைத் திறந்ததைப் போல சுகந்தமாக எழுகின்றது. கங்கைஅமரனின் பாடல் வரிகள் மிக இனிமையும் கவித்துவமுமாக இசையுடன் பின்னிப் பெருக்கெடுத்து ஒரு நதியாய் அலையாய் தென்றலாய்த் தடவிச் சலசலத்துச் செல்கின்றன.

-ஆற்றிலே ஆற்றங்கரை ஊற்றினிலே

அங்கு வந்த காற்றினிலே

தென்னை இளங்கீற்றினிலே -

என்ற வரிகளைப் பாருங்கள்.

           பி.சுசீலா,பி.ஜெயச்சந்திரனின் குரல்கள் மட்டுமே அதைப் பாட முடியுமென நினைக்கத் தோன்றுமாறு இருவரும் இழைந்து இணைந்து பாடியிருக்கிறார்கள்.ஆனால் அப்பாடலின் காட்சியைப் பார்த்தால் இவற்றை இரசிக்கமுடியாமலிருக்கும்.ஷோபாவும் பிரதாப்போத்தனும் இப்பாடலில் கடைசி இடத்தைப் பிடித்தவர்களாகவே எனக்குத் தோன்றுகின்றது. நீங்களும் இப்பாடலை மறந்திருந்தாலோ, கேட்காமல் இருந்தாலோ அல்லது பல காலங்களிற்குப் பிறகு கேட்கத் தோன்றுகிறது என்றாலோ கேட்டுப்பாருங்கள்.

 

 

 

 

→ 2 மறுமொழிகள்பகுப்புகள்: கட்டுரைகள்

சின்னபிள்ளைத் தனமாகவல்லவா இருக்கிறது!

அக்டோபர் 21, 2009 · 4 மறுமொழிகள்

-மோனிகா

                        காஞ்சிவரம் படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது வழங்கியபோது அது பற்பல சர்ச்சைகளை உண்டாக்கிற்று. இந்தி மொழிப்படமான “தாரே ஜமீன் பே”விற்கு கொடுத்திருக்கலாம் என்று பத்திரிக்கையாளர் ஞாநி கருத்து தெரிவித்தார். நடுவர்களில் மூன்று மலையாளிகளும் ஒரு தமிழரும் இருந்ததே இதற்கு காரணம் என்று சிலரும் எழுதினர்.

                 ஆனால், தற்போது வெளியான சிறந்த தமிழ் படங்களுக்கான மாநில விருதுகளை பார்த்தால் இவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று தெரியவில்லை. 2007ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்படம் “சிவாஜி” சிறந்த நடிகர் ரஜினிகாந்த், 2008ன் சிறந்த படம் “தசாவதாரம்”-சிறந்த நடிகர் கமலஹாசன் என்கிற வகையில் பட்டியல் நீள்கிறது. என்ன கொடுமை இது? இன்னும் எத்தனை காலம்தான் திரும்ப திரும்ப இவர்களே போட்டியில் பரிசு வாங்கிக் கொண்டிருப்பார்கள்? கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் எத்தனை மணிமணியான தமிழ் படங்கள் புது முகங்களுடனும், புதிய இளம் இயக்குனர்களாலும் இயக்கப்பட்டு வெளியாகியுள்ளன. பூ, சுப்பிரமணியபுரம் போன்றவை சிறு உதாரணங்கள். திரையுலக ஜாம்பவான்களாக வலம் வரும் ரஜினியும், கமலும் தங்களது வயதுக்கும், அனுபவத்திற்கும் அவர்களது பெயரில் பல பரிசுகளை நியமனம் செய்து மற்றவர்களை ஊக்குவித்தல்தானே அறம். இளம் தலைமுறையினருக்கு ஊக்கமும், உற்சாகமும் தேவை என்றுணராத கலைஞர்களாகிவிட்டார்களல்லவா அவர்கள்.

சிவாஜிகணேசனின் பெயரிலோ, எம்.ஜி.ஆர்பெயரிலோ மற்றும் சிலபல கலைஞர்களின் பெயரிலோ பரிசளிப்பது சிலை திறப்பதைக் காட்டிலும் பயனுள்ளதன்றோ?

→ 4 மறுமொழிகள்பகுப்புகள்: கட்டுரைகள்